Friday, March 6, 2020

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! ---1

CAA, NRC, NPR-க்கு எதிரானப் போராட்டம் இதுவரை அமைதியாக நடைபெற்றுவந்தது. இஸ்லாமியர்களையும் தாண்டி பிறர் மத்தியிலும் இப்போராட்டத்திற்கான ஆதரவு பெருகத் தொடங்கியது. இனிமேலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது முதலுக்கே மோசமாகி விடும் என்பதால் 24.02.2020 அன்று டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது திட்டமிட்டே வன்முறையை ஏவி உள்ளது சங் பரிவார பார்ப்பனக் கும்பல். வன்முறை மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதுதான் பார்ப்பனியம் கையாண்டு வரும் நடைமுறை. இதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடக்கின்றன.

டெல்லி ஷாகின்பாக் போல நாடெங்கிலும் பல இடங்கள் ஷாகின்பாக்குகளாக மாறி உள்ளன. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் ஷாகின்பாக்கை காக்கிச் சட்டைகளைக் கொண்டு சீர்குலைக்க முயன்று தோற்றுப் போன சங் பார்ப்பனப் பரிவாரங்களின் கைப்பாவையான எடப்பாடி கும்பல் அதன் பிறகு நீதிமன்றத்தின் மூலம் போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்று வருகிறது. இது ஏதோ இஸ்லாமியர்கள் பிரச்சனை என்பது போல வேடிக்கைப் பார்க்கிறது இந்துப் பெருஞ் சமூகம். இது இஸ்லாமியர்கள் பிரச்சனை மட்டுமல்ல இந்துக்கள் உள்ளிட்ட அனைவரின் பிரச்சனை என்பதை விரைவிலேயே இந்துப் பெருஞ் சமூகம் உணரத்தான் போகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூனறு நாடுகளிலிருந்து 31, டிசம்பர் 2014-க்கு முன்பு இந்தியாவிற்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்குவற்கு ஏற்ப CAA என்று சொல்லக்கூடிய 2019 குடியுரிமைத் திருத்தச் சட்டம் வழி செய்கிறது. மாறாக மேற்கண்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வந்துள்ள முஸ்லீம்கள் மற்றும் மியான்மர் ரோஹிங்கியா முஸ்லீம்கள், திபெத் பௌத்தர்கள், இலங்கை ஈழத் தமிழ் இந்துக்கள், பூட்டான் கிருத்தவர்கள், நேபாள இந்துக்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது.

அகதிகள் என்றால் அனைவரையும் சமமாகத்தானே கருத வேண்டும். அது என்ன ஒரு சிலருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது? மற்றவர்களுக்கு மறுப்பது? இது பாரபட்சமானதல்லவா? மதத்தின் பெயரால் பாகுபாடு பார்ப்பதாகாதா? சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதை மீறுவதாகாதா? இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 14,15,17,19 & 21 மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் பிரிவு 2 & 7 க்கு எதிரானது என்பதனால்தானே இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் CAA-வுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கின.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 11-ன்படி குடியுரிமை குறித்த சட்டங்கள்/விதிமுறைகளை அரசு வகுக்க முடியும் என்றாலும் அவ்வாறு வகுக்கப்படும் சட்டங்கள்/விதிமுறைகள் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற வகையில் இருந்தால் அவை அரசமைப்புச் சட்டம் பிரிவு 13(2)-ன்படி செல்லாது என்பது தெரிந்தும் CAA-வை கொண்டு வருவது இந்திய அரசமைப்பை அவமதிப்பதாகாதா? இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் உரிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம் என்றாலும் அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை பிரிவு 245 தெளிவு படுத்தினாலும் 14,15,17,19 & 21 ஆகிய இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராகத்தானே CAA சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

CAA-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையமும் தங்களை ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டுள்ளது. வழக்கை விசாரித்தால் சந்தி சிரித்துவிடும் என்பதால் விசாரணைக்கு எடுக்க அஞ்சுகிறது உச்ச நீதிமன்றம். சபரிமலை வழக்குதான் முக்கியம் என்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. இதன் மூலம் வழக்கை இழுத்தடித்து CAA, NPR, NRC-யை நடைமுறைப்படுத்துவதற்குத் துணை போகிறது உச்ச நீதிமன்றம்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ‘துன்புறுத்தலுக்கு’ (persecuted minority) உள்ளாகிறார்கள் என்பதனால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இச்சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது மோடி-அமித்ஷா கும்பல். பௌத்த சிங்களப் பேரினவாதிகளால் சிறுபான்மை தமிழ் இந்துக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? மியான்மரில் பௌத்தப் பேரினவாதிகளால் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லீம்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? அவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பினால் அவர்களெல்லாம் அந்தந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டியதுதானே என திமிர்த்தனமாக பேசுகிறது சங் பரிவார பார்ப்பனக் கும்பல். மேலும் ‘துன்புறுத்தலுக்கு’ உள்ளாகும் சிறுபான்மையினர் (persecuted minority) என சட்டத் திருத்தத்தில் எங்குமே குறிப்பிடாத போது பொது வெளியில் மட்டும் அவ்வாறு பேசி மழுப்பி வருகின்றது இக்கும்பல்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் ‘துன்புறுத்தலுக்கு’ ஆளான சிறுபான்மை இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகளைப் பாதுகாக்கத்தான் இந்தச் சட்டம் என்கிறார்கள். பிறகு ஏன் 31 டிசம்பர் 2014 வரைக்கும் உள்ளவர்களை மட்டும் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? அதன் பிறகு அங்கு இவர்கள் யாரும் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? அப்படி துன்புறுத்தலுக்கு ஆளாகி யாரும் இந்தியாவிற்குள் தஞ்சம் புகவில்லையா? இனிமேலும் அங்கு துன்புறுத்தல் இருக்காதா? இன்றைய தேதியிலோ அல்லது நாளையோ யாராவது துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தால் அவர்களை என்ன செய்யப் போகிறார்கள்? அப்படி எல்லாம் இனி யாரும் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள் என கருதுகிறார்களா? அவ்வாறு கருதினால் அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதில்லை என எடுத்துக் கொள்ளலாமா? அப்படியானால் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்துள்ள இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகளை திரும்ப அந்தந்த நாடுகளுக்கே போகச் சொல்லலாமே? சிங்களப் பேரினவாத துன்புறுத்தலுக்குத் தொடர்ந்து ஆளாகும் ஈழத் தமிழர்களை மட்டும் இலங்கைக்குப் போகச் சொல்கிறார்கள்? என்ன நியாயம் இது?

வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிலிருந்து அதிலும் குறிப்பாக வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து ஊடுருவும் முஸ்லீம்களைத் தடுத்து இந்திய நாட்டைப் பாதுகாக்கப் போகிறார்களாம். அங்கெல்லாம் வறுமை தாண்டவமாடுகிறதாம். குடிக்கத் தண்ணீர்கூட கிடையாதாம் இந்தியாவில் வளம் கொழிக்கிறதாம். அதனால் மேற்கண்ட நாடுகளில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் இந்தியாவிற்குள் மொத்தமாக வந்து விடுவார்களாம். அப்படி வந்து விட்டால் நம்மால் வாழ முடியாதாம். இப்படி வியாக்கியானம் செய்கிறது அன்புமணி-கிருட்டிணசாமி கும்பல். மோடிக்கு ஜால்ரா தட்டுவதில் அ.தி.மு.க டயர் நக்கிகளே தேவலாம் போல. நாட்டைப் பாதுகாக்கத்தான் இந்தச் சட்டத் திருத்தமாம். சரி! இஸ்லாமிய நாடுகள் இவை மூன்று மட்டும்தானா? வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் ஊடுருவினால் என்ன செய்யப் போகிறார்கள்? இந்தக் கேள்விக்கு இந்தக் கும்பலிடம் பதில் இல்லை.

பொன்.சேகர்
வழக்குரைஞர்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

சட்ட அங்கீகாரம் இல்லாத NPR மற்றும் நீதிமன்றத்தின் பாராமுகம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?

CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!

No comments:

Post a Comment