Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Friday, March 27, 2015

கிரிக்கெட்: உலகக் கோப்பையும் இந்தியனின் மனநிலையும்!

இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே!

இவ்வாறு சென்ற உலகக் கோப்பையின் போது எழுதியிருந்தேன். இந்த உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதியில் தோற்று விட்டது. இந்தச் சூழலில் இந்தியனின் மன நிலையை மேலும் அறிய...

துன்பக் கடலில் துவளும் இந்தியா! 


தொடர்புடைய பதிவுகள்:

Saturday, April 2, 2011

துன்பக் கடலில் துவளும் இந்தியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம். பல அலுவலகங்களில் ஊழியர்கள் பிற்பகல் விடுப்பில் சென்றுவிட்டார்கள். எப்பொழுதும் பரபரப்பாய் காணப்படும் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. போட்டி மும்பையில் நடப்பதால் மகாராட்டிர அரசு விடுமுறை அறிவித்து விட்டது. அரை இறுதியில் பாக்கிஸ்தானை வீழ்த்தியதால் நேற்று மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது இந்தியா. அந்த மகிழ்ச்சித் தொடருமா என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்க முதலில் மட்டை விளாசிய இலங்கை அணி 274 ஓட்டங்களைக் குவித்தது. 

ஆட்டத்தைப் பெரிய திரையில் பார்த்துவிட்டு இடைவேளையின் போது வீட்டுக்கு வந்த எனது மகன் "என்ன.. செம அடி அடிச்சிடானுங்க!"  என்றான். ஏதோ இவனே அடிவாங்கி வந்ததைப் போல இருந்தது அவனது ஈனக் குரல். அப்போதைக்கு அதுதான் இந்தியனின் குரலுமாகும்.

பிறகு நான் கடைவீதிப் பக்கம் சென்று வந்தேன். ஒரு சில கடைகளில் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து சிலர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் நின்றவாறே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இந்தியா மட்டை விளாசிக் கொண்டிருந்த நேரம். அனைவரும் ஒருவித சோகத்துடன் காணப்பட்டனர். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. காரணம் அப்பொழுது சேவாக் ஆட்மிழந்த நேரம்.  

இலங்கை அடித்த 'செம அடியிலிருந்து' மீள்வதற்குள் தொடக்கத்திலேயே சேவாக் வீழ்ந்தால் தாங்கவா முடியும்? அதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடினாலும் இந்தியாவை வங்கக் கடலில் மூழ்கடித்தது இலங்கை . பாக்கிஸ்தானை வீழ்த்திய போது உயர் இரத்த அழுத்தத்தில் இருந்த இந்தியன், இலங்கையிடம் வீழ்ந்தபோது குறைந்த இரத்த அழுத்தத்திற்குச் சென்றுவிட்டான். உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவனைக் காப்பாற்றி விடலாம். ஆனால் குறைந்த இரத்த அழுத்தத்தில் உள்ளவனை அவ்வளவு எளிதில் காப்பாற்றிவிட முடியாது.

இலங்கையிடம் வீழந்ததால் இந்தியாவே இன்று இழவு வீடாய் காட்சியளிக்கிறது. நாளை விடுமுறை என்பதால் காரியத்தையும் முடித்துவிடலாம். ஒரு நாள் விடுப்பு மிச்சம். விளையாட்டை தனிமனித உணர்வாய் பார் என்ற போது கேட்டானா? விளையாட்டை நாட்டுப் பற்றோடு இணைத்தான். இன்று இடிந்து போய் உட்கார்ந்து விட்டான்.

இலங்கை அதிக ஓட்டங்கள் அடித்த போது, அடி தன்மீது விழுந்ததாக எண்ணினான். வலி தாங்க முடியாமல் அசைவற்று நின்றான். இலங்கை வீரர்களால் இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே! 

அன்று, முல்லி வாய்க்காலில் கொத்துக் கொத்தாக தமிழன் கொல்லப்பட்ட போது துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. சோகம் கவ்வவில்லை. இலங்கையிடம் இந்தியா  வீழ்ந்ததால் வருந்திய இந்தியன், இலங்கை சிங்களக் காடையர்களால் தமிழ்ப் பெண்கள் மொத்தமாகக் கற்பழிக்கப்பட்ட போது வருந்தவில்லை? ஈழத்தில் வீழ்ந்தவன் இலங்கைத் தமிழன், வேற்று நாட்டுக் காரன், அவனுக்காக எப்படி வருந்த முடியும் என எதிர் கேள்வி கேட்டு சமாதானப்படுத்தலாம். 

ஆனால் 'இந்திய' மீனவன் சிங்களக் காடையர்களால் அன்றாடம் கொல்லப் பட்டாலும் அதற்காக ஒரு சொட்டுக் கண்ணீரையாவது சிந்தியிருக்கிறானா? சிந்தமாட்டான். கொல்லப்படுபவன் தமிழனாயிற்றே. தமிழனைத்தான் இந்தியன் என்று "இந்திய - இந்தியன்" ஏற்றுக் கொள்வதில்லையே. 'மதராசி' என்றுதானே அழைக்கிறான். 'மதராசி' கொல்லப்பட்டால் இந்தியனுக்கு எப்படி கண்ணீா் வரும்? தமிழனாய்ப் பிறந்து இந்தியனாய் வாழும் இந்தியத் தமிழனும், இந்த இந்தியனின் பட்டியலில் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இதுதான் இந்திய மீனவன் மீது இந்தியன் கொண்டிருக்கும் 'தேசப்பற்று'.

ஒன்று மட்டும் புரிகிறது. எவன் வீழ்ந்தால் எனக்கென்ன? கிரிக்கெட்டில் மட்டும் இந்தியா விழக்கூடாது என்பதே இந்தியனின் இலட்சியம். இந்த இலட்சியம் பெருமூளையிலிருந்து பிறக்கவில்லை. இது சில ஆண்டுகளாகவே போதை ஊசி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டு சிறுமூளை ஏற்படுத்தியிருக்கும் 'நாட்டுப் பற்றுப்'போதை. போதை தெளிய வேண்டுமானால் பளிச் பளிச்சென பச்சைத் தண்ணீரைக் கொண்டு முகத்தில் அடிப்பது போல "எதையாவது" கொண்டு இரு கன்னத்திலும் மாறி மாறி அறைய வேண்டும்.  இல்லை என்றால் கிரிக்கெட்டின் நாட்டுப்பற்று போதையும் தெளியாது. கிரிக்கெட்டில் இந்தியா வீழும் போது வரும் சோகமும் குறையாது. அது வரை இந்தியா துன்பக் கடலில் துவளுவதை யாரால்தான் தடுக்கமுடியும்?

குறிப்பு: இந்தியனின் உணர்வை வெளிக்கொணரவே இப்பதிவு.

Friday, April 1, 2011

மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் இந்தியா!

இன்று காலை அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின் தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். காலை நேரம், அலுவலக நாள் என்பதால் எப்போதும் போல கூட்டம் நிரம்பி வழிந்தது. கைபேசியின் ஒலிபெருக்கிகளை காதில் திணித்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த திரைப்படப் பாடல்களை இரசிக்கும் இளைஞர்கள் கையில் வழக்கத்திற்கு மாறாக தினகரன் நாளேடு. அதிலும் விளையாட்டுச் செய்தி போடப்பட்டிருந்த பக்கத்தில் இலயித்திருந்தார்கள்.

அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இனி விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்பதால் சென்னையில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து தங்களது வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள அன்றாடம் தொடர் வண்டியில் பயணிப்பவர்கள். மொத்தமாக தொடர் வண்டி இருக்கைகளை தங்களது சக உழைப்பாளி நண்பர்களுக்காக 'முன்பதிவு' செய்து கொள்ளும் 'தவறைத்' தவிர இவர்கள் எதார்த்தமான உழைப்பாளிகள். நாம் முன்கூட்டியே சென்றாலும் நமக்கு முடியாத போதுகூட இவர்களால்  இடம் கிடைப்பதில்லை என்ற வருத்தம் எப்பொழுதும் எனக்கு உண்டு.

காலையில் சுறுசுறுப்பாகச் செல்லும் இவர்கள் பகல் முழுதும் முதலாளிகளால் கசக்கி பிழியப்பட்டு மாலையில் துவண்டு வரும் போது அவர்களுக்கு நாம் இடம் தரவேண்டும் எனத் தோன்றும். 

இப்படி பிழைப்புக்காக சென்னை செல்வோரில் பெரும்பாலானோர் இளைஞர்கள். படிக்காதவர்கள், பத்தாம் வகுப்பு, +2,  அல்லது தொழில் நுட்ப பட்டயம் (diploma) என ஏழைகளால் படிக்க முடிந்த படிப்பை மட்டுமே படித்தவர்கள். இவர்களால் இதற்கும் மேலே படிக்காமல் போனதற்கு அவர்களுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அல்ல.சிறந்த கல்விக் கூடங்களும், ஆசிரியர்களும் இல்லை என்பதும், சிறந்த கல்விக் கூடங்களில் பயில்வதற்கான பொருளாதார வசதியின்மையுமே காரணங்களாகும்.

இன்று தொடர் வண்டியில் பயணித்த அத்தனை பேரும் கிரிக்கெட்டைப் பற்றிதான் பேசிக்கொண்டு வந்தார்கள். பாகிஸ்தான் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு வீரரின் பெயரரும் அத்துப்படி. முதல் ஓவரை யார் வீசியது? ஒவ்வொரு ஓவரையும் வீசியது யார்? முதல் பந்தில் எத்தனை ஓட்டங்கள்? யார் எடுத்தது? பந்து எந்தத் திசையில் அடிக்கப்பட்டது? மட்டையாளர் என்ன தவறு செய்தார்? பந்து வீச்சாளர் செய்த தவறு என்ன? குறிப்பாக இந்திய தரப்பு வீரர்களின் அத்தனை அசைவுகளும் அத்துப்படி.

அது மட்டுமல்ல இதற்கு முன்பு இவ்விரு அணிகளும் ஆடிய ஆட்டங்கள் பற்றியும் அலசிக் கொண்டிருந்தார்கள். சச்சின் சதத்தை நழுவ விட்டதற்காக பெரிதும் வருத்தப்பட்டுக் கொண்டாலும் இந்தியாவின் வெற்றி அதை சாதாரணமாக்கிவிட்டது. கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களையும் அலசிய இவர்களின் அசாத்திய நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனேன்.

வெறும் புலனறிவு மட்டுமே இத்தனை விவரங்களை அளிக்கிறது என்றால் அடுத்தடுத்த கட்டங்களில் அறிவை வளர்க்கும் போது இவர்களின் திறமை வியக்கவல்லதாக அமையும். அந்த வகையில் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை மட்டும் உணர முடிந்தது.

ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு இவ்வளவு விவரங்களும் அத்துப்படியானது எப்படி? ஆனால் படிக்கும் காலத்தில் பாடங்களை திரும்பப் திரும்பப் படித்தாலும், எழுதிப் பார்த்தாலும், அடிக்கடித் தேர்வுகள் வைத்தாலும் படிப்பு மட்டும் அத்துப்படியாக வில்லையே! ஏன்? முன்னதில் இருக்கும் ஈடுபாடு பின்னதில் இல்லை என்பதும், இதற்கு நமது கல்வி முறையில் உள்ள குறைபாடுகளுமே காரணங்களாக இருக்குமேயன்றி  'அவாளெல்லாம்' சொல்வது போல நம்மவர்களுக்கு அறிவு குறைவு, படிப்பு வராது என்பதல்ல காரணம்.

ஆனால் அவாளெல்லாம் இன்னமும் நம்மைப்பற்றி அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  "திராவிடவாளுக்கெல்லாம் புத்தி கிடையாது". இது சுப்பரமணியசாமி சமீபத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த நேர்காணலுக்காக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் உதிர்த்தது. இதை யாரேனும் பார்த்தார்களா எனத் தெரியவில்லை. காரணம் ஒரு கண்டனக் குரல்கூட இதுவரை எழவில்லை.

நான் பயணித்தது கடற்கரை விரைவுத் தொடர் வண்டி. அது கொரட்டூரில் நிற்காது என்பதால் ஆவடியில் இறங்கி அடுத்த தொடர் வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு அருகில் ஒரு இளைஞரும், எதிரில் இரு இளைஞர்களும் வந்து அமர்ந்தனர். இவர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை. மாறாக அன்றைய தேர்வுக்காக தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர்.

புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட கேள்வி பதில்களும் இவர்கள் மருந்தியல் (pharmacology) தொடர்பான தேர்வுக்காகச் செல்கிறார்கள் எனபதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. 'டர்மெரிக்கின்' பயன்பாடு, 'ஓப்பியத்தின்' பயன்பாடு என இவர்களின் பரிமாற்றம் இருந்தது. தோலைப் பாதுகாக்கவும், கிரிமி நாசினயாகவும் 'டர்மெரிக்' பயன்படுகிறது என ஒரு மாணவர் சொன்னதைக்கூட மற்றோரு மாணவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. "நான் புத்தகத்தில் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

பாடங்களைப் பற்றி முழுமையான தெளிவு இவர்களிடம் இல்லை என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. ஆறு மாத கால படிப்பை இந்த அரைமணி நேர இரயில் பயணத்தல் ஈடு செய்து விடலாம் என அவர்கள் எண்ணியிருக்க வேண்டும். மிகவும் பரபரப்பாய் காணப்பட்டார்கள். அல்லது நேற்றைய கிரிக்கெட் இந்த பரபரப்புக்கு ஒரு விதத்தில் காரணமாய் இருக்கக்கூடும்.

ஒரே ஒரு முறை பார்த்த கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களும் அங்கே அத்துப்படி. ஆறுமாத காலம் படித்த படிப்பின் மிகச்சாதாரண விவரங்கள்கூட இங்கே குழப்பமாய் இருக்கிறது. அங்கே கிரிக்கெட்டோடு உறவாடுகிறார்கள். அனைத்தும் அத்துப்படியாகிறது. அது போல படிப்பு தொடர்பானவற்றில் உறவாடுவதில்லை. அதனால் புரிவதில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கு புற உலகோடு நாம் கொண்டிருக்கும் உறவு மிக் பெரிய அளவில் பங்காற்றுகிறது. இந்த இடைவெளிதான் பாடத்தில் தெளிவின்மைக்குக் காரணம்.

காலை நேர கிரிக்கெட் மகிழ்ச்சி, தொடர் வண்டியில் மட்டுமல்ல வீடு முதல் அலுவலகம் வரை எங்கும் இருந்திருக்கும். இன்று இந்தியா மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருக்கும். தங்கள் அலுவலகத்தில் பெரிய திரை அமைத்து கிரிக்கெட் பார்க்க அனுமதித்ததை தனது நண்பர்களிடம் பெருமையோடு பகிர்ந்து கொண்டார் ஒருவர். கிரிக்கெட் ஏற்படுத்தும் 'ஓப்பிய' போதை அவ்வளவு விரைவில் குறையாது. ஆனால் கிரிக்கெட்டால் நேற்று குறைந்த உற்பத்தி இன்று இரட்டிப்பாகும் என்பது முதலாளிக்குத் தெரியும்.

குறிப்பு: 31.03.2011 அன்றைய தொடர் வண்டிப் பயண அனுபவம்.