Friday, June 21, 2024

கள்ளக்குறிச்சி சாராயம்: மரணமா? படுகொலையா?

முழு மதுவிலக்கு சாத்தியமா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் மாண்டு போனார்கள். இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு சிலரை பணியிட மாற்றம் செய்தும், ஒரு சிலரை தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

இந்தச் சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவர் இராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். இந்தச் சாராய மரணங்களைக் காரணம் காட்டி, ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்கின்றனர்.


தற்போது மட்டுமா கள்ளச் சாராய சாவுகள் நடக்கின்றன? எடப்பாடி ஆட்சியில் நடக்கவில்லையா? ஜெயலலிதா ஆட்சியில் நடக்கவில்லையா? கர்நாடகாவில் நடக்கவில்லையா? முழு மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் குஜராத்தில் நடக்கவில்லையா? எங்குதான் சாராயச் சாவுகள் நடக்கவில்லை என்று அகில இந்திய அளவிலான புள்ளி விவரங்களை எடுத்துப் போட்டு, இது ஒன்றும் புதியதல்ல என்கிற கோணத்திலும் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இனியும் தாமதிக்கக் கூடாது; உடனடியாக முழுமையான மதுவிலக்கு வேண்டுமென வைகோ, தொல்.திருமா உள்ளிட்ட பல தலைவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

'திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போல குடிகாரனாய்ப் பார்த்துக்
குடியை நிறுத்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது என்று வாதிடுவோரும் உண்டு.

டாஸ்மாக் கடைகளில் சாராயத்தின் விலை கூடுதலாக இருப்பதனால்தான் மலிவு விலை பாக்கெட் சாராயத்தை ஏழைகள் நாடுகிறார்கள்; எனவே குறைந்த விலையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்தால் மரணங்களைத் தடுக்க முடியும் என்று கோருவோரும் உண்டு.

சாராயத்தில் எத்தனாலுக்குப் பதிலாக மெத்தனால் அதிகமாக இருந்ததுதான் தற்போதைய மரணங்களுக்குக் காரணம்; 
எனவே மெத்தனால் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினாலே மரணங்கள் குறையும் என்று வாதிடுவோரும் உண்டு.

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு மேல் அன்றாடம் சாராயம் குடிக்கிறார்கள், எனவே முழு மதுவிலக்கு எல்லாம் இனி சாத்தியமில்லை, கள்ளுக்கடைகளைத் திறப்பதுதான் ஒரே வழி; இதனால் கள்ளச்சாராய மரணங்களையும் ஒழிக்க முடியும், விவசாயிகளுக்கும் வாழ்வளிப்பதாக இருக்கும் என்று ஒரு சிலர் ஆலோசனைகளை முன்வைக்கின்றனர்.

சாலை விபத்துகளில் இறந்து போனால் நிவாரணம் ஒரு லட்சம், ஆனால், சாராயம் குடித்து மாண்டு போனால் 10 லட்சமா? யார் அப்பன் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குக் கொடுப்பது? என ஆவேசப்படுவோரும் உண்டு.

'மாதா மாதம் பிரீமியம் செலுத்தி இன்ஷூரன்ஸ் பெறுவதைவிட 30 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் சாராயத்தைக் குடித்தால் பத்து லட்சம் சொலையா கிடைக்குமே?' என்று இந்த மரணத்தை எள்ளி நகையாடும் மீம்சுகளும் ஒரு பக்கம் உலவுகின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் 'ஊத்திக் கொடுத்த உத்தமி!' என பொங்கி எழுந்த போராளிகள், இன்று எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பி பாடகர் கோவன் உள்ளிட்ட போராளிகளை எள்ளி நகையாடி இழிவுபடுத்தி, சமூகத்திற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடாத சில திண்ணைத் தூங்கிகள் சமூகவலைதளங்களில் முனகி வருகின்றனர். 

உபதேசங்கள் ஊறுகாயாக..

எத்தனாலும் மெத்தனாலும்
கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களைக் கொண்ட மூலக்கூறுகள்தான். அணுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் வேதியல் பண்புகள் வேறுபடுகின்றன. வேதியியல் பண்புகள் வேறுபடுகின்றபோது அதனுடைய வினையாற்றலும் மாறுபடுகின்றன. அதனால்தான் மெத்தனால் குடித்தால் மாண்டு போகிறான். எத்தனால் குடித்தால் போதையில் ஆழ்கிறான். மெத்தனால் அதிகம் உள்ள சாராயத்தைக் குடித்தவனைக் காப்பாற்ற வேண்டுமானால் எத்தனால் அதிகம் உள்ள சாராயத்தைக் கொடுத்தால் அவன் பிழைத்துக் கொள்வான் என்கிறார் ஒரு மருத்துவர்.

அன்னியச் சரக்கோ, அரசின் டாஸ்மாக் சரக்கோ அல்லது கள்ளச்சரக்கோ எல்லா சரக்கிலும் எத்தனால் உண்டு. அது சரி எதற்காக எத்தனால் குடிக்க வேண்டும்? 

வேதகாலத்தில் சோம பானத்தில் தொடங்கிய குடி, சங்க காலத்தில் கள் குடியாக மாறி, இன்று கட்டிங் சரக்சாக வடிவம் எடுத்துள்ளது. பிறந்தநாள் விழாக்கள், திருமணங்கள், எழவு வீடுகள் என்று எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது குடி. இந்தக் குடி ஒட்டுமொத்தக் குடிகளையே ஆட்கொண்டுவிட்டது. அலுப்புக்காக குடிப்பது என்பதெல்லாம் அனர்த்தமானது, எல்லாம் அனுபவிப்பதற்காகத்தான் என்பதே நிதர்சனமானது!

'திரிகடுகத்தில் தீட்டினார்கள்‌. கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் கதறினான். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனதுதான் மிச்சம். உபதேசங்களையே ஊறுகாயாகத் தொட்டுக் கொள்பவன்தானே நம் குடிமகன். 'குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்' என்பதெல்லாம் எம்மாத்திரம்?


எதுவாயினும், முழு மதுவிலக்கு ஒன்றுதான் மனித சமூகத்தை காப்பதற்கான ஒரே வழி. இதனால் ஏற்படும் இதர இன்னல்களை நாம் தற்காலிகமாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு ஆளுகின்ற அரசு ஆவண செய்யவில்லை என்றால் அவர்களது ஆட்சியும் வரும் காலத்தில் மரக்கட்டைகளுக்குள் அடுக்கப்படும்.‌!

மதுவிலக்குத் தடைச் சட்டம்!

வேள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அவன் நாட்டு சரக்கை விற்க உள் நாட்டுச் சரக்குகளைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்தான். அரசாங்கத்தைத் தவிர வேறு யாரும் சரக்கு தயாரிக்கக் கூடாது. அதுதான் இன்றைக்கும் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டமாக (Tamil Nadu Prohibition Act 1937) இருக்கிறது. அரசாங்கமே தயாரித்து விற்றால் அது நல்ல சரக்கு. அதையே வேறு நபர்கள் தயாரித்து விற்றால் அது கெட்ட சரக்கு. எத்தனாலை எவன் தயாரித்தால் என்ன? மெத்தனால் உடனே கொல்லும். எத்தனால் மெல்லக் கொல்லும்‌. எத்தனாலை யார் தயாரித்தாலும் மரணம் நிச்சயம். எனவே மரணத்தை விளைவிக்கக் கூடிய பொருளை தயாரித்து விற்பவன் எவனாயினும் அவன் கொலைகாரனே! கொலைகளைத் தடுக்க ஒரே வழி, முழு மதுவிலக்குதான். வேறு தீர்வே கிடையாது!

சரி! இவர்கள் எழுதி வைத்த சட்டத்தையாவது இவர்கள் மதித்து நடைமுறைப்படுத்தினார்களா? 

போதைதரும் மது வகைகளைத் தயாரிப்பது, மது தயாரிப்பதற்குரிய சாதனங்களை வைத்திருப்பது, தயாரித்த மது வகைகளை புட்டிகளில் அடைப்பது, அவற்றை விற்பனை செய்வது, வாங்கிக் குடிப்பது, மேற்கண்ட சரக்கு தயாரிக்கும் வேலைகளுக்கு உதவி செய்வது, உடந்தையாக இருப்பது இவை அனைத்துமே மேற்கண்ட சட்டப்படி (பிரிவு: 4) குற்றங்களாக வரையறுக்கப்பட்டு, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் முதல் பத்யிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. 

அத்தகைய மது வகைகளால் மரணம் ஏற்படுமாயின் கடுங்காவல் ஆயுள் தண்டனையும், மற்ற பிற குற்றங்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், இது தவிர 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உண்டு. 

மேற்கண்ட சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க இதற்கென்று உருவாக்கப்பட்ட மதுவிலக்கு காவல் துறையும் அதாவது கலால் துறையும், உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல்துறையும், வருவாய்த் துறையும் செயல்பட வேண்டும் என்றும் அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தவர்களும் உதவிட வேண்டும் என்றும் சொல்கிறது சட்டம் (பிரிவு: 32, 35). ஏதேனும் சட்டமீறல்கள் நடைபெற்றால், அது குறித்த விவரம் தெரிந்தவர்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது இச்சட்டம் (பிரிவு: 36).

இவை போதாதென்று, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நஞ்சு கலந்த போதைப் பொருளை வைத்திருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 328 இன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். இதற்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர முடியும். 

மேலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவோரை எந்தவித விசாரணையும் இன்றி தொடர்ந்து அத்தொழிலை செய்வதிலிருந்து தடுக்கும் வகையில் குண்டர்சட்டத்தின் கீழ் (Tamil Nadu Prevention of Dangerous Activities of , .....Drug Offenders, .... Act,1982), ஓராண்டுக்கு சிறையில் அடைக்க முடியும். 

கொலைக் குற்றம்!

நடந்திருப்பவை வெறும் மரணங்கள் அல்ல; தெரிந்தே மெத்தனாலை கலந்து விற்பனை செய்திருப்பதனால்
அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்பட்டு தொடர்புடையவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (IPC) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட விதிமீறலில் யார் யாருக்கெல்லாம் என்ன பங்கோ அதற்கு ஏற்ப அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இடமாற்றமும் தற்காலிக பணி நீக்கமும் வெறும் கண்துடைப்பே!
இந்த சட்டப் பின்னணியோடு கள்ளக்குறிச்சி சாராய மரணங்களைப் பரிசீலித்தால், 

காவல்துறை மட்டுமல்ல மொத்த அரசு கட்டமைப்பும்தான் இதற்குப் பொறுப்பு. கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை என்கிற அதிகார வர்க்கமும், 

வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், ஒன்றிய மாவட்டக் கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பினும்- மற்றும் மந்திரிகள், முதலமைச்சர் உள்ளிட்ட ஆளும் வர்க்கமும், 

அந்தந்த ஊர்களில் உள்ள உள்ளூர் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள் என ஒரு பெரும் கூட்டமுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இவர்களில் ஒருவருக்குக்கூடத் தெரியாமல் உள்ளுர் அளவில் யாரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முடியாது. அனைவருக்கும் தெரிந்தே நடக்கிற இந்த குற்றச் செயல்களுக்கு காவல்துறையை மட்டும் பொறுப்பாக்கினால் போதுமா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் ஒருவருக்குத் தெரிந்த பிறகு அதை உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருப்பதும் குற்றம் என்றுதானே மதுவிலக்குச் சட்டம் சொல்கிறது. 

நாம் எங்கே தவறினோம்? 

கள்ளச் சாராய விற்பனை நடக்கிறது என்பது தெரிந்தும் கண்டும் காணாமலோ அல்லது அச்சப்பட்டோ மௌனம் காக்கும் பொதுமக்களுக்கு இதில் பொறுப்பில்லையா?

கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபடுபவோர் மீது புகார் கொடுக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு ஏற்ப, இதற்கென தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் உள்ளீடு செய்பவர் யார் என்கிற இரகசியத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு ஏற்ப அது அமைய வேண்டும். இந்த இணையதளத்தை உள்ளூர் காவல்துறையிலிருந்து தலைமைச் செயலகம் வரை பார்வையிடவும், நடவடிக்கை எடுக்கவும், சோதித்தறிவும் வழிவகை செய்ய வேண்டும். புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வகையிலும் அது வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும், சமூகக் கட்டமைப்பும் சீரழிந்து, நிலைகுலைந்து போய் உள்ளதால், உள்ளூர் அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அரசு கட்டமைப்பை மட்டுமே நம்பி இருந்தால் அது ஒருபோதும் கதைக்கு உதவாது. 'பழைய குருடி கதவைத் திறடி' என்கிற கதையாகத்தான் அது இருக்கும். 

தமிழ்மணி

Saturday, June 15, 2024

கடவுள் என்ன காட்சிப் பொருளா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அபிசேகத்திற்கு கட்டணம் ரூபாய் 2500.

கட்டணத்தைப் பார்த்து ஆதங்கப்பட்டு இவ்வாறு எழுதுகிறார் ஒரு பக்தர்.

"காசு கொடுத்து கடவுளைக் காண கடவுள் என்ன காட்சிப் பொருளா?"

ஆம் இதில் என்ன சந்தேகம்? கடவுளர்களுக்கு மகிமையை ஏற்றிச் சொல்லி அவற்றை காட்சிப்படுத்திக் காசாக்குவதுதானே அன்றும் இன்றும் என்றும் நடப்பது. 

தமிழ்நாட்டுக்காரர்கள் திருப்பதி நோக்கி படையெடுக்கிறார்கள். அங்கே மொட்டை போட்டு பட்டை நாமத்தோடு திருப்பி அனுப்புகிறார்கள். ஆந்திரக்காரர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுக்கிறார்கள். இங்கே நாமத்திற்குப் பதிலாக பட்டை அடித்து திருப்பி அனுப்புகிறார்கள்.

கோவில் is nothing but an exibition centre. Consumer ஐக் கவரவும், கல்லாவை நிரப்புவதற்குமே காட்சிப்படுத்துதல்கள்.

கடவுளும் ஒரு நுகர் பொருள்தான். கடைகளுக்குச் சென்றால் காசு கொடுத்து பொருளை வாங்கி நுகர்ந்து மகிழ்கிறோம். கோவில்களுக்குச் சென்றால் காசு கொடுத்து அருளை வாங்கி அகமகிழ்கிறோம். 
முன்னதில் நுகர் பொருள் எதார்த்தமானது. பின்னத்தில் அருள் அருவமானது. 

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்கிறபோது மக்களின் வீடு நோக்கி அவர் ஏன் வருவதில்லை? மாறாக அவர் இருக்கும் இடம் நோக்கி ஏன் மக்களை அழைக்கிறார்? அழைப்பது அவர் அல்ல, அவரை நம்பி வாழும் ஒரு சிறு கூட்டம். மக்களின் துன்ப துயரங்கள்தான் அந்தச் சிறு கூட்டத்தின் இன்ப வாழ்வுக்கு மூலதனம்.

துன்பங்களும் துயரங்களும் தொடரும் வரை குன்றுகளில், ஆற்றுப்படுகைகளில் கடவுளர்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். 

மக்களின் துன்ப துயரங்கள் நீங்கி, கடவுளர்களை காட்சிப் படுத்தி வேடிக்கைப் பார்க்கும் ஒரு சமூகக் கட்டமைப்பு வராமலா போகும்? 

ஊரான்

Tuesday, June 11, 2024

பூணூல் கல்யாணம் ஆண்களுக்கு மட்டும் ஏன்?

வாட்ஸ்அப் குழுவில்...

கேள்வி: 

பூணூல் கல்யாணம் ஆண்களுக்கு மட்டும் எதற்காக செய்யப்படுகிறது என்ற கேள்வி எனக்கு நீண்ட காலமாக உள்ளது. தெரிந்தவர்கள்  விளக்கினால் நன்றி பாராட்டுவேன்.

பதில்:

இந்து மதத்தின் கோட்பாட்டு நூலான மனுதர்ம சாஸ்திரத்தில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் நான்கு வருணங்களாக பகுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

முதல் மூன்று வருணங்களான பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய வருணங்களைச் சார்ந்த ஆண்கள் பூணூல் அணிய உரிமை உண்டு. சூத்திரர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எந்த வருணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களும் சூத்திரர்களே என்கிறது மனுதர்ம சாஸ்திரம். எனவே பெண்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது.

முதல் மூன்று வருணத்தார் இருபிறப்பாளர்கள் (துவிஜர்கள்). உபநயநம் என்று சொல்லக்கூடிய பூணூல் அணியும் நிகழ்ச்சி நடப்பது என்பது இரண்டாவது பிறப்பாக கருதப்படுகிறது. உபநயநம் செய்து கொண்டால்தான் அவன் அந்த வருணத்துக்குரியவன் ஆகிறான். உபநயநம் செய்து கொள்ளவில்லை என்றால் அவன் சூத்திர நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான். சூத்திரர்களுக்கு இரண்டாவது பிறப்பு கிடையாது. பெண்களுக்கும் கிடையாது.

இந்தப் பூணூல் அணிவதில்கூட கூட மூன்று வருணத்தாருக்கிடையில் பல்வேறு வேறுபாடுகள் உண்டு.

இந்து மத சாஸ்திரப்படி தற்போது நடைபெறும் காலம் கலியுகம். கலியுகத்தில் பிராமணர்கள் சூத்திரர்கள் என்ற இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு. எனவே, இன்றைய காலகட்டத்தில் சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய வருணங்கள் கிடையாது என்பதாலும், இருக்கின்ற இரண்டு வருணங்களில் சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது என்பதனாலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. 
பூணூல் அணிய உரிமை கேட்டு விஸ்வகர்மாக்கள் போராடிய சமீபத்திய வரலாறுகளும்  உண்டு. 

மனுதர்ம சாஸ்திரத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கிக் கொள்வதும், அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் எப்படி நடைமுறையில் இன்றும் தொடர்கிறது என்பது குறித்தப் புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும், பார்ப்பனியம் மேலாதிக்கத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது.

விரிவஞ்சி நான் மிகச் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன். நான் சொல்லி உள்ள எல்லாவற்றிற்கும் மனுதர்மத்தில் ஆதாரங்கள் இருக்கிறது.

ஊரான்

Sunday, June 9, 2024

அறுபதாம் கல்யாணத்தின் சூட்சமம் தெரியுமா?

திருப்பத்தூர் மாவட்டம், ஒரு கிராமத்தில் பச்சையம்மன் கோவிலில் இன்று அம்மனுக்குக் கல்யாணமாம். எதற்காக அம்மனுக்குக் கல்யாணம் என்பதை விளக்கி புரோகிதர் ஒருவர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்

ஒரு நாள் இவரது திருமண புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தனது மகள் எங்கே ஒரு போட்டோவில்கூட என்னைக் காணோம், என்னை மட்டும் விட்டுவிட்டு நீங்க மட்டும் ஃபோட்டோ எடுத்தீர்களா?” என்று கடிந்து கொண்டாளாம்.  

பெற்றோர்களின் திருமணத்தை பிள்ளைகள் நேரில் பார்த்திருக்க முடியாதல்லவா? அதனால் தங்களது பெற்றோர்களுக்கு திருமணம் செய்து வைத்து அதை நேரில் பார்க்க வேண்டுமாம். அதற்காக ஐம்பது வயதில் ஒரு கல்யாணம்,  அறுபது வயதில் ஒரு கல்யாணம், எண்பது வயதில் ஒரு கல்யாணம் என பெற்றோர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தால் ஒரிஜினல் கல்யாணத்தை நேரில் பார்க்காத குறை நிவர்த்தி அடையுமாம். இப்படி பெற்றோர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதன் சூட்சுமத்தை அந்தப் புரோகிதர் விளக்கிக் கொண்டிருந்தார்.

 
புகைப்படம் எல்லாம் அறிமுகத்திற்கு வராத காலகட்டத்தில் என்னென்ன கதை அளந்தார்களோ?
இப்படிச் சொன்னால்தானே பெற்றோர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைப்பார்கள். அறுபதாம் கல்யாணத்தை சும்மா செய்து வைத்துவிட முடியுமா? கல்யாணம் என்றாலே ஐயர் இல்லாமலா? எனவே அறுபதாம் கல்யாணத்திற்கு கண்டிப்பாக புரோகிதரை அழைக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விடுகிறதுல்லவா? இதில் அறுபதாம் கல்யாணம் மட்டும் விதிவிலக்கா என்ன?
 
அறுபது வயது வரை நல்லபடியாக குடும்ப வாழ்க்கையைக் கடந்ததற்காககத்தான்  அறுபதாம் கல்யாணம் என்று இதுவரை பலர் எண்ணிக் கொண்டிருப்பர்.
 
கல்யாணம் செய்துகொண்ட பிறகு இதுவரை அவர்கள் துன்பத்தையே சந்திக்காமல் இன்ப வாழ்க்கை வாழ்ந்து விட்டார்கள் என்று பொருளா? இல்லை இனி வரும் காலங்களில் அவர்களைத் துன்பம் அண்டாது என்று பொருளா? இன்ப துன்பங்கள் நிறைந்ததுதானே குடும்ப வாழ்க்கை. உழைப்பாளிகள் யாரும் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்வதாக எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் மட்டுமே அறுபதாம் கல்யாணம் நடப்பதாகத் தெரிகிறது. பசை உள்ள இடத்தில்தானே பக்குவமாய் கரக்க முடியும்.
 
இப்படிப்பட்ட கதைகளும் கல்யாணங்களும் தங்களது வரும்படிக்காக புரோகிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாகிறது.
 
நூற்றுக்கும் மேற்பட்ட இப்படியான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் இந்துக்களிடையே புகுத்தி, தங்கள் வருவாய்க்கு உத்திரவாதம் செய்து கொண்டனர் பார்ப்பனர்கள் என்று அம்பேத்கர் விரிவான பட்டியல் ஒன்றை தொகுத்திருக்கிறார்.
 
ஏமாளிகள் இருக்கும் வரை ஏய்க்கத் தெரிந்தவன் உன்னை ஏய்த்துக் கொண்டுதான் இருப்பான். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாறப் போகிறாயோ?
 
அறுபதாம் கல்யாணம் செய்து வைத்து ஐயருக்குப் படி அளந்தால் ஐயரைத்தான் நீ வாழ வைக்கிறாய். மாறாக ஆயுள் வரை பெற்றவர்களை கண்கலங்காமல் பார்த்துக் கொள். அதுவே உனது வாழ்க்கைக்குப் பெருமை சேர்க்கும்.
 
ஊரான்

Saturday, June 8, 2024

தள்ளாத வயதில் அல்லாடும் பெற்றோர்கள்! : தொடர்-1

கிராமங்களில்….

1970 களின் தொடக்க காலத்தில், கிராமங்களில் படித்தவர்கள் மிகச் சொற்பமே. அந்தச் சொற்பமான ஒரு சிலரில், சிலர் தினத்தந்தியை எழுத்துக்கூட்டிப் படிக்கும் அளவுக்கு கல்வி அறிவு பெற்றவர்கள். அவர்களே நாட்டு நடப்புகளையும், அரசியல் நிலைமைகளையும் அசைபோட்டு மக்களிடம் கடத்துபவர்கள்.
 
படித்த மிகச் சொற்பமானோரில், எட்டாவதில் தேறவில்லை என்றாலும், எடுப்பான உடல் அமைப்பால் இராணுவ வீரர்களானவர்கள் சிலர். எஞ்சிய சிலரோ எஸ்.எஸ்.எல் சியை (11 ஆண்டுகள் கொண்ட பழைய SSLC)  எட்டிப் பிடித்து, அதில் தேறாதவர்கள் அரசு அலுவலகங்களில் கீழ்மட்ட ஊழியர்களானார்கள். மற்ற சிலரோ கல்லூரிகளில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்று அரசு பதவிகளில் அமர்ந்தவர்கள்.
 
1970 களின் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சியை முடித்த பிறகு, சிலர் டிப்ளமோ (Diplamo) படிக்க பாலிடெக்னிக்குளை நாடினார்கள். எஸ்.எஸ்.எல் சியில் தேறாத மற்றும் தேறிய சிலர் .டி. யை நாடினார்கள்

மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில் என டிப்ளமோ முடித்தவர்கள் சூப்பர்வைசர்களாகவும். மெஷினிஸ்ட், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் என .டி.(ITI) முடித்தவர்கள் தொழிலாளர்களாகவும் அரசு மற்றும் தனியார் ஆலைகளில் வேலைகளில் அமர்ந்தனர்.

டிப்ளமோ படிப்பில்கூட முதலாம் ஆண்டு படிப்பான பி.டி.சி (PTC - Pre Technical Course)யில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மெக்கானிக்கல், அதற்கு அடுத்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எலக்ட்ரிகல், அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிவில் பாடப் பிரிவுகளும் ஒதுக்கப்பட்டன. அதிக வேலை வாய்ப்புகளுக்கான உத்திரவாதம் இருந்ததால் மெக்கானிக்கல் படிப்பு மற்றவைகளை விட உயர்வானதாகக் கருதப்பட்டது. 

அதேபோல எஸ்.எஸ்.எல்.சி யில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மெஷினிஸ்ட் படிப்பும், அதற்கு அடுத்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஃபிட்டர் படிப்பும், அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு எலக்ட்ரீசியன் படிப்புகளும் ஒதுக்கப்பட்டன. அதிக வேலை வாய்ப்புக்கான உத்திரவாதம் இருந்ததால் மெஷினிஸ்ட் படிப்பு மற்றவைகளை விட உயர்வானதாகக் கருதப்பட்டது.
டிப்ளமோ மற்றும் ஐடிஐ களில், தாங்கள் விரும்பியப். பாடப் பிரிவுகளை தேர்வு செய்தவர்களும் உண்டு.


டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிக்க
நகரங்களைத்தான் நாடவேண்டும் என்பதால் கிராமப்புற மாணவர்கள் விடுதிக்கும் (Hostel) கூடுதலாக செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பத்துக்கான உணவுக்கும், உடைக்கும், வசிப்பிடத்திற்கும் போக ஏதோ ஒரு வகையில் உபரி உள்ளவர்கள் அல்லது சமாளிக்க முடியும் என்ற வசதி உள்ளவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் படிப்புக்காக நகரங்களில் கால் பதிக்க முடியும்.

ஓரளவுக்கு சொந்தமாக நிலம் வைத்திருப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோரால்தான் இதைச் செய்ய முடிந்ததுபின்தங்கிய மாணவர்களுக்கான சாதி ரீதியிலான இட ஒதுக்கீடும், ஸ்காலர்ஷிப்பும் இருந்ததால் இவர்களால் படிப்பில் கரைசேர முடிந்தது‌.

அன்று பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமாகவோ அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்களாகவோ இருந்ததால் கல்விக் கட்டணங்களும் கட்டுக்குள் இருந்தன.
 
இடையிடையே படிப்பை விட்டவர்கள் தட்டச்சும், ஷார்ட் ஹாண்டும் பயின்று அலுவலகங்களில் டைப்பிஸ்டாக, ஸ்டெனோவாக மாறினார்கள்.
 
கிராமங்களில் இத்தகையோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலான குடும்பங்களில் இவர்களே கிராமங்களின் முதல் தலைமுறை படிப்பாளிகள்.
 
நகரங்களில்
 
ஆனால், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம் போன்ற நகரங்களில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. ஏற்கனவே அரசு அலுவலகங்களிலும், ஆலைகளிலும் பணியாற்றவர்களின் பிள்ளைகள், வியாபாரிகளின் பிள்ளைகள் என பலரும் கல்விப் பின்புலம் கொண்டவர்கள் என்பதாலும், பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியும் என்பதாலும், வீட்டிலிருந்தே அன்றாடம் படிக்கச் சென்று வரக்கூடிய வாய்ப்பு இருந்ததால் விடுதிச் செலவுகள் கூடுதலாக இல்லை என்பதாலும் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக படிப்பு ஒரு சுமையாக இருக்கவில்லை.

இவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறை படிப்பாளிகள். இத்தகைய வாய்ப்புகளைப் பெற்றவர்கள் பெரும்பாலும் உயர்சாதி வீட்டுப் பிள்ளைகளாகவே இருந்தனர்!
 
இதுதான் அன்றைய காலகட்ட படிப்பும் வேலை வாய்ப்பும்.
 
தொடரும்
 
ஊரான்