Showing posts with label உலக மயம். Show all posts
Showing posts with label உலக மயம். Show all posts

Thursday, January 19, 2012

உறவுகளை அறுத்தெறியும் அரசு!

பண்டிகைகள் தேவைதானா?

எதற்காகப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்கிற கேள்வி பல ஆண்டுகளாகவே என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது. 

"பண்டிகைகள் நம் பாரம்பரியம் அல்லவா, விட்டுவிட முடியுமா?"

"உறவுகள் அப்போதுதானே ஒன்றுபட முடியும்!"

"நம்மை வாழவைக்கும் விலங்குகளுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றிக்கடனை செலுத்தவேண்டாமா?"

"பண்டிகை இல்லை என்றால் பிறகு எப்படித்தான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது?”

"உறவுகளையும் நட்பையும் பண்டிகைகள்தானே புதுப்பிக்கின்றன!"

இப்படி பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான 'நியாயங்கள்' மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றன.

விழாக்கள் நுகர்வுக்கானவைகளா?

ஆனால் வியாபாரிகளுக்கு பண்டிகைகள் கொண்டாடுவதற்கான காரணங்கள் இரண்டாம் பட்சமானவை. கல்லாப் பெட்டி நிறைகிறதா என்பதே அவர்களின் கவலை.சமீப காலமாக முதலாளிகளும் வணிகர்களும் கல்லா நிறைவதற்கான புதுப் புது யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய யுக்திகள் மேற்சொன்ன நியாயங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டன. அனுபவிப்பதற்காகத்தான் பண்டிகைகள் என்கிற நுகர்வு பண்பாட்டை திணித்து வருகின்றனர். "நாங்க எஞ்சாய் பண்ண வந்திருக்கோம்" என விழாக்களின் போது மக்கள் அளிக்கும் பேட்டிகள் இதை உறுதி செய்கின்றன. 

நியாயங்கள் பல சொல்லப்பட்டாலும் ஒரு சில காரணங்களுக்காக சில பண்டிகைகைளை நாமே கொண்டாடுவதில்லை. எமது மிக முக்கியமான மூதாதையர் ஒருவர் பொங்கல் அன்று இறந்து விட்டாராம். ஆகையினால் பெரும் பொங்கல் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான பொங்கல் விழாவையே எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக எமது உறவினர்கள் யாரும் கொண்டாடுவதில்லை.

ஒரு சில பண்டிகைகளை-விழாக்களை சிலர் கொண்டாடுவதில்லை என்றாலும் திருமண விழா மட்டும் அவரவர் சக்திக்கேற்ப கண்டிப்பாக நடத்தப் படுவதுண்டு. பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கிற திருமணங்களாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர்கள் எதிர்த்த போதும் அதையும் மீறி காதல் மணம் புரிந்தோருக்கு அதை முறைப்படுத்துவதற்கு அதன் பிறகு நடக்கும் திருமண வரவேற்பு விழாவாக இருந்தாலும் சரி இவ்விழாக்கள்தான் உறவுகளை ஒன்றிணைக்கவும் நட்பை பலப்படுத்தவும் உதவுகின்றன.

முன்பெல்லாம் கைநிறைய ஊதியத்துடன் கூடிய அரசு வேலை கிடைத்தால்தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்வார்கள். இப்படி 'பிழைக்கச் செல்வோர்' ஒரு சிலர்தான்.  அந்த ஒருசிலர்கூட திருமண விழா உள்ளிட்ட எந்த விழாவாக இருந்தாலும் தொலை தூரத்தில் இருந்தாலும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்வார்கள். அதற்காக ஆகும் செலவை அவர்கள் ஒரு பெரிய சுமையாகக் கருதவில்லை. அவர்களும்கூட பணி ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கே வந்து நிரந்தரமாய் தங்கிவிடுவார்கள். மற்றபடி ஆகப் பெரும்பாலானோர் சொந்த பங்தங்களோடும் நண்பர்களோடும் வாழுகின்ற சூழல் அன்று நிலவியது.   

உறவுகளைத் துறத்தும் உலக மயம்

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது. உலக மயம் நடைமுறைக்கு வந்த பிறகு விவசாயமும் கிராமப்புற சிறுதொழில்களும் நலிவடைந்தன. வேளாண்மைக்குத் தேவையான நீர் ஆதாரம் குறைந்து போனதாலும், விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமையாலும் பலர் வேளாண்மையைக் கைவிட்டனர். வேறு வழி இன்றி பிழைப்புக்காக பலர் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் தஞ்சமடைந்தனர். சொல்லிக் கொள்ளும் படியான வருவாய் இல்லை என்றாலும் எப்படியோ வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு நகரங்களிலேயே நிரந்தமாகத் தங்கத் தொடங்கி விட்டனர்.

வயித்துக்கும் வசிப்பிடத்திற்குமே எட்டாத போது நல்லது கெட்டதுகளுக்கு கிராமங்களை எட்டிப் பார்ப்பதும் குறைந்து போனது. உறவுகளும் நட்பும் குறைந்து போனாலும் இதுவரை உறவு அறுந்து போகாமல்தான் இருந்து வருகிறது. கடன ஒடன வாங்கியாவது உறவையும் நட்பையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர் வண்டிப் பயணம்!

இந்தச் சூழலில் தை பிறந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தத் தையில் பலருக்கு வழியே அடைபட்டுவிட்டது. ஒரு சிலருக்கு வழி இருந்தாலும் பாதை கல்லும் முள்ளுமாக மாறி விட்டது. 

சுமார் 530 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு பெரிய தொழிற்சாலையில் பயிற்சி எடுக்க வந்த பயிற்சி மாணவன் (apprentice) இந்தப் பொங்கலுக்கு தனது சொந்த ஊருக்குச் சென்றுவந்தான். தொழிற்சாலை உணவகத்தில் (canteen) வழங்கப்படும் பூரியைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத பலகீனமான உடல்வாகு உள்ளவன். 

வசதி குறைவான குடும்பம் என்பதால்தான் பொறியியல் பட்டயப் படிப்பு (diploma) படித்துவிட்டு மாதம் மூவாயிரம் ஊக்கத் தொகை கிடைத்தாலும் பரவாயில்லை என்று தொலைதூரமாக இருந்தாலும் பயிற்சி பின்னாளில் பயனளிக்கும் என நம்பி வந்துள்ளான். ஊரைவிட்டு வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என முடிவெடுத்து பயணமானான். நேரடிப் பேருந்து வசதி இருந்தாலும் தொடர் வண்டியில் செல்ல முடிவெடுத்து உட்கார இடம் கிடைக்க வில்லை என்றாலும் இடிபடாமல் நிற்க முடிந்ததே என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நான்கு மணி பயணத்திற்குப் பிறகு ஈரோடு சென்றடைந்தான்.

விருது நகர் செல்லும் தொடர் வண்டியிலாவது உட்கார இடம் கிடைக்குமா என்கிற கவலை,தொலைந்து போன தூக்கத்தின் வேதனையை மறக்கடித்துவிட்டது. தொடர் வண்டியும் வந்தது. ஏறவே முடியாத அளவுக்கு கூட்டம் ஏற்கனவே நிரம்பி வழிந்ததால் உட்கார்ந்து செல்லலாம் என்கிற கனவும் தகர்ந்து போனது. அலைமோதிய கூட்டத்தைக் கண்டு ரயில்வே நிருவாகம் சரக்குப் பெட்டியைத் திறந்துவிட மொத்தக் கூட்டமும் திபு திபு வென அப்பெட்டிக்குள் நுழைந்தது. இவனோ பலகீனமானவன். எப்படியோ தட்டுத்தடுமாறி பெட்டியில் ஏறிவிட்டான். மூட்டைகளுக்குப் பதிலாக மனிதர்கள் அடைக்கப்பட்ட பெட்டியை இழுத்துக் கொண்டு வண்டியும் நகர்ந்தது. மூண்று மணி நேரம் மூச்சுவிட முடியவில்லை என்றாலும் எப்படியோ தம் கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தான். 

மதுரையிலாவது இடம் கிடைக்குமா என ஏங்கியவனுக்கு அடுத்த பேரிடி காத்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்ற வேண்டும் என சரக்குப் பெட்டியிலிருந்த அனைவரையும் கீழே இறக்கிவிட்டார்கள். இங்கே சரக்குக்கு இருந்த மதிப்புகூட மனிதர்களுக்கு தரப்படவில்லை. மற்ற பெட்டிகளிலும் கூட்டம் அலைமோதியது. என்ன செய்ய? ஊர்ப் போய்ச் சேர வேண்டுமே! பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற புத்துணர்வு இவனை உந்தித்தள்ள, எப்படியோ முண்டியடித்து படியில் தொத்திக் கொண்டான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படியின் பிடியிலிருந்து சொந்த ஊரான விருதுநகரில் விடுபட்டான்.

இந்த அனுபவத்தை அவன் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது பொங்கலைக் கொண்டாடச் சென்றானா இல்லை வேதனையை சுமக்கச் சென்றானா என்பதை அவனது முகமே எனக்கு உணர்த்திவிட்டது.

முன்பதிவு செய்துவிட்டு பேசாமல் பேருந்தில் சென்றிருந்தால் இத்தகைய வேதனைகள் வந்திருக்காதே என நான் கேட்ட போது, "சார் பஸ்சில் சென்றால் போக வர ரூ.800. அதுவே ரயிலில் சென்று வர ரூ.320 தான். ஆனால் ரயிலில் இவ்வளவு கூட்டம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" என்றான். 480 ரூபாய்தான் இவனது பயணத்தை கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பயணமாக மாற்றி விட்டது. இவனைப் போலதானே மற்றவர்களும் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

சொகுசுப் பேருந்துப் பயணம்!

மலரத் துடிக்கும் மொட்டுகள் கூட பஞ்சாங்கப் பரதேசிகளால் மார்கழியில் உறைந்து, பிறகு தையில்தானே மலர்கின்றன. தை பிறந்து விட்டதால் பல மொட்டுகள் ஒரே நேரத்தில் மலர்வதால் மணவிழாக்களோ எக்கச் சக்கம். இதனால் பேருந்துகளிலும் தொடர் வண்டிகளிலும் கூட்ட நெரிசல் குறையவில்லை. அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக முன்பெல்லாம் தொடர்வண்டிப் பயணத்தை தேர்வு செய்வார்கள். சமீப காலமாக தொடர் வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால்,தொடர் வண்டிப் பயணம் அலுப்பாய்தான் இருக்கிறது. அலுப்பாய் இருந்தாலும் இன்று பலர் தொடர் வண்டியில்தான் பயணிக்கிறார்கள்.

நண்பரின் மகனுக்குத் திருமணம். எனக்கும் மணவிழா அழைப்பு வந்தது. குடும்பத்தோடு வர வேண்டும் என கண்டிப்பாய் கூறிவட்டார். திருமணமோ திருச்சியில். ஏழு மணி நேரம் பயணிக்க வேண்டும். உடல் நலம் குன்றி இருந்தாலும் திருமணத்தை புறக்கணிக்க முடியாது. தொடர் வண்டி வசதி இருந்தால் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் சற்று கூடுதல் கட்டணமாக இருந்தாலும்-பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான்-சென்று வரலாம். அதற்கும் வழி இல்லை. எனவே சொகுசுப் பேருந்தில் சென்று வர தீர்மானித்து முன்பதிவு செய்துவிட்டேன். 

முதல் நாள் செல்லும் போது இரவுப் பயணம். அடுத்த நாள் திரும்பி வரும் போதும் இரவுப் பயணம்தான். 500 ரூபாய் கட்டணத்தில் சொகுசுப் பேருந்தில்தான் பயணம். இருக்கையில் முப்பது டிகிரியில் சாய்ந்து கொண்டால் சொகுசாய் தூங்கலாம் என கண்களை மூடினால் கொக்கிகள் - window lock- இல்லாத சன்னல்களின் கண்ணாடிகள் பேருந்து ஓடும் வேகத்தின் அதிர்வுகளால் விலகி உஸ் என்ற பனிக்காற்று உள்ளே நுழைந்து "உறங்காதே" என எனக்கு பயணம் முடியும் வரை வேலை கொடுத்து வந்தது. மற்றவர்களும் இதையேதான் செய்து வந்தனர். 

உறக்கம் தொலைந்ததால் ஒட்டிக் கொண்ட அலுப்பு, மணவிழாவில் பழைய நண்பர்களைக் கண்டபோது எங்கோ ஓடி ஒளிந்து விட்டது. நண்பர்களைப் பிரியும் போது ஓடி ஒளிந்த அலுப்பு மீண்டும் நம்மை ஒட்டிக் கொள்ளும். இது தவிர்க்க முடியாதது. 

மணவிழாவுக்கு அழைத்திருந்த நண்பரைக் கண்டபோது,  "என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க. வீட்ல வரலையா, பிள்ளைங்க வரலயா?" என அவர் வினவும் போது அவரைப் பொருத்தவரையில் நட்பில் ஒரு கீரல் விழுந்து விட்டது என்றுதான் பொருள். என்னைப் பொருத்தவரையில், என் ஒருவனுக்கே பேருந்துக் கட்டணம் 500 ரூபாய் -முன்பு இதுவே 200 ரூபாய்தான்-நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் ரூ.2000. என்றுதான் என் மனம் கணக்குப் போடும். என் மனம் போடும் இந்தக் கணக்கு எதார்த்தமானது உங்களுக்கும்தான்.

ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நம்மால் ஒரு திருமணவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனால் காரணத்தைச் சொல்லி சமாளித்துவிடலாம்.

நட்போ உறவோ இங்கு கணக்கு என்னவோ ஒன்றுதான். அடிக்கடி இப்படி திருமணங்களுக்குச் செல்ல நேர்ந்தால் "இனி முடியுமா?" என்றுதான் எண்ணத் தோன்றும். திருமணங்களுக்குச் செல்வது மெல்ல மெல்ல குறைந்து பிறகு நின்றே போய்விடும். அன்றே உறவும் நட்பும் அறுந்து போகும்.

Saturday, December 10, 2011

வளாக நேர்காணலும் வேலை வாய்ப்பும்!

அள்ளித் தரும் ஐ.ஐ.டி
அமெரிக்கா கடனின் மூழ்கி இருந்தாலும், ஐரோப்பா பொருளாதாரம் மந்தமடைந்திருந்தாலும் பெரும் தொழில் நிறுவனங்கள் சென்னை ஐ.ஐ.டி மாணவர்களை கொத்திச் செல்கின்றன.
இந்த ஆண்டு வளாக நேர்காணல் நடைபெற்ற டிசம்பர் முதல் நாளில் மொபைல் தொழில் தொடர்பான அமெரிக்க நிறுவனம் ஒன்று மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.71.34 லட்சம் ஆண்டுச் சம்பளம் தருவதற்கு முன்வந்துள்ளது. அதாவது மாத ஊதியம் சுமார் 6 லட்சம். இப்படி பல்வேறு நிறுவனங்கள் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு லட்சக் கணக்கில் மாத ஊதியம் தர முன்வந்திருக்கின்றன.
அம்மாடியோவ்! தலை சுற்றுகிறதோ! இப்படி லட்சங்களை அள்ளித் தருவதால்தான் நடுத்தர வர்க்கம் ஐ.ஐ.டி கனவில் மிதக்கிறது. யாருக்குத் தேவை குழந்தையின் மழலை? குழந்தை பேச முற்படும் முன்னரே அதன் கழுத்தைப் பிடித்து பிட்ஜியில் (fitge) தள்ளுகிறார்கள்? இறுதியில் ஐ.ஐ.டி யை எட்டமுடியவில்லை என்றாலும் என்.ஐ.டி (NIT) யையாவது கிட்டியதே என திருப்தியடைகிறார்கள்.
இதற்காக பெற்றோர்கள் படும் பாடு இருக்கிறதே! சொல்லிமாளாது. ஐதராபாத்துக்கு அனுப்பி ஹாஸ்டலில் சேர்ப்பவர்கள் ஒருபக்கம். சென்னையில் சேர்த்து தனி வீடு பார்த்து மனைவியை பிள்ளையோடு அனுப்பி விட்டு வாழ்க்கையின் பாதிநாட்களை 'மேரீடு பேச்சுளர்களாக' காலத்தை தள்ளும் தகப்பன்மார்கள் மற்றொரு பக்கம்.
பெற்றோர்கள் சம்பாதித்ததை பிள்ளைகள் விழுங்கிவிட பிள்ளைகளை பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்கிவிடுகின்றன.
உச்சிக் குடுமியும் வளாக நேர்காணலும்
ஆனால் இப்படி எந்த பிரச்சனையும் இல்லாமல் வளாக நேர்காணலில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை அள்ளித் தருகிறதாம் ஒரு கல்லூரி. அக்கல்லூரியில் சேர 'பிட்ஜிக்குச்' செல்ல வேண்டாம், 'பிலஸ் டூ' வும் படிக்க வேண்டாம். உச்சிக் குடுமி இருந்தால் போதுமாம். நமக்குத்தான் உச்சிக் குடுமி வைக்க உரிமை இல்லையே. கலைஞரும்தான் நமக்கு உச்சிக்குடுமியை ஒட்ட வைத்துப் பார்த்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆசைப்பட்டார். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் ஒரிஜினல் குடுமிகள் உலுக்கிய உலுக்கலில் நமது ஒட்டுக் குடுமிகள் உதிர்ந்து போயின.
அது என்ன கல்லூரி? எங்கே இருக்கிறது? என்ன படிப்பு என்று கேட்கிறீர்களா? கர்நாடகாவில் பெங்களூர் – மைசூர் சாலையில் இயங்கும் வேதக்கல்லூரி அது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வேலை கிடைத்து விடுகிறதாம். மாதச் சம்பளம் லட்சங்களைத் தாண்டுகிறதாம்.

திருமணமே வேண்டாம் என்று தனியாக வாழ நினைத்தால் வேலை செய்யும் நிறுவனத்திலேயே (கோவில்தான் இவர்களது நிறுவனம்) இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். உணவும் இலவசம். அறுசுவை உணவு கிடைக்கவில்லை என்றாலும் பட்டச் சோறு நிச்சயம். திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு வாழ நினைத்தால் அதற்கும் வேலை செய்யும் வளாகத்திலேயே ஏற்பாடு செய்து தரப்படும். எண்ணெய், பருப்பு, காய்கறி, உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் காணிக்கையாகவே கிடைத்துவிடும். வாங்கும் சம்பளத்தைத் தொட வேண்டிய அவசியமில்லை. அதை அப்படியே தொடர் வைப்பில் (RD) போட்டுவரலாம்.

நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே வெளிப்பணிகள் செய்வதன் மூலம் மேலும் சில லட்சங்களை சம்பாதிக்க முடியும். இத்தகைய வேலைகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலை கொடுப்பவர்கள் வீடு தேடி  வருவார்கள். இத்தகைய கிராக்கி ஆண்டு முழுக்க உண்டு. இந்தியாவிலும் இத்தகைய வேலைகள் கிடைக்கின்றன. இங்கே ஆயிரங்களைத்தான் பார்க்க முடியும் ஆனால் வெளிநாடுகளில் லட்சங்களை எளிதில் தொட்டு விடலாம்.


அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 'ஆன் டூட்டி ' கிடைக்காதா என ஏங்கும் ஊழியர்களின் புலம்பலைக் கேட்டிருக்கிறோம். ஆனால் அயல் நாட்டுக்கே அனாயசமாய் 'ஆன் டூட்டி' சென்று வரும் உச்சிக் குடுமிகளை பார்த்திருக்கிறீர்களா? எமக்குத் தெரிந்த ஒருவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒரு மாதம் சிங்கப்பூர் 'ஆன் டூட்டி' சென்று ஒரு லட்சத்தோடு திரும்பி வந்தார். உணவு போக்குவரத்து 'ஃப்ரீ'.

மணிஆட்டி மந்திரம் ஓதும் வேலைக்குத்தான் இத்தனை மவுசு. மற்றவர்களுக்குத் தகுதி இல்லை என்றாலும் ஐ.ஐ.டி வாய்ப்பை இழந்த உச்சிக் குடுமிகள் இதற்கு முயற்சி செய்யலாம்.
பொருளாதார நெருக்கடியும் புரோகிதர் தொழிலும்
பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க இந்தத் தொழிலில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். பொருளாதார நெருக்கடியால் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினர் வேலையிழந்து, வீடிழந்து வீதிக்கு விரட்டப்பட்டுள்ள நிலையில் அவர்கள்  கோவில்களுக்கு படை எடுப்பதாலும், பரிகாரம் தேடி சடங்குகள் சம்பிரதாயங்களை நாடுவதாலும் மந்திரம் ஓதும் தொழில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக உலகப் பொருளாதார ஆய்வு மைய அறிக்கை கூறுகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒருபுறம் ஆலை மூடல்-ஆட்குறைப்பு நடக்கும் அதே வேலையில் மந்திரம் ஓதும் தொழிலுக்கு எப்போதும் ஆள் பற்றாக்குறைதான். அதனால்தான் பல் போன கிழங்களுக்குக்கூட ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மற்ற தொழில்களில் விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படும் போது மந்திரம் ஓதும் தொழிலில் மட்டும் ஓய்வே கிடையாது. சமீபத்தில் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவுக்கு நான் திருவண்ணாமலை சென்றிருந்த போது 76 வயது நிறைந்த முதியவர் மந்திரம் ஓதியதை பார்த்தபோது அது உண்மைதான் என்பது நிரூபணமானது. தள்ளாத வயதிலும் மடியில் தாள்கள் விழுகின்றனவே! இத்தொழிலில் எப்போதும் ‘ஆயிரம் பொன்’தான்.
புதிய பொருளாதாரக் கொள்கை, தாராள மயம், தனியார் மயம், உலக மயம் நீடிக்கும் வரை இந்தத் தொழிலும் செழித்தே வளரும்.
என்ன! நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை!
*****
தொடர்புடைய பதிவுகள்: