Showing posts with label பேருந்து. Show all posts
Showing posts with label பேருந்து. Show all posts

Thursday, January 19, 2012

உறவுகளை அறுத்தெறியும் அரசு!

பண்டிகைகள் தேவைதானா?

எதற்காகப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்கிற கேள்வி பல ஆண்டுகளாகவே என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது. 

"பண்டிகைகள் நம் பாரம்பரியம் அல்லவா, விட்டுவிட முடியுமா?"

"உறவுகள் அப்போதுதானே ஒன்றுபட முடியும்!"

"நம்மை வாழவைக்கும் விலங்குகளுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றிக்கடனை செலுத்தவேண்டாமா?"

"பண்டிகை இல்லை என்றால் பிறகு எப்படித்தான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது?”

"உறவுகளையும் நட்பையும் பண்டிகைகள்தானே புதுப்பிக்கின்றன!"

இப்படி பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான 'நியாயங்கள்' மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றன.

விழாக்கள் நுகர்வுக்கானவைகளா?

ஆனால் வியாபாரிகளுக்கு பண்டிகைகள் கொண்டாடுவதற்கான காரணங்கள் இரண்டாம் பட்சமானவை. கல்லாப் பெட்டி நிறைகிறதா என்பதே அவர்களின் கவலை.சமீப காலமாக முதலாளிகளும் வணிகர்களும் கல்லா நிறைவதற்கான புதுப் புது யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய யுக்திகள் மேற்சொன்ன நியாயங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டன. அனுபவிப்பதற்காகத்தான் பண்டிகைகள் என்கிற நுகர்வு பண்பாட்டை திணித்து வருகின்றனர். "நாங்க எஞ்சாய் பண்ண வந்திருக்கோம்" என விழாக்களின் போது மக்கள் அளிக்கும் பேட்டிகள் இதை உறுதி செய்கின்றன. 

நியாயங்கள் பல சொல்லப்பட்டாலும் ஒரு சில காரணங்களுக்காக சில பண்டிகைகைளை நாமே கொண்டாடுவதில்லை. எமது மிக முக்கியமான மூதாதையர் ஒருவர் பொங்கல் அன்று இறந்து விட்டாராம். ஆகையினால் பெரும் பொங்கல் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான பொங்கல் விழாவையே எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக எமது உறவினர்கள் யாரும் கொண்டாடுவதில்லை.

ஒரு சில பண்டிகைகளை-விழாக்களை சிலர் கொண்டாடுவதில்லை என்றாலும் திருமண விழா மட்டும் அவரவர் சக்திக்கேற்ப கண்டிப்பாக நடத்தப் படுவதுண்டு. பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கிற திருமணங்களாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர்கள் எதிர்த்த போதும் அதையும் மீறி காதல் மணம் புரிந்தோருக்கு அதை முறைப்படுத்துவதற்கு அதன் பிறகு நடக்கும் திருமண வரவேற்பு விழாவாக இருந்தாலும் சரி இவ்விழாக்கள்தான் உறவுகளை ஒன்றிணைக்கவும் நட்பை பலப்படுத்தவும் உதவுகின்றன.

முன்பெல்லாம் கைநிறைய ஊதியத்துடன் கூடிய அரசு வேலை கிடைத்தால்தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்வார்கள். இப்படி 'பிழைக்கச் செல்வோர்' ஒரு சிலர்தான்.  அந்த ஒருசிலர்கூட திருமண விழா உள்ளிட்ட எந்த விழாவாக இருந்தாலும் தொலை தூரத்தில் இருந்தாலும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்வார்கள். அதற்காக ஆகும் செலவை அவர்கள் ஒரு பெரிய சுமையாகக் கருதவில்லை. அவர்களும்கூட பணி ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கே வந்து நிரந்தரமாய் தங்கிவிடுவார்கள். மற்றபடி ஆகப் பெரும்பாலானோர் சொந்த பங்தங்களோடும் நண்பர்களோடும் வாழுகின்ற சூழல் அன்று நிலவியது.   

உறவுகளைத் துறத்தும் உலக மயம்

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது. உலக மயம் நடைமுறைக்கு வந்த பிறகு விவசாயமும் கிராமப்புற சிறுதொழில்களும் நலிவடைந்தன. வேளாண்மைக்குத் தேவையான நீர் ஆதாரம் குறைந்து போனதாலும், விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமையாலும் பலர் வேளாண்மையைக் கைவிட்டனர். வேறு வழி இன்றி பிழைப்புக்காக பலர் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் தஞ்சமடைந்தனர். சொல்லிக் கொள்ளும் படியான வருவாய் இல்லை என்றாலும் எப்படியோ வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு நகரங்களிலேயே நிரந்தமாகத் தங்கத் தொடங்கி விட்டனர்.

வயித்துக்கும் வசிப்பிடத்திற்குமே எட்டாத போது நல்லது கெட்டதுகளுக்கு கிராமங்களை எட்டிப் பார்ப்பதும் குறைந்து போனது. உறவுகளும் நட்பும் குறைந்து போனாலும் இதுவரை உறவு அறுந்து போகாமல்தான் இருந்து வருகிறது. கடன ஒடன வாங்கியாவது உறவையும் நட்பையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர் வண்டிப் பயணம்!

இந்தச் சூழலில் தை பிறந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தத் தையில் பலருக்கு வழியே அடைபட்டுவிட்டது. ஒரு சிலருக்கு வழி இருந்தாலும் பாதை கல்லும் முள்ளுமாக மாறி விட்டது. 

சுமார் 530 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு பெரிய தொழிற்சாலையில் பயிற்சி எடுக்க வந்த பயிற்சி மாணவன் (apprentice) இந்தப் பொங்கலுக்கு தனது சொந்த ஊருக்குச் சென்றுவந்தான். தொழிற்சாலை உணவகத்தில் (canteen) வழங்கப்படும் பூரியைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத பலகீனமான உடல்வாகு உள்ளவன். 

வசதி குறைவான குடும்பம் என்பதால்தான் பொறியியல் பட்டயப் படிப்பு (diploma) படித்துவிட்டு மாதம் மூவாயிரம் ஊக்கத் தொகை கிடைத்தாலும் பரவாயில்லை என்று தொலைதூரமாக இருந்தாலும் பயிற்சி பின்னாளில் பயனளிக்கும் என நம்பி வந்துள்ளான். ஊரைவிட்டு வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என முடிவெடுத்து பயணமானான். நேரடிப் பேருந்து வசதி இருந்தாலும் தொடர் வண்டியில் செல்ல முடிவெடுத்து உட்கார இடம் கிடைக்க வில்லை என்றாலும் இடிபடாமல் நிற்க முடிந்ததே என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நான்கு மணி பயணத்திற்குப் பிறகு ஈரோடு சென்றடைந்தான்.

விருது நகர் செல்லும் தொடர் வண்டியிலாவது உட்கார இடம் கிடைக்குமா என்கிற கவலை,தொலைந்து போன தூக்கத்தின் வேதனையை மறக்கடித்துவிட்டது. தொடர் வண்டியும் வந்தது. ஏறவே முடியாத அளவுக்கு கூட்டம் ஏற்கனவே நிரம்பி வழிந்ததால் உட்கார்ந்து செல்லலாம் என்கிற கனவும் தகர்ந்து போனது. அலைமோதிய கூட்டத்தைக் கண்டு ரயில்வே நிருவாகம் சரக்குப் பெட்டியைத் திறந்துவிட மொத்தக் கூட்டமும் திபு திபு வென அப்பெட்டிக்குள் நுழைந்தது. இவனோ பலகீனமானவன். எப்படியோ தட்டுத்தடுமாறி பெட்டியில் ஏறிவிட்டான். மூட்டைகளுக்குப் பதிலாக மனிதர்கள் அடைக்கப்பட்ட பெட்டியை இழுத்துக் கொண்டு வண்டியும் நகர்ந்தது. மூண்று மணி நேரம் மூச்சுவிட முடியவில்லை என்றாலும் எப்படியோ தம் கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தான். 

மதுரையிலாவது இடம் கிடைக்குமா என ஏங்கியவனுக்கு அடுத்த பேரிடி காத்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்ற வேண்டும் என சரக்குப் பெட்டியிலிருந்த அனைவரையும் கீழே இறக்கிவிட்டார்கள். இங்கே சரக்குக்கு இருந்த மதிப்புகூட மனிதர்களுக்கு தரப்படவில்லை. மற்ற பெட்டிகளிலும் கூட்டம் அலைமோதியது. என்ன செய்ய? ஊர்ப் போய்ச் சேர வேண்டுமே! பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற புத்துணர்வு இவனை உந்தித்தள்ள, எப்படியோ முண்டியடித்து படியில் தொத்திக் கொண்டான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படியின் பிடியிலிருந்து சொந்த ஊரான விருதுநகரில் விடுபட்டான்.

இந்த அனுபவத்தை அவன் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது பொங்கலைக் கொண்டாடச் சென்றானா இல்லை வேதனையை சுமக்கச் சென்றானா என்பதை அவனது முகமே எனக்கு உணர்த்திவிட்டது.

முன்பதிவு செய்துவிட்டு பேசாமல் பேருந்தில் சென்றிருந்தால் இத்தகைய வேதனைகள் வந்திருக்காதே என நான் கேட்ட போது, "சார் பஸ்சில் சென்றால் போக வர ரூ.800. அதுவே ரயிலில் சென்று வர ரூ.320 தான். ஆனால் ரயிலில் இவ்வளவு கூட்டம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" என்றான். 480 ரூபாய்தான் இவனது பயணத்தை கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பயணமாக மாற்றி விட்டது. இவனைப் போலதானே மற்றவர்களும் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

சொகுசுப் பேருந்துப் பயணம்!

மலரத் துடிக்கும் மொட்டுகள் கூட பஞ்சாங்கப் பரதேசிகளால் மார்கழியில் உறைந்து, பிறகு தையில்தானே மலர்கின்றன. தை பிறந்து விட்டதால் பல மொட்டுகள் ஒரே நேரத்தில் மலர்வதால் மணவிழாக்களோ எக்கச் சக்கம். இதனால் பேருந்துகளிலும் தொடர் வண்டிகளிலும் கூட்ட நெரிசல் குறையவில்லை. அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக முன்பெல்லாம் தொடர்வண்டிப் பயணத்தை தேர்வு செய்வார்கள். சமீப காலமாக தொடர் வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால்,தொடர் வண்டிப் பயணம் அலுப்பாய்தான் இருக்கிறது. அலுப்பாய் இருந்தாலும் இன்று பலர் தொடர் வண்டியில்தான் பயணிக்கிறார்கள்.

நண்பரின் மகனுக்குத் திருமணம். எனக்கும் மணவிழா அழைப்பு வந்தது. குடும்பத்தோடு வர வேண்டும் என கண்டிப்பாய் கூறிவட்டார். திருமணமோ திருச்சியில். ஏழு மணி நேரம் பயணிக்க வேண்டும். உடல் நலம் குன்றி இருந்தாலும் திருமணத்தை புறக்கணிக்க முடியாது. தொடர் வண்டி வசதி இருந்தால் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் சற்று கூடுதல் கட்டணமாக இருந்தாலும்-பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான்-சென்று வரலாம். அதற்கும் வழி இல்லை. எனவே சொகுசுப் பேருந்தில் சென்று வர தீர்மானித்து முன்பதிவு செய்துவிட்டேன். 

முதல் நாள் செல்லும் போது இரவுப் பயணம். அடுத்த நாள் திரும்பி வரும் போதும் இரவுப் பயணம்தான். 500 ரூபாய் கட்டணத்தில் சொகுசுப் பேருந்தில்தான் பயணம். இருக்கையில் முப்பது டிகிரியில் சாய்ந்து கொண்டால் சொகுசாய் தூங்கலாம் என கண்களை மூடினால் கொக்கிகள் - window lock- இல்லாத சன்னல்களின் கண்ணாடிகள் பேருந்து ஓடும் வேகத்தின் அதிர்வுகளால் விலகி உஸ் என்ற பனிக்காற்று உள்ளே நுழைந்து "உறங்காதே" என எனக்கு பயணம் முடியும் வரை வேலை கொடுத்து வந்தது. மற்றவர்களும் இதையேதான் செய்து வந்தனர். 

உறக்கம் தொலைந்ததால் ஒட்டிக் கொண்ட அலுப்பு, மணவிழாவில் பழைய நண்பர்களைக் கண்டபோது எங்கோ ஓடி ஒளிந்து விட்டது. நண்பர்களைப் பிரியும் போது ஓடி ஒளிந்த அலுப்பு மீண்டும் நம்மை ஒட்டிக் கொள்ளும். இது தவிர்க்க முடியாதது. 

மணவிழாவுக்கு அழைத்திருந்த நண்பரைக் கண்டபோது,  "என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க. வீட்ல வரலையா, பிள்ளைங்க வரலயா?" என அவர் வினவும் போது அவரைப் பொருத்தவரையில் நட்பில் ஒரு கீரல் விழுந்து விட்டது என்றுதான் பொருள். என்னைப் பொருத்தவரையில், என் ஒருவனுக்கே பேருந்துக் கட்டணம் 500 ரூபாய் -முன்பு இதுவே 200 ரூபாய்தான்-நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் ரூ.2000. என்றுதான் என் மனம் கணக்குப் போடும். என் மனம் போடும் இந்தக் கணக்கு எதார்த்தமானது உங்களுக்கும்தான்.

ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நம்மால் ஒரு திருமணவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனால் காரணத்தைச் சொல்லி சமாளித்துவிடலாம்.

நட்போ உறவோ இங்கு கணக்கு என்னவோ ஒன்றுதான். அடிக்கடி இப்படி திருமணங்களுக்குச் செல்ல நேர்ந்தால் "இனி முடியுமா?" என்றுதான் எண்ணத் தோன்றும். திருமணங்களுக்குச் செல்வது மெல்ல மெல்ல குறைந்து பிறகு நின்றே போய்விடும். அன்றே உறவும் நட்பும் அறுந்து போகும்.

Wednesday, March 2, 2011

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து நாலரை மணிக்கு பேருந்து பிடிக்கச் சென்றேன். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிற்றூரில் குடியிருந்தாலும் அந்த நேரத்தில் போக்குவரத்து அதிகம் இருக்காது. நாலரை மணிக்கு வரவேண்டிய பேருந்து வராததால் ஐந்து மணிக்கு வேறு பேருந்தில் ஏறி அருகில் உள்ள சிறு நகரை அடைந்தேன். அங்கு ஒரு மணி நேரம் காத்துக் கிடந்து பிறகு வந்த பேருந்தில் ஏறி மற்றொரு நகரை அடைந்தேன்.

இது சற்றே பெரிய நகரம். மாவட்டத் தலைநகரம் எனபதாலும் பல்வேறு ஊர்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இருப்பதாலும் பேருந்து நிலையத்தில் இங்குமங்குமாக மக்கள் பேருந்தைப் பிடிக்க விரைந்து கொண்டிருந்தார்கள்.

எனது ஊருக்கு நேரடிப் பேருந்து கிடையாது. நான் இங்கிருந்து மற்றொரு ஊருக்குச் சென்று அங்கிருந்து வேறு ஒரு பேருந்தைப் பிடிக்க வேண்டும். அவசரமாகச் செல்ல வேண்டும்தான். இருந்தாலும் புறப்படுவது போல உருமிக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறத் தயக்கம். 

அப்பொழுது மணி ஆறரை. அந்த நேரத்திலும் தள்ளு வண்டியில் ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழங்களுடன் ஒரு இளைஞனும் சிறுவனும் நின்று கொண்டிருந்தார்கள். அவசரமாய் புறப்பட்டு வந்தவர்கள் ஊருக்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டுமென்றால் பேருந்து நிலையக் கடைகள்தானே கதி. வேறு வழி கிடையாது. 

சற்று முன்னெச்சரிக்கையோடு கொஞ்சம் தின்பண்டங்களை நேற்று மாலையிலேயே வாங்கி வைத்துவிட்டேன். கூடுதலாக கொஞ்சம் பழம் வாங்கிச் செல்லலாமே என திராட்சை விலையைக் கேட்க எண்ணிய போது கிராமத்துப் பெண்மணி ஒருத்தர் கால் கிலோ திராட்சையை வாங்கினார். காலை நேரக் குளிரைத் தாங்க 'ஜெர்க்கின்' போட்டிருந்த இளைஞன் எடை போட்டபோது அதிர்ந்து போனேன். ஒரு நூறு கிராம் அளவுக்கு திராட்சையை எடுத்துப் போட்டவுடனே பட்டென எடைத்தட்டு அந்தப்பக்கம் இறங்கிவிட்டது. மேலும் ஒரு கொத்து திராட்சையை எடுத்துப்போட அருகில் இருந்த சிறுவன் அதை பாலிதின் பையில் போட்டுக் கொடுக்க அந்தப் பெண் அதைவாங்கி பக்குவமாய் 'ஒயர்' கூடையில் வைத்துவிட்டு நூறு ரூபாய்த் தாளை நீட்டினார். அவன் 80 ரூபாய் மீதி கொடுத்தான். 

”எவ்வளவுப்பா?” என அவர் கேட்க 

”கால் கிலோ இருபது ரூபாய்” என்றான். 

”என்னப்பா இவ்வளவு விலை?” என்றார். 

”முன்னமே சொன்னேனம்மா கால் கிலோ இருபது ரூபாய்னு” என்றான்.

பாமரர்களுக்கு கால் கிலோ எடையின் அளவு எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. ஆனால் காசு அதிகம் என்றால் எல்லோருக்கும் புரியும்தானே. அந்தம்மாவுக்கு விலை அதிமாய்த் தோன்றியிருக்க வேண்டும். கவரை கொடுத்துவிட்டு நூறு ரூபாயைத் திரும்ப பெற்றுக் கொண்டு பேருந்துக்குச் சென்றுவிட்டார். 

அடுத்து ஒருவர். தனது உறவினரை வழியனுப்ப வந்தவர். கால் கிலோ வாங்கினார். அதே எடை. அதே விலை. காசைக் கொடுத்தார். புறப்படத் தயாராய் இருந்த பேருந்தில் உடன் வந்தவரை ஏற்றி வழியனுப்பினார். விலை மற்றும் எடையில் கவனம் செலுத்த அவருக்கு அது நேரமில்லை. அவ்வளவு அவசரம். இந்த அவசரம்தானே எமாற்றுவோருக்கு சாதகமாய் அமைந்து விடுகிறது.

ஒரு கிலோ ஐம்பது ரூபாய், கால் கிலோவாக வாங்கினால் பதினைந்து ரூபாய் விற்கும் போது இருபது ரூபாய் என்பது அநியாய விலைதான். விலையையாவது தாங்கிக் கொள்ளலாம் போல இருந்தது அவன் போட்ட எடையைப் பார்த்த போது. மிஞ்சிப் போனால் 175 லிருந்து 200 கிராம் இருக்கும். எனக்குப் பழம் வாங்கும் ஆசையே விட்டு விட்டது. போகும் வழியில் ஏதாவது கிடைக்காதா எனக் கருதி தனியார் பேருந்து புறப்பட்டவுடன் அடுத்து பத்து நிமிடத்தில் புறப்படத் தயாராய் இருந்த அரசுப் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

இது மோசடிதான். இங்கே மோசடி செய்பவன் டாட்டாவோ அம்பானியோ அல்லதான். இத்தகைய மோசடியால் இவன் குபேரனாக முடியாதுதான். இருந்தாலும் ஒருவன் செய்கிற மோசடி அவனோடு நிற்பதில்லை. ஏமாற்றுகிறப் பண்பு ஒரு பரிணாமமாய் உருப்பெற்று மொத்த சமூகத்தையும் பீடிக்க வழி வகுக்கின்றனவே. அதுதானே சமூகத்தை சீரழிக்கும் மிகப் பெரிய ஆபத்து.

தனியார் பேருந்தில் என்னதான் ஆடியோக்களையும், வீடியோக்களையும் போட்டு பயணிகளைக் கவர்ந்தாலும் ஆள் பிடிக்க, அதுவும் காலை நேரப் பயணத்தின் போது... 

நிற்பதும்... ஊர்வதுமாய்..

அப்பப்பா... நான்கு கிலோ மீட்டர் தூர நகரைக் கடப்பதற்குள் நாற்பது கிலோ மீட்டர் சென்றிருக்கலாம். போகும் வழி நெடுக நின்று நின்று சாவகாசமாய் பயணிகளை ஏற்றும் போது நமக்கோ எரிச்சல் செம கடுப்பாய் மாற 'பிரஷர்' தலைக்கு ஏறி நெற்றிப் பொட்டு பட்.. பட்டெனத் துடிக்கும். 

இருக்காதா பின்ன? இந்த வேகத்தில் போனால் ஊர் செல்லும் அடுத்தப் பேருந்தை கோட்டை விட்டுவிட்டால் பிறகு ஊருக்கு எப்படிச் செல்வது? சற்றே 'டர்ரு புர்ரெனப்' புறப்பட்டாலும் உரிய நேரத்தில் அடுத்த ஊரைச் சென்றடையலாம் என்பதால் நான் அரசுப் பேருந்துகளையே பெரும்பாலும் நாடுவேன். வேறு வழியே இல்லை என்றால் தனியார் பேருந்துதான் கதி.  

ஊர்ப் பயணம் தொடரும்... மீண்டும் சந்திப்போம்!.

Saturday, November 20, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா?

சென்ற வாரம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலகீனமடைந்து அரபிக்கடலுக்குச் சென்றுவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் மழை ஓய்ந்த பாடில்லை.

19.11.2010 அன்று நண்பர் ஒருவரின் மகள் திருமணம். முதல் நாள் நிகழ்ச்சியான மாலை நேர மணமக்கள் வரவேற்பில் கலந்து கொள்ள பயணத்திற்காக ஆயத்தமானேன். மண்டபமோ இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம்தான். இருசக்கர வாகனத்தில் சென்றால் விரைவில் வீடு திரும்பலாம். ஆனால் மாலையில் பெய்த கன மழையும், கீழ்வானில் பிரளயமாய் திரண்ட கரு மேகங்களும் என்னை மிரள வைத்தன. பேருந்தில் பயணிப்பது என முடிவாகி மாலை ஆறு மணிக்கு நகரப் பேருந்தில் ஏறினேன்.

கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருவழியாய் ஒரு ஓரத்தில் நிற்க இடம் கிடைத்தது. அரசுப் பேருந்தாயிற்றே. மிதிவண்டிக்காரனும் 'ஓவர்டேக்' செய்தது ஆமை - முயல் கதையை நினைவு படுத்தியது. ஒருவழியாய் பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒருமணி நேரம் பிடித்தது.  

கணிசமானோர் இறங்கி விட்டதால் கடைசி இருக்கையில் உட்கார இடம் கிடைத்தது. வலது பக்கம் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரும் ஏதோ ஒரு திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை சோளக் கொல்லை பொம்மையாய் அவர் சுத்தியிருந்த பட்டுச் சேலை எடுத்துச் சொன்னது. இடது பக்கம் உட்கார்ந்திருந்த நடுத்தர வர்க்க நடுவயதுக்காரரும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை அவர் கட்டியிருந்த கரை வேட்டி உணர்த்தியது. விசாரித்ததில் அவரும் நான் செல்லும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன்.

கடுமையான போக்குவரத்து நெரிசல். பேருந்துகளை பாதசாரிகள் கடந்து சென்றார்கள். காரணம் பலருக்குப் புரியவில்லை. பட்டுச் சேலை பள பளக்க நடுத்தர வர்க்கப் பெண்களை சுமந்து சென்ற தாணிகளும் (ஆட்டோக்கள்) இருசக்கர வாகனங்களும் சந்து பொந்துகளில் நுழைந்து சற்றே முன்னேறின.

எங்கள் மூவருக்கோ படபடக்க ஆரம்பித்து விட்டது. எப்போது திரும்புவது என்று. நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தையடைய மேலும் ஒருமணி நேரம் ஆயிற்று. பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தைப் பிடித்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த திருமண மண்டபத்தை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்தேன். ஆக இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எனக்கு இரண்டரை மணி நேரம் ஆயிற்று.

அவசர அவசரமாய் விருந்தை முடித்து, அன்பளிப்பாய் இரண்டு நூல்களை மணமக்கள் கையில் திணித்து விட்டு ஒரு வழியாய் கடைசிப் பேருந்தைப் பிடித்து இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நிம்மதிப் பெரு மூச்சு.

தொடரும்........