Showing posts with label ரெட்டி. Show all posts
Showing posts with label ரெட்டி. Show all posts

Wednesday, September 13, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

இடைநிலைச் சாதிகளின் தோற்றம்

கீழ்நிலைச் சாதிகளின் தோற்றம்  குறித்து ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் உயர் சாதியினர் எப்படித் தோன்றினர் என்ற கேள்வி எழுவது இயல்புதான். 

பிராமணர்கள்

ஐயங்கார், ஐயர், ஆச்சார்யா, தீட்சித், திவாரி, திரிவேதி, திக்கே, தாக்கூர், துபே, ஜெட்லி, ஜோஷி, ஷோரி, பாகவதர், பண்டிட், பாண்டே, பட், பதக், சுக்லா, மிஸ்ரா, ராய், வைத்தியா, வாஜ்பேயி, உபாத்யாயா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளாக பார்ப்பனர்கள் இருந்தாலும், அவர்கள் இன்றுவரை பிரம்மா எப்படிப் படைத்தானோ அப்படியே, பிராமண வருணமாகத் தங்களைக் கருதிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி 10) 

வடக்கே இமய மலை, தெற்கே விந்திய மலை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு அமைந்திருந்த ஆரியவர்த்த தேசத்தில், பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சனாதன தருமம் (மனு 2: 21, 22).

சத்திரியர்கள் சூத்திரர்களாக ஆன கதை

பார்ப்பன மேலாதிக்கம் நாலாதிசைகளிலும் விரிவடைய முயன்ற போது, பிராமணர்களை வணங்காததாலும், பூணூல் அணிவதைப் புறந்தள்ளியதாலும் சுற்றியிருந்த பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் ஆகிய பண்ணிரெண்டு நாடுகளைச் சேர்ந்த சத்திரியர்கள் வரவர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள் (மனு 10: 43, 44). 

எனவே, விந்திய மலைக்குத் தெற்கே ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட திராவிடப் பகுதிகளில் ஆட்சி செலுத்திய அனைத்து சத்திரிய மன்னர்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர். அது மட்டுமன்றி, சனாதனத்தை ஏற்க மறுத்த வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் உள்ளிட்ட அரசர்கள் ஆட்சியை இழந்து அழிந்து போனார்கள் (மனு 7: 41)

மேலும், நான்கு யுகங்களில், முதல் மூன்று யுகங்களான திருத, திரேதா, துவாபரா யுகங்களில் நான்கு வருணங்களும் இருந்தன. கி.மு 3102 இல் தொடங்கியதாக பார்ப்பனர்களால்  நம்பப்படும் கலியுகத்தில், கேடுகள் நிறைந்து விட்டதால், பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என பார்ப்பனர்கள் உறுதியாக இன்றுவரை நம்புகின்னர். எனவே, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட எங்கும், இன்று பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என்பது உறுதியாகத் தெரிகிறது. (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி-8, பக்கம் - 441). 

இடைநிலைச் சாதிகள்

தமிழ்நாட்டில் ஆசீவகம் காலம் தொடங்கி சங்ககாலம் வரையிலும் நான்கு வருணங்கள் கிடையாது. மாறாக இனக்குழுக்களை வழிநடத்திய தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியத் தலைவர்கள் பேரரசர்களாகவும் செயல்பட்டிருக்கக்கூடும். சனாதனத்தை ஏற்க மறுத்த இவர்கள் அனைவரும் சூத்திரர்களாக தரம் இறக்கப்பட்டு, இவர்களின் இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர் என்றுதான் கருத வேண்டி உள்ளது. 

இத்தகைய இனக்குழுக்களின் பிரிவினர்தான் இன்று வேளாளர்களாகவும் (பிள்ளை), முதலியார்களாகவும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களாகவும், நாயுடு-ரெட்டிகளாகவும், வன்னியர்களாகவும், முத்தரையர்களாகவும், கள்ளர் - மறவர் - அகமுடையர் உள்ளிட்ட‌ முக்குலத்து தேவர்களாகவும் அறியப்படுகின்றனர். இதில் நாடார் சாதி அடங்குமா என்ற கேள்வி ஒருசிலருக்கு எழக்கூடும். இது குறித்து தீண்டாமை என்ற தலைப்பில் பார்ப்போம்.

பிற்காலச் சோழர்களின் ஆட்சியிலும், அதற்கு அடுத்த காலத்திலும், மேற்கண்ட சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்ததால் "நாங்கள் ஆண்ட பரம்பரை" என்று உரிமை கோரி, தங்களைச் சத்திரியர்களாகக் காட்டிக் கொள்ள இன்று இவர்கள் முயல்கின்றனர். அதற்காக, கற்பனையான தளபுராணங்களை ஏற்கனவே ஒரு சிலர் உருவாக்கிக் கொண்டதோடு, இன்று வரலாற்றையும் புதிதாக திருத்தி எழுத முயல்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் சிற்றரசர்களாக இருந்திருந்தாலும், சனாதன தருமப்படி அவர்களும் சூத்திரர்களே; எனவே, அவர்களின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் இடைநிலைச் சாதியினரின் சந்ததியினரும் சூத்திரர்களே. 

சாதியப் படிநிலையில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர்நிலையில் உள்ள சைவப்பிள்ளைமார்களே, இன்றைய பார்ப்பனர்களின் சனாதன தருமப்படி சூத்திரவாளாகக் கருதப்படும் போது, படிநிலையில் அதற்கும் கீழே உள்ள வன்னியர்கள் உள்ளிட்ட பிற சாதியினர் எம்மாத்திரம்? இவர்கள் எல்லாம் வெறும் ஜூஜூபி!

அடுத்து தீண்டாமை குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

Friday, April 27, 2018

இராமதாஸ் அப்பாவியாம்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையிலான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று தி.மு.க, அ.தி.மு.க போன்ற அக்கட்சிகள் வலியுறுத்துவது நியாமில்லை” இது இராமதாசின் புலம்பல்.

அய்யா இராமதாஸ் அவர்களே!
‘ஆண்ட பரம்பரைகளான’ நீங்கள் எல்லாம் உங்கள் கிரீடங்களை கழட்டி வைத்துவிட்டு BC/MBC/OBC என மண்டியிட்டு கல்வி-வேலை வாயப்புகளை கெஞ்சிப் பெறலாம். இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வந்த உங்களைப் பார்த்து “கோட்டா“ என நாக்கை புடுங்கிற மாதிரி பார்ப்பனர்கள் கேள்வி கேட்டாலும் உங்களுக்கு தன்மான உணர்ச்சி வருவதில்லை. ஆனால் தீண்டத்தகாதவர்கள் உங்களைப் போன்றே இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வந்து உங்களுடன் சமமாக உட்கார்ந்தால் உங்களுக்கு குண்டி எறிகிறது. அதுவும் உங்களுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் அதிகாரியாக வந்துவிட்டால் உடம்பே எறிகிறது. உங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என ஒட்டு மொத்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ”தகுதி, திறமை” பேசி பார்ப்பன அவதாரம் எடுக்கிறீர்கள்.
நீங்கள் என்னதான் ஆண்ட பரம்பரை என அலப்பறை செய்தாலும், பார்ப்பனர்களின் வேதங்களையும் சட்டங்களையும் மதிக்காமல், பார்ப்பன புரோகிதர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் ஆட்சி செலுத்தியதால் உங்களது முன்னோர்களை சத்திரிய நிலையிலிருந்து சூத்திரர் நிலைக்கு தரவிறக்கம் செய்யப்பட்ட கதை உங்களுக்குத் தெரியுமா? (மனு 10-43 & 44). உங்களது முப்பாட்டன்களே சூத்திரர்களான பிறகு நீங்கள் மட்டும் எப்படி சத்திரியர்களாக முடியும் என்று என்றைக்காவது யோசித்ததுண்டா?
இன்றைய காலகட்டத்தில், அதாவது கலியுகத்தில் சத்திரியர்கள், வைசியர்கள் என்று யாரும் கிடையாது; கலியுகத்தில் பார்ப்பனர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டும்தான் உண்டு, சத்திரிய மறறும் வைசிய வருணங்கள் கிடையாது என பார்ப்பனர்கள் வகுத்து வைத்துள்ளதாவது தெரியுமா? பார்ப்பன அதிகாரத்திற்கு டெல்லியே மண்டியிடும் போது தைலாபுரம் மட்டும் தலை நிமிர்ந்து விடுமா என்ன? படையாச்சி, கவுண்டர், நாயகர், ரெட்டி என நீங்கள் ஊருக்கொரு அவதாரம் எடுத்தாலும் படிநிலைச் சாதி அமைப்பில் உங்களுக்கு மேலே உள்ள ‘உயர்’சாதியினர் உங்களை ‘பள்ளி’ப்பசங்க என ஏளனம் செய்கிறார்களே! அப்பொழுதுகூட உறைக்கவில்லையா நீங்கள் சத்திரியர்கள் இல்லை என்று. உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இழிவைப் போக்க உங்களுக்கு வக்கில்லை.
ஆனால் தீண்டத்தகாதவன் ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது. டூ வீலரில் போகக் கூடாது. காதலிக்கக் கூடாது. திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீது ஊர்வலம் போகக் கூடாது. சொந்தமாக குதிரை வளர்க்கக் கூடாது. பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்கக் கூடாது. தெரு வழியாக பிணத்தை எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலில் நுழையக் கூடாது என கொக்கறிப்பீர்கள். மீறினால் கௌசல்யாக்களையும் திவ்யாக்களையும் விதவையாக்குவீர்கள். இம்மாபாதகச் செயல்களைச் செய்வோர் உங்களுக்கு அப்பாவிகளா? 

பாவிகள் எல்லாம் அப்பாவிகளாக அவதாரம் எடுத்தால் அது கலியுகத்திற்கே அடுக்காது!

திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கான வழக்குகளில்கூட அப்பாவி மக்கள் மீது பல்வேறு பொய்வழக்குகள் தொடுக்கப்பட்டுதான் வருகின்றன. அதற்காக அத்தகைய சட்டப் பிரிவுகளையே நீக்கக் கோருவீர்களா? 

காவல்துறையில் ஆகப் பொரும்பான்மையினர் தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினரே! அப்படியிருக்க வன்கொடுமை சட்டத்தின் கீழ் தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினரான தங்களது சாதியினர் மீதே இவர்கள் பொய் வழக்கு போடுகிறார்கள் எனக் கூறுவது உங்களுக்கே வேடிக்கையாகத் தெரியவில்லையா?

தீண்டாமை என்கிற மாபாதகச் செயலை தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினர் முற்றிலுமாக  கைவிட்டு விட்டால் வன்கோடுமைச் தடுப்புச் சட்டமே தேவைப்படாதே! பொய்வழக்கு புலம்பல்களுக்கு இது ஒன்றுதான் மருந்து என்பது மருத்துவராகிய உங்களுக்கு தெரியாத ஒன்றா என்ன?

தொடர்புடைய பதிவுகள்.

தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்!