Showing posts with label பிள்ளை. Show all posts
Showing posts with label பிள்ளை. Show all posts

Wednesday, September 13, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

இடைநிலைச் சாதிகளின் தோற்றம்

கீழ்நிலைச் சாதிகளின் தோற்றம்  குறித்து ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் உயர் சாதியினர் எப்படித் தோன்றினர் என்ற கேள்வி எழுவது இயல்புதான். 

பிராமணர்கள்

ஐயங்கார், ஐயர், ஆச்சார்யா, தீட்சித், திவாரி, திரிவேதி, திக்கே, தாக்கூர், துபே, ஜெட்லி, ஜோஷி, ஷோரி, பாகவதர், பண்டிட், பாண்டே, பட், பதக், சுக்லா, மிஸ்ரா, ராய், வைத்தியா, வாஜ்பேயி, உபாத்யாயா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளாக பார்ப்பனர்கள் இருந்தாலும், அவர்கள் இன்றுவரை பிரம்மா எப்படிப் படைத்தானோ அப்படியே, பிராமண வருணமாகத் தங்களைக் கருதிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி 10) 

வடக்கே இமய மலை, தெற்கே விந்திய மலை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு அமைந்திருந்த ஆரியவர்த்த தேசத்தில், பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சனாதன தருமம் (மனு 2: 21, 22).

சத்திரியர்கள் சூத்திரர்களாக ஆன கதை

பார்ப்பன மேலாதிக்கம் நாலாதிசைகளிலும் விரிவடைய முயன்ற போது, பிராமணர்களை வணங்காததாலும், பூணூல் அணிவதைப் புறந்தள்ளியதாலும் சுற்றியிருந்த பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் ஆகிய பண்ணிரெண்டு நாடுகளைச் சேர்ந்த சத்திரியர்கள் வரவர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள் (மனு 10: 43, 44). 

எனவே, விந்திய மலைக்குத் தெற்கே ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட திராவிடப் பகுதிகளில் ஆட்சி செலுத்திய அனைத்து சத்திரிய மன்னர்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர். அது மட்டுமன்றி, சனாதனத்தை ஏற்க மறுத்த வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் உள்ளிட்ட அரசர்கள் ஆட்சியை இழந்து அழிந்து போனார்கள் (மனு 7: 41)

மேலும், நான்கு யுகங்களில், முதல் மூன்று யுகங்களான திருத, திரேதா, துவாபரா யுகங்களில் நான்கு வருணங்களும் இருந்தன. கி.மு 3102 இல் தொடங்கியதாக பார்ப்பனர்களால்  நம்பப்படும் கலியுகத்தில், கேடுகள் நிறைந்து விட்டதால், பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என பார்ப்பனர்கள் உறுதியாக இன்றுவரை நம்புகின்னர். எனவே, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட எங்கும், இன்று பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என்பது உறுதியாகத் தெரிகிறது. (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி-8, பக்கம் - 441). 

இடைநிலைச் சாதிகள்

தமிழ்நாட்டில் ஆசீவகம் காலம் தொடங்கி சங்ககாலம் வரையிலும் நான்கு வருணங்கள் கிடையாது. மாறாக இனக்குழுக்களை வழிநடத்திய தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியத் தலைவர்கள் பேரரசர்களாகவும் செயல்பட்டிருக்கக்கூடும். சனாதனத்தை ஏற்க மறுத்த இவர்கள் அனைவரும் சூத்திரர்களாக தரம் இறக்கப்பட்டு, இவர்களின் இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர் என்றுதான் கருத வேண்டி உள்ளது. 

இத்தகைய இனக்குழுக்களின் பிரிவினர்தான் இன்று வேளாளர்களாகவும் (பிள்ளை), முதலியார்களாகவும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களாகவும், நாயுடு-ரெட்டிகளாகவும், வன்னியர்களாகவும், முத்தரையர்களாகவும், கள்ளர் - மறவர் - அகமுடையர் உள்ளிட்ட‌ முக்குலத்து தேவர்களாகவும் அறியப்படுகின்றனர். இதில் நாடார் சாதி அடங்குமா என்ற கேள்வி ஒருசிலருக்கு எழக்கூடும். இது குறித்து தீண்டாமை என்ற தலைப்பில் பார்ப்போம்.

பிற்காலச் சோழர்களின் ஆட்சியிலும், அதற்கு அடுத்த காலத்திலும், மேற்கண்ட சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்ததால் "நாங்கள் ஆண்ட பரம்பரை" என்று உரிமை கோரி, தங்களைச் சத்திரியர்களாகக் காட்டிக் கொள்ள இன்று இவர்கள் முயல்கின்றனர். அதற்காக, கற்பனையான தளபுராணங்களை ஏற்கனவே ஒரு சிலர் உருவாக்கிக் கொண்டதோடு, இன்று வரலாற்றையும் புதிதாக திருத்தி எழுத முயல்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் சிற்றரசர்களாக இருந்திருந்தாலும், சனாதன தருமப்படி அவர்களும் சூத்திரர்களே; எனவே, அவர்களின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் இடைநிலைச் சாதியினரின் சந்ததியினரும் சூத்திரர்களே. 

சாதியப் படிநிலையில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர்நிலையில் உள்ள சைவப்பிள்ளைமார்களே, இன்றைய பார்ப்பனர்களின் சனாதன தருமப்படி சூத்திரவாளாகக் கருதப்படும் போது, படிநிலையில் அதற்கும் கீழே உள்ள வன்னியர்கள் உள்ளிட்ட பிற சாதியினர் எம்மாத்திரம்? இவர்கள் எல்லாம் வெறும் ஜூஜூபி!

அடுத்து தீண்டாமை குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

Saturday, December 17, 2011

பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!

”அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய மானியமாக 3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயினை விடுவித்து 
அம்மா ஆணை பிறப்பித்துவிட்டார்.

”ரூ.3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகச் செலவுகள், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், அடிப்படை வசதிகளை பராமரித்தல், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தமிழக குக்கிராமங்களின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இந்த நிதியில் இருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் விடுவிக்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.2,50,000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.30 லட்சம் நிதி விடுவிக்கப்படும். இது மட்டுமின்றி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஊரக அமைப்புகளுக்கான மாநில நிதி ஆணைய மானியம் மக்கள் தொகைக்கு ஏற்ப விடுவிக்கப்படும்.

"புதிதாக தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) உருவாக்கப்பட்டுள்ளதால் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குக்கிராமங்களை சென்றடைந்துவிடும். கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி செல்வது முழுவதுமாக தடுக்கப்பட்டுவிடும்.


என்ன? காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் கண்களில் தெரிகிறதோ! சற்று பொறுங்கள்!


உள்ளாட்சித் தேர்தல் முடிந்து சில மாதங்கள் உருண்டோடி விட்டன. வாக்குகளைப் பெற வேட்பாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமல்ல தங்கள் வளத்தையும் சேர்த்தே வாரி இரைத்தார்கள். ஆளும் கட்சி-எதிர் கட்சி என்கிற பாகுபாடின்றி அனைத்து வேட்பாளர்களுமே தங்கள் வசதிக்கேற்ப வாக்காளர்களை கவனித்தார்கள். வழக்கம் போலவே "ஆளும் கட்சிக்காரன் வந்தால்தான் நம்ம ஊருக்கு ஏதாவது செய்வான்" என்கிற நம்பிக்கையில் மக்களும் ஆளும் கட்சியினருக்கே வாக்களித்தனர்.

மற்ற பிற இடங்களில் சாதி - மத பலம் மற்றும் ஆளும் கட்சியினரின் உள்குத்து காரணமாக சில உதிரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர் கட்சியினரும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். 

வெற்றிக் களிப்பில் திளைக்கவா இவர்கள் முதல் போட்டார்கள்? போட்ட முதலை குறைந்த பட்சம் மும்மடங்காகவாவது எடுத்தால்தான் தங்களின் எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். அரசு கஜானா காலி என அம்மா அடிக்கடி சொல்லி வந்ததால் என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டிருந்த பிள்ளைகளுக்கு பால் வார்த்திருக்கிறார் அம்மா. பால் மடி வற்றினாலும் பிள்ளைகள் பட்டினியால் வாடுவதை எந்தத் தாயால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? 

தன் பிள்ளைகளுக்கு பால் வார்க்க ஊர்ப் பிள்ளைகளுக்கு பால் ஊத்தினார் - பால்விலை உயர்த்தப்பட்டது. பிள்ளைகளுக்கு தண்ணீர் கலந்த பால் கொடுத்தால் சளி பிடித்துக் கொள்ளுமாம். அதனால் சுண்டக் காய்ச்சிய பால்தான் வேண்டும் என பிள்ளைகள் அடம் பிடிப்பதால் அதற்காக ஆகும் கூடுதல் செலவை ஈடு கட்ட பேருந்திலும் கை வைத்ததால்தான் இப்போது கணிசமாக கல்லாக் கட்ட முடிகிறது. 

இப்போது தினம் தினம் கல்லா நிறைகிறது. பிறகென்ன? போட்ட முதலை பிள்ளைகள் எடுக்க வேண்டாமா? தன்னை அரியணையில் ஏற்றிவிட்ட பிள்ளைகள் குறைந்த பட்சம் போட்ட முதலையாவது எடுக்க வேண்டாமா? அதற்கான வழிதான் "தாய்" திட்டம்.

பிள்ளைகள் இனி சாக்கடையிலும் சந்தனம் எடுப்பார்கள். குடி நீரை பன்னீராக்கி கொப்பளிப்பார்கள். சாலை மேம்பாட்டில் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். தெரு விளக்குகளில் குளிர் காய்வார்கள். மொத்தத்தில் அம்மாவின் ஊட்டச் சத்தால் இனி பிள்ளைகள் வேகமாக வளந்துவிடுவார்கள். பிள்ளைகள் வளர்ந்தால் தானே தாயை கவனிக்க முடியும்.
பிள்ளைகள் இப்போது பாடத் தொடங்கிவிட்டார்கள்.
பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!
*****
தொடர்புடைய பதிவுகள்:
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..