Showing posts with label ஹோமியோபதி. Show all posts
Showing posts with label ஹோமியோபதி. Show all posts

Thursday, August 15, 2024

ஹோமியோபதி மருத்துவர் கொரட்டூர் சீனிவாசன் மறைந்தார்!

திருச்சி பெல் நிருவனத்தில் நான் பணியாற்றிய போது, போனஸ் தொடர்பான  ஒரு போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அது முதல் மூட்டு வலி என்னை ஆட்கொண்டு முடக்கிப் போட்டது. வேலூர் ஹோமியோபதி மருத்துவர் ஜக்ரியா அவர்களின் தொடர் கண்காணிப்பால் முடங்கிக் கிடந்த நான் மெதுவாய் மீண்டு வந்தேன். அது ஒரு மறுபிறப்பு. அதன் பிறகுதான் இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் புதிதாய் மீண்டும் பணிக்குச் சேர்ந்தேன். 

மூட்டு வலி இன்னும் முழுமையாய் நீங்கிவிடவில்லை என்பதால், பணிக்குச் செல்லும் போது நான் தாங்கித் தாங்கிதான் அலுவலகம் செல்வேன். அலோபதி மருத்துவம் என்னை அலசிப் பார்த்தது. சென்னை அப்பலோவில் 'போன் ஸ்கேனிங்' கூட எடுத்துப் பார்த்தார்கள். மூட்டு வலிக்கான காரணத்தையே கண்டறிய முடியாத போது, நம்பிப் பயனில்லை என்பதால் அலோபதியை கைவிட்டு மீண்டும் ஹோமியோபதியை நாடினேன். 

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் பணியாற்றிய 20 ஆண்டு காலத்தில். அலுவலகத்தைத் தாண்டி நான் அடிக்கடி சென்று வந்த இடம் சென்னை கொரட்டூர். ஞாயிற்றுக் கிழமைகளில் மாதம் தவறாமல் ஒரு நாள் அங்கு சென்று விடுவேன். கொரட்டூர் இரயில் நிலையத்திலிருந்து கொடிநடையாய் நடந்து சென்று பத்து நிமிடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை அடைந்து விடுவேன். நடக்க முடியாத போது தானியிலும் சென்றதுண்டு. அதன் பிறகு கொரட்டூரிலேயே வேறு வேறு இடங்களுக்கு அவர் மாறிய போதும் தொடர்ந்து நான் அங்கும் சென்று வந்தேன்.

அங்குதான் அவரது ஹோமியோபதி கிளினிக் இருந்தது. ஒரு துயரரை முதல் முறையாகப் பார்க்கும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு மேலே அவருடன் உரையாடுவார். நோய்க்கான காரணங்களைக் கண்டறிவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்.

நோய் குறித்த அவரது உரையாடல் அச்சமூட்டுவதாக இருக்காது; மாறாக நோயை எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலை, நம்பிக்கையைத் தூண்டுவதாகவே இருக்கும். நாம் கேட்கிற சந்தேகங்களுக்கு பொறுமையோடு பதில் அளிப்பார். அவரது உரையாடல் நோயோடு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி சமூக நடப்புகள் மீதும் இட்டுச் செல்லும். உலக நடப்புகள் குறித்தும் பேசுவார்.  அதனால்தானோ என்னவோ அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவருடனான உரையாடலே என்னை உற்சாகப்படுத்திவிடும் என்பதால், அதன் பிறகு ஹோமியோபதி மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? சில ஆண்டுகளுக்குப் பிறகு மூட்டு வலியிலிருந்து நான் முற்றிலுமாக விடுபட்டேன். 

எனது குடும்பமே அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. நாங்கள் எதிர்கொண்ட பல்வேறு குடும்பப் பிரச்சினைகளுக்கும் ஒரு மருத்துவராக, ஒரு ஆசானாக நின்று வழிகாட்டி இருக்கிறார். நான் பெரிதும் மதிக்கும் எனது பெரியப்பாவைப் போன்றவர் அவர். அவர் இல்லையேல் நான் என்றோ துவண்டு போயிருப்பேன். 

ஆம்! இன்று முதல் அவர் இல்லை. துயரத்தில் நான் துவண்டு போய் உள்ளேன். இத்துயரிலிருந்து நான் மீள, மீண்டும் அவரேதான் துணை புரிவார். ஆம், அவருடனான நினைவுகள் ஆற்றல் மிக்கது. அத்தகைய நினைவுகளே என்னைத் தூக்கி நிறுத்தும். 

ஹோமியோபதியர்கள் மத்தியிலே அவர் ஒரு கலங்கரை விளக்கம். அவர் ஒரு அரசு ஊழியராக இருந்தும் ஹோமியோபதியை முறையாகக் கற்றுப் பட்டம் பெற்றார். அதற்காகவே ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொண்டார். மருந்துகளை ஜெர்மனியிலிருந்தே தருவித்தார். 

குப்பி குப்பியாக பல மருந்துகளைக்  (multy medicine) கொடுத்து காசு பார்ப்போர் மத்தியில், ஹோமியோபதி மருத்துவக் கோட்பாடு கூறுவதுபடி மிகக் குறைந்த அளவு மருந்தை மட்டுமே (single dose) அவர் கொடுப்பார். அதற்காக அவர் 'சிங்கிள் டோஸ்' சீனிவாசன் என்றே அழைக்கப்பட்டார். கொரட்டூரிலேயே அவர் சிகிச்சை அளித்து வந்ததால் அவர் "கொரட்டூர் சீனிவாசன்" என்றும் அறியப்பட்டார். 
மிகக் குறைந்த அளவு கட்டணத்தையேப் பெற்றுக் கொள்வார். துயரர்கள் நம்பிக்கைக்காக, கூடவே பிளாசிபோவும் கொடுத்தனுப்புவார். 


சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு, இந்தியா ஏன் உலக அளவிலும் ஹோமியோபதி மருத்துவத் துறையில் அவர் பிரபலமானவர். ஆங்கிலத்தில் எண்ணற்ற மருத்துவக் கட்டுரைகளை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஹோமியோபதியைக் கற்றுக் கொடுப்பதில் மிகச்சிறந்த ஆசிரியர். எண்ணற்ற இளம் ஹோமியோபதி மருத்துவர்களை பயிற்றுவித்து நாட்டுக்கு அளித்தவர். 

எப்பொழுதும் என் நினைவில் நீங்கா இடம் பிடித்தவர் அவர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவரை நினைத்ததுண்டு. சென்று பார்க்கலாம் என்றுகூட ஆவல் எழுந்தது. ஐயகோ! என் செய்வேன்? இன்று அவர் மாண்டு விட்டதாக தோழர் ஒருவர் இரவு 8 மணிக்கு செய்தி அனுப்பி இருந்தார். காலையிலேயே தெரிந்திருந்தால் கூட அவரது உடலையாவது நேரில் பார்த்திருக்க முடியும். அந்த வாய்ப்பும் எனக்குக் கிட்டாமல் போய்விட்டது. 

என்னைப் பொருத்தவரை அவர் மறையவில்லை. என்னுள் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் இம்மண்ணில் இருக்கும் வரை நினைவுகளால் அவர் எனக்கு வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையோடு, ஹோமியோபதி மருத்துவர் ஐயா கொரட்டூர் சீனிவாசன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலுடன் என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.

பொன்.சேகர்

Sunday, February 2, 2014

‘திருடர்களை நல்லவர்களாக மாற்றும் அற்புத மருந்து!’

கர்பினிகள் – பச்சிளங் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை மக்கள் அதிகமாக முற்றுகையிடும் இடம் மருத்துவ மனைகளாகத்தான் இருக்கின்றன. காசு இல்லை என்றால் நாட்டு வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம்; போக்கு வரத்து செலவுக்கு கொஞ்சம் காசிருந்தால் அரசு மருத்துவ மனைகள்; ஓரளவுக்கு செலவு செய்ய முடியும் என்றால் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவ மனைகள்; எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு வசதி இருந்தால் கார்பரேட் மருத்துவ மனைகள் என மக்கள் மருத்துவ மனைகளை அன்றாடம் மொய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
 
புதிய நோயாளிகள் மட்டுமல்ல பழைய நோயாளிகளே மீண்டும் மீண்டும் மருத்துவ மனைகளை நாடிச் செல்வது ஒரு வழக்கமாகவே மாறி வருகிறது.
 
அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் யோகா & நேச்சுரோபதி என அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து வகையான மருத்துவ முறைகள் இருக்கும் போது எலக்ட்ரோபதி, மலர் வைத்தியம், ரெய்க்கி, அக்கு பிரஷர், அக்கு பங்க்சர்,  காந்த சிகிச்சை, தொடு சிகிச்சை (touch healing), செவி வழி தொடு சிகிச்சை, பிரானிக் ஹீலிங், தீ சிகிச்சை, நீர் சிகிச்சை (water theraphy) சுவை சிகிச்சை, உணவே மருந்து என பலவண்ண மருத்துவ முறைகள் நாள் தோறும் முளைத்த வண்ணம் உள்ளன.
 
இவை தவிர மூட்டு வலிக்கு முடக்கத்தான், கீல் வாதத்திற்கு வெள்ளெருக்கு, கிட்னி ஸ்டோனுக்கு வாழைத்தண்டு என வகை வகையான நமக்குத்  தெரிந்த கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என எதையும் நாம் விட்டு வைப்பதில்லை.
 
மண்ணோ - மாத்திரையோ அதைப்பற்றி கவலை இல்லை; ‘பிய்யைத் தின்றால் பித்தம் தீரும்!’ என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்; அதையும் தின்னத் தயாராகிவிட்டால் இதை அறிவுடமை என்பதா அல்லது அறியாமை என்பதா? என்று கேட்பதைவிட நோயின் பிடியிலிருந்து மீண்டால் போதும் என்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்  என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் இந்த பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு ஒரு சாரார் இராசிக் கற்களையும், சக்திக் கவசங்களையும் சந்தைப் படுத்தி வருகின்றனர்.  மற்றொரு சாராரோ பரிகாரங்களையும், தியானங்களையும் பரிந்துரைக்கின்றனர்.
 
இத்தகைய சூழலில்தான் எளிய அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் செலவு வைக்காத மருத்துவம் என்பதால் ஒரு சிலர் ஹோமியோபதி மருத்துவத்தை நாடுகின்றனர். ஹோமியோபதி மருத்துவத்தால் பயனடைந்த ஒரு சிலர் இம்மருத்துவத்தை பிரபலப்படுத்த இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதோடு மருத்துவ இதழ்களையும் வெளியிடுகின்றனர். அத்தகைய முயற்சியில் தஞ்சாவூரிலிருந்து கா.அரங்கராசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “இயக்கயியல் மருத்துவம்” என்கிற ஹோமியோ & சமூக நல இரு மாத இதழ் ஒன்றை சனவரி 2014 ல் கொண்டு வந்திருக்கிறார்கள்.
 
ஹோமியோபதி மருத்துவத்தை இவ்வுலகுக்கு அளித்த சாமுவெல் ஹானிமன் அவர்களைப் பற்றியும், ‘தொற்று நோய்க்கு தடுப்பு ஊசி அவசியம்தானா?’, ‘நோய்க்கு யார் காரணம் மனிதனா? மருத்துவமா?’, உடல் முழுக்க நீரில் மூழ்கிக் குளிப்பதே குளியல் என்கிற புதிய பரிமானத்தை விளக்கும் ‘எது குளியல்?’, ‘வயிற்றில் பூச்சித் தொல்லை’, ‘சுகர் ஒரு மாய வலை’, ‘நோய்க் கூறுயியல்’, ‘சுகருக்கு மருந்திருக்கா?’, ‘இதய நோய்க்கு இனிய தீர்வு’, ‘உயர் இரத்த அழுத்தம்’, ‘எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி’ உள்ளிட்ட கட்டுரைகளில் ஹோமியோபதியின் சிறப்புகளை பட்டியலிட்டுள்ளனர். ஆனால் அவ்விதழில் உறுத்தலாக இருந்த ஒரு பெட்டிச் செய்தியே  இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.
 
“ஒரு சிலருக்கு திருடுவதில் மிகுந்த ஆர்வம். அவர்களை எவ்வளவு திருத்தினாலும் திருந்த மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நல்லவர்களாக மாற்றும் அற்புத மருந்து” – அபிசிந்தியம் (absinthium). இதுதான் அந்தப் பெட்டிச் செய்தி.
 
இதைப் படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? திருட்டு ஆர்வத்தை ஒழிக்க சட்டங்கள் தேவையில்லை. காவல் துறை தேவையில்லை. போதனைகளும் உபதேசங்களும் தேவையில்லை. அபிசிந்தியம் கொடுத்தால் போதும் திருடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களாக மாறிவிடுவார்கள் என்றல்லவா தோன்றக்கூடும்!
 
ஹோமியோபதி மருத்துவ முறையில் கிளப்டோமேனியா (Kleptomania) என்றொரு மனக்குறி உண்டு.  இம் மனக் குறிக்கு சுமார் 31 ஹோமியோ மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
பொருளாதார ஆதாயம் மற்றும் தனது சொந்தத் தேவைக்கு என்றில்லாமல் ஒரு பொருளை திருடுவதற்கு ஒருவரிடம் ஏற்படும் தூண்டுதலை அல்லது  உந்துதலை அவரால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலையைத்தான் கிளப்டோமேனியா என்கிறார்கள். பொருள் சிறிதேயானாலும் திருட வேண்டிய பொருளை திருடி விட்டால் அலாதி இன்பம் அவர்களுக்கு. இது மூளை செல்களில் ஏற்பட்டுள்ள இரசாய மாற்றங்களின் விளைவால் உருவாகும் உளவியல் சார்ந்ததொரு மன பிறழ்சி. இதனை பொருளாதார ஆதாயத்திற்காகவும் மற்றும் தனது சொந்தத் தேவைக்காகவும் தெரிந்தே திருடுவோரின் மனநிலையோடு பொருத்திப் பார்ப்பது அபத்தமாகிவிடும்.
 
பெல்லோடோனா, கல்காரியா கார்பானிக்கா, பல்சட்டில்லா போன்ற பன்முகத் தன்மை கொண்ட மருந்துகள் முக்கிய மருந்துகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள போது மிகக் குறைந்த அளவே முக்கியத்துவமுடைய அபிசிந்தியம் மருந்தை திருடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களை நல்லவர்களாக மாற்றும் அற்புத மருந்தாக சித்தரிப்பது ஹோமியோபதியை தவறாகப் புரிந்து கொள்வதற்கு வழி வகுக்கும்.
 
மேலும் கிளப்டோமேனியா மனநிலை உள்ளவர்களுக்கு வேறு சில நோய்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இம்மனக்குறியை கருத்தில் கொண்டு அந்நோய்க்கான மருந்தை தேர்வு செய்து கொடுத்தால் அம்மருந்து சிறப்பாக வேலை செய்யும். இது மருந்தை தேர்வு செய்வதில் மனக்குறிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்கிற ஹோமியோபதி விதியோடு பொருத்திப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
எது சிறந்த மருத்துவம் என்பதற்கு மேலாக எத்தகைய மருத்துவக் கொள்கை இன்றைக்குத் தேவை என்பதே மக்களை நோய்ப்பிடியிலிருந்து விடுவிக்க உதவும். இது பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.
 
தொடர்புடைய பதிவுகள்:
  • அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு!
  • பார்த்திபன் கனவு!
  • நங்கைகளே! அழகை நகப்பூச்சில் தேடாதீர்கள்!
  • இதழ் முகவரி:
  • ஆசிரியர்
  • இயக்கயியல் மருத்துவம்
  • 15, பிரியா காம்ளக்ஸ்
  • நவநீதபுரம் அஞ்சல்
  • மணிமண்டபம் அருகில்
  • தஞ்சாவூர்
  • அலைபேசி: 8903563505
  • iyakkiyal@gmail.com

  • Tuesday, December 13, 2011

    கொழந்த அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!

    எமது தெருவில் புதுத் தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறக்கும் போதே ஒன்றே முக்கால் கிலோகிராம் எடைதான் இருந்தது. பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவர்கள் குடியிருக்கும் வீடு சற்றே வசதியானதுதான். ஒரு நடுத்தர வர்க்கத்துக்குரிய வசதிகள் அனைத்தும் அவர்கள் வீட்டில் இருக்கின்றன. அனைத்தும் இருந்தும் என்ன செய்ய?

    பச்சிளம் குழந்தை அழுத வண்ணம் உள்ளது. தாய்ப்பாலை குடிக்க மறுக்கிறது. ஆங்கில மருத்துவரைப் பார்க்கிறார்கள். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு "ஒன்றும் பிரச்சனை இல்லை, படிப்படியாக சரியாகிவிடும்" என்று சொல்லி சில மாத்திரைகளை கொடுத்து அனுப்புகிறார் மருத்துவர்.

    கொழந்தை அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!

    ஒரு வாரம் பார்க்கிறார்கள். குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. இவர்களுக்கும் அழுகை அழுகையாய் வருகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். கடைசியில் குழந்தையின் பாட்டி சொன்னபடி ஜோசியரை நாடுகிறார்கள்.

    ”தற்போது தங்கியிருக்கும் வீட்டு அமைப்பு சரியில்லை, அதனால்தான் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது,  குழந்தை அழுகையை நிறுத்த ஒரே வழி குழந்தையும் தாயும் வேறு வீட்டில் தங்க வேண்டும்” என்கிறார் ஜோசியர்.

    மருத்துவராவது குழந்தையைப் பார்த்துவிட்டு மருந்து சொன்னார். ஆனால் ஜோசியரோ குழந்தையையும் பார்க்கவில்லை; வீட்டையும் பார்க்கவில்லை. ஜாதகத்தைப் பார்த்தே தீர்வு சொல்லிவிட்டார். அதையும் நம்பினார்கள். தற்போது நான்கு வீடு தள்ளி இருக்கும் தங்களது நெருங்கிய உறவினர் வீட்டில் தாயும் சேயும் தங்கியுள்ளார்கள். ஆனால் குழந்தை அழுவதை மட்டும் நிறுத்தவில்லை. 

    இப்போது புது பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது. "ஏற்கனவே மூனு பொண்ணுங்கள வச்சுகிட்டு, ஒவ்வொருத்தரும் படிக்கிறதுக்கு எடம் பத்தாம கஷ்டப்படறோம். இப்ப இவங்கவேற,  இது எத்தினி நாளிக்கோ" என புலம்ப ஆரம்பித்துவிட்டார் வீட்டோட அம்மா.  

    இப்போது இந்த அம்மா தங்களது கஷ்டத்துக்கு ஜோசியரைப் போய்ப் பார்த்தா "இந்த வீடு சரியில்ல. வேற வீட்ல தங்கிக்கங்க" என்று சொல்வாரோ!

    அழுகைக்கான காரணத்தை குழந்தையால் சொல்ல முடியாது என்றாலும் அது தற்காலிகமானது. ஆனால் மனிதனின் அழுகை?

    அழாத மனிதன் ஒருவனை இவ்வுலகில் காண்பதறிது. வாய்விட்டு ஒருவர் பேசினால் அழுகைக்கான காரணங்களைக் கண்டறிந்து ஆறுதல் சொல்லலாம் அல்லது நோயினால் / காயம் பட்டதனால் வந்த அழுகை என்றால் மருத்துவம் பார்க்கலாம். அழுகை நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது.

    அழுகையும் ஹோமியோபதியும்

    அறிவுரை கூறும் போது,
    தனிமையில் இருக்கும் போது,
    கோபம் அடையும் போது,
    கவலையில் இருக்கும் போது,
    அன்பாய் பிறர் தன்னை அரவணைக்கும் போது,
    தன்னோடு பிறர் முரண்படும் போது,
    இருட்டைக் காணும் போது,
     நம்பிக்கை இழக்கும் போது,
    ஏமாற்றம் அடையும் போது,
    உணர்ச்சி வசப்படும் போது,
    எதிர் காலத்தை நினைக்கும் போது,
    பிறர் தொடர்ந்து தன்னைக் கவனிக்கும் போது,
    படபடப்பின் போது,
    கனவு காணும் போது,
    தான் கேட்டது எதுவும் கிடைக்காத போது,
    பிறர் மீது கருணை காட்டும் போது,
    பிறர் தனக்கு நன்றி கூறும் போது,
    விரத்தியடையும் போது,
    தனது துன்ப துயரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது,
    தனக்குள்ள நோய் பற்றி கூறும் போது

    என இப்படி பல்வேறு காரணங்களுக்காக நாம் அழத்தான் செய்கிறோம். இவற்றை எல்லாம் துயரருக்கான (நோயாளிக்கான) குறிகளாக கணக்கில் கொண்டு ஹோமியோபதி மருந்து கொடுத்தால் சரியாகி விடும் என்பது ஹோமியோபதி மருத்துவக் கோட்பாடு.

    பேசமுடியாத கைக்குழந்தைகள் சதா அழுத வண்ணம் இருப்பதை பார்க்கிறோம்.குழந்தை எதற்காக அழுகிறது? பசிக்காக அழுகிறதா,  பயத்தினால் அழுகிறதா,  வலியால் அழுகிறதா எனக் கண்டறிவது கடினம்.

    காரணம் தெரியாததால்தான் குழந்தையின் அழுகையை நிறுத்த வேறு வீட்டிற்கு தற்காலிகமாக மாறுகிறார்கள்.'ஒரம் வுழுந்திடிச்சி' என உலக்கையை வைத்து பாட்டிமார்கள் 'ஒரம்' எடுக்கிறார்கள்.

    ஆனால் குழந்தை அழும் தன்மைகளைக் கண்டறிந்து அதற்குரிய ஹோமியோபதி மருந்தைக் கொடுத்தால் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியும் என்கின்றனர் ஹோமியோபதி மருத்துவர்கள்.

    மனிதன் ஏன் அழுகிறான்?

    குழந்தை மட்டும் தொடர்ந்து அழவில்லை. மனிதன் இறக்கும் வரையிலும் அழுது கொண்டுதான் இருக்கிறான். இறந்த பிறகும் பிறரை அழ வைக்கிறான். ஒருவர் இறக்கும் போது அவர் மீதான பாசம் மட்டுமே நம் அழுகைக்குக் காரணமா? இறந்து போனவரை நம்பி வாழ்ந்தவர்கள் இனி என்ன செய்வார்கள் என்ற எதிர்கால அச்சம் நம் அழுகையை அதிகரிக்கிறதா? இப்படி ஒவ்வொரு அழுகைக்கும் உள்ளார்ந்த காரணம் இல்லாமலில்லை.

    எல்லோர் மீதும் நமக்குப் பாசம் வருவதில்லை. நமக்கு வேண்டியவர், நம்மைப் போன்றவர் என்கிற பொருளியல், கருத்தியல், உறவு ரீதியானதொரு பிணைப்பு பாசத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. பாசம் கூட ஒருவித தன்நலத்தின் வெளிப்பாடுதான். இன்றைய சமூகம்  தன்நலத்தைப் வலியுத்துகிறது. தன்நலம் பாசத்திற்கு வித்திடுகிறது. தன்நலமும் பாசமும் பிரிக்க முடியாதவை. தன்நலத்தைப் பேணும் வரை பாசமும் தொடரும். பாசம் தொடரும் வரை அழுகையும் நீடிக்கும். அழுகை வெறும் உணர்வு சார்ந்த ஒன்றல்ல. அது சமூகம் சார்ந்த ஒன்று.

    மருந்துகள் அப்போதைக்கான அழுகையை வேண்டுமானால் நிறுத்தலாம். ஆனால் அழுகைக்கான காரணங்கள் புற உலகில் நீடிக்கும் வரை அழுகைக்கு முடிவேது?

    Thursday, December 16, 2010

    நங்கைகளே! அழகை நகப்பூச்சில் தேடாதீர்கள்!

    குழந்தைகளின் கை, கால் விரல் நகங்களுக்கு பல வண்ணப் பூச்சுப்பூசி (nail polish) அழகு பார்ப்பதுண்டு. ஆனால் இன்று இதுவே பெண்களிடம் அழகுக் கலை கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. பளபளக்கும் பல வண்ணங்களில் பல்வேறு நிறுவனங்களின் நகப்பூச்சுகள் சந்தையில் குவிந்துள்ளன. பெண்களின் அழகை அதிகப்படுத்த நகப்பூச்சுகள் அவசியம் என பலவாறாய் நம்பச் செய்து வணிகத்தைப் பெருக்கும் போட்டா போட்டி சந்தையில் நிலவுகிறது. அழகாய்த் தோன்றினால் தன்னம்பிக்கை பிறக்குமாம். அதற்காகத்தான் அழகுக் கலையே இன்று ஒரு படிப்பாக உருவெடுத்துள்ளது.

    நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி வருவதால் பெண்களையும் போகப் பொருளாகப் பார்க்கும் சிந்தனைப்போக்கு ஆண்களிடையே அதிகரித்துள்ளது. ஆண்களின் போகப் பொருள்தான் பெண் என பறைசாற்றும் வகையில்தான் சில பெண்களின் அழகுணர்ச்சி அமைந்துள்ளது. கால் விரல் நுனியிலிருந்து உச்சஞ்தலை மயிர் விரை அலசி ஆராய்ந்த பிறகே பெண் அழகானவளா என முடிவு செய்யும் ஆண்களும் அதிகரித்துவிட்டனர். தான் அழகானவள் என்று ஆண்களிடம்  தனது அழகை நிலைநாட்ட முயல்வது மட்டுமல்ல உன்னைவிட நானே அழகு என்று பிற பெண்களோடு ஒப்பிட்டு தன்னை உலக அழகியாக கருதும் மனநிலைக்கும் சில பெண்கள் ஆளாகி உள்ளனர்.

    நகம் நம் அகத்தின் முகம்பார்க்கும் கண்ணாடி என்பார்கள். ஒருவரின் நகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே அவரின் ஆரோக்கியத்தை அளவிட முடியும். 
    • வெள்ளை நிற நகம் (nails: white) 
    • நகத்தில் வெண்புள்ளிகள் (nails: white:spots)  
    • கருப்பு நிற நகம் (discoloration-blackness)
    • நீல நிற நகம் (nails: bluness)
    • சாம்பல் நிற நகம் (nails: gray)
    • சிவப்பு நிற நகம் (nails: red)
    • கருஞ்சிவப்பு நகம் (nails: red: black)
    • மஞ்சள் நிற நகம் (nails: yellow) 
    • ஊதா நிற நகம் (nails: purple)
    • வெளிறிய நீல நிறமான நகம் (nails: livid)
    • சொரசொரப்பான நகம் ((roughness: fingernails)
    • உலர்ந்த நகம் (dryness: fingers: nails: about) 
    • கடினத்தன்மையுள்ள நகம் (nails: hardness)
    • நகத்தில் வீக்கம் (inflammation-fingers-nails) 
    • நகத்தில் நமைச்சல் (itching:fingernails)
    • நகம் மரத்துப் போதல் (nails: numbness, tingling-fingers-nails)
    • நகத்தின் மென்மைத் தன்மை (soft nails)
    • தடித்த நகம் (thick-nails)
    • மெலிந்த நகம் (thin nails)
    • நகத்துக்கடியில் ரத்தக்கட்டு (nails: blood settled under nails)  
    • ஒளியிழந்த (nails: dark)
    • உணர்ச்சியற்ற நகம் (horny.fingernails)
    • எளிதில் உடையக்கூடிய நகம் (brittle nails)
    இப்படி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். இந்த மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன? உடலியக்கச் செயல்பாட்டில் எற்படும் கோளாறுகளே நகத்தில் குறிகளாத் தோன்றுகின்றன. நகப்பூச்சு பூசி இவைகளை மறைத்துவிட்டால் நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிய முடியும்?

    உடலியக்கச் செயல்பாட்டில் கோளாறுகள் ஏற்பட்டால் முதலில் அவை நம் உடலின் வெளிப்பகுதியில், அதாவது நம் உடலின் முக்கியத்துவமற்ற பகுதிகளில் குறிகளாக வெளிப்படுகின்றன. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் உடலியக்கச் செயல்பாட்டுக் கோளாறுகள் முதலில் நகம், முடி, தோல் ஆகிய பகுதிகளில்தான் வெளிப்படும். இவற்றை அலட்சியப்படுத்தினாலோ, மூடி மறைத்தாலோ, மருத்துவம் பார்க்காமல் விட்டாலோ உள்ளுக்குள் ஏற்பட்ட கோளாறு மேலும் முற்றி அதற்கடுத்த முக்கிய உறுப்புகளை நோக்கி வளரும். இதுதான் உயிர்வாழ்தலின் உடலியக்க விதி. (survival mechanism). இதைத்தான் ஹோமியோபதி மருத்துவம் தெளிவு படுத்துகிறது.

    நகப்பூச்சு போடும் பெண்களே! நீங்கள் உங்களை அழகுபடுத்திக்கொள்வதாகக் கருதி நகங்களில் மேல்பூச்சுப்பூசி நோய்களை மறைத்து உள்ளமுக்குகிறீர்கள். பின்னாலிலே வரும் பெரு நோய்க்கு வழி ஏற்படுத்துகிறீர்கள்.

    ஊரான்.