Showing posts with label BJP. Show all posts
Showing posts with label BJP. Show all posts

Sunday, January 14, 2024

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்?

பார்ப்பனியம் கோலோச்சிய மன்னராட்சி காலங்களில், ஒடுக்கப்பட்ட மற்றும் சூத்திர சாதி மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவெங்கும், ஏன் பார்ப்பனியம் கோலோச்சிய எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை. 

நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் தற்குறிகளாக இருந்ததற்குக் காரணம் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதனால்தான். இன்றைய 'சீனியர் சிட்டிசன்கள்' இதை நேரடியாகக் கண்டவர்கள்.

மராட்டியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கொடுக்க முயன்ற ஜோதிராவ்-சாவித்திரி பாய் புலேயின் போராட்டங்கள் இதைத்தான் உணர்த்துகிறது. தமிழ் நாட்டில் நீதிக் கட்சி, அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் கல்வியை பரவலாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அவர்களின் காலனி ஆதிக்கத் தேவைக்காக கல்வி அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு திராவிட இயக்கங்களைக் குறை கூற புறப்பட்ட சங்கிக் கூட்டம், 

"திராவிட இயக்கம்தான் தமிழர்களுக்குக் கல்வி கொடுத்ததா? அதற்கு முன்னர் தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கவில்லையா? சங்க இலக்கியங்களைப் படைக்கவில்லையா? பக்தி இலக்கியங்களைப் படைக்கவில்லையா?" என்று எதிர்வாதம் செய்கின்றனர். 

சில தமிழ் தேசிய அரைகுறைகளும், நாம் தமிழர் சீமானின் தம்பிகளும் இதை அப்படியே வாந்தி எடுக்கின்றனர். சீமானின் தந்தை யாக்கோபுவும், அவரது பாட்டனும் முப்பாட்டனும்,  ஏன் வள்ளுவனைப் போல, ஔவைப் பாட்டியைப் போல, கம்பனைப் போல  இலக்கியங்களைப் படைக்க முடியவில்லை? இலக்கியம் இருக்கட்டும், குறைந்த பட்சம் கைச்சாத்தாவது இடத் தெரிந்ததா? இதற்கெல்லாம் விடை தேடாமல் விடலைத்தனமாக பேசுவதால் யாருக்கு இலாபம்?

தமிழ் செழித்து விளங்கியதும், சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டதும் பார்ப்பனியம் கோலோச்சாத காலகட்டத்தில். ஒரு காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கிய தமிழ்ச் சமூகம், இடையில் தற்குறிகளாக மாறியதற்கு பார்ப்பனியம்தான் காரணம்; சனாதனம்தான் காரணம் என்பதை மூடி மறைப்பதற்காக, திராவிட இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கின்ற வேலையை சங்கிக் கூட்டம் செய்கிறது. 

இவர்கள் திராவிட இயக்கத்தை வசை பாடுவது என்பது, மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவையும் வசை பாடுவதற்கு ஒப்பாகும்.

சனாதன-பார்ப்பனிய எதிர்ப்பின்  அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இன்றளவும் இருப்பது திராவிட கருத்தியல்தான். திராவிடக் கருத்தியலை ஒழித்துக் கட்டினால், பார்ப்பன எதிர்ப்பு மட்டுப் பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கருதுகின்றனர். 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எதிரான, சனாதனக் கோட்பாடு, அதாவது இந்து மதக் கோட்பாடு நடைமுறையில் இருக்கும் வரை, அதாவது சாதியும், தீண்டாமையும் நீடிக்கும் வரை திராவிடக் கருத்தியல் தேவைப்படுகிறது. 

சாதியும், தீண்டாமையும் சரியானது, அவசியமானது, தேவையானது என்பதுதான் சனாதனத்தின் மையக் கருத்து. இதை மேலும் உயிர்ப்பிக்கவும் நிலைநாட்டவும் பார்ப்பனர்கள் விரும்புகின்றனர். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் பாரதிய ஜனதா கட்சி. அதை பார்ப்பனிய ஜனதா கட்சி என்று அழைப்பதுதான் சாலப் பொருந்தும். 

மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது பார்ப்பனிய மீட்டுருவாக்கத்தின் பொற்காலம். இந்த 10 ஆண்டு காலத்தில் கோவில்கள் பெருகின. கோவில்கள் பெருகினால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும்தான் நிறையும்.

அரசு நடத்தும் ஆலைகளும், கல்விச்சாலைகளும் இழுத்து மூடப்பட்டு ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையும் வேலை வாய்ப்பும் பறிக்கப்பட்டு வருவதை கடந்த 10 ஆண்டுகளில் நிறைவே பார்த்து விட்டோம்.

இத்தகைய மக்கள் விரோத, பார்ப்பன பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் பேசுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதற்கு ஒப்பாகும்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்? நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.

ஊரான்

Thursday, September 21, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-13, இறுதிப் பகுதி

இதுவரை சனாதான தருமம் குறித்து மிக சுருக்கமாகவே பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். சனாதன தருமத்தின் மூல நூல் மனுதருமம் என்பதால் பெரும்பாலும் அதிலிருந்தே மேற்கோள்கள் காட்டி உள்ளேன். 

சனாதன தருமத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லை. இதன் விளைவாகத்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் இன்றளவும் கோலோச்சுகிறது. 'இந்து சாதி முறை, தேச வளர்ச்சிக்கு மகப் பெரிய இடையூறாக இருக்கிறது. இந்தியாவில் 75% மக்கள் உரிமை இழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளதால், இந்தியா இறந்துபட்ட நாடு என்ற நிலையை அடையாவிட்டாலும், சிதைந்து வரும் நாடாக ஆயிற்று' என்பார் அம்பேத்கர் (தொகுதி 7). 

சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது?

பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பிறகும், ஒரு இந்து தனது வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஜாதகம் கணித்தல், வலைகாப்பு, திருமணச் சடங்குகள், கிரகப்பிரவேசம், பிறப்பு இறப்புச் சடங்குகள், யாகம் வளர்த்தல், திதி கொடுத்தல், புனித யாத்திரை, பரிகாரம் தேடுதல், கோவில்களுக்குச் சென்று வழிபடுதல் உள்ளிட்ட எண்ணற்ற சடங்குகள் சம்பிரதாயங்களுக்குப் பின்னே புரோகிதர் இருக்கிறான். இதன் மூலம் ஒரு பக்கம் நமது வருவாயின் ஒரு பகுதியை புரோகிதன் பறித்துக் கொள்வதோடு சனாதன தருமத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறான். 

சனாதனத்தைப் பலவீனப் படுத்த...

வாழ்வின் சுக-துக்க நிகழ்வுகளுக்கு புரோகிதனை அழைக்காதீர்கள். குடும்பப் பெரியோர்களைக் கொண்டு முடித்துக் கொள்ளுங்கள். அதிலும், சனாதான தருமத்தின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளி மாற்று முறைகளைக் கைக்கொள்ளுங்கள். பயிரிடுதலை இழி தொழில் (மனு 10: 84) என்று வசைபாடி, உழைக்காமல் உண்டு கொடுக்கும்  புரோகிதத் தொழிலை விட்டு பார்ப்பனர்கள் வெளியேறட்டும்.

பக்தி உள்ளவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள். சனாதனத்தின் கோட்டைகளாக இருக்கும் கோவில்கள் அர்ச்சகனோடு புதைந்து போகட்டும். 

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்ப-துயரங்களுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க முயற்சிப்போம். 

அகமண முறைதான் சாதி தோன்றுவதற்கும், சாதியக் கட்டமைப்பு நீடிப்பதற்கும் அடிப்படை என்று அம்பேத்கர் அவதானித்தாலும், புறச்சாதியில் கலப்பு மணம் புரிவோர், திருமணத்திற்குப் பிறகு சாதியையும் சேர்த்தே சுமப்பதால், சாதி அவர்களை விட்டு அகலவில்லை. ஆனாலும், காதல் திருமணங்கள், சாதியக் கட்டமைப்பில், விரிசலை ஏற்படுத்துவதால், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

சுயமரியாதையோடு வாழ...

நூறு வயது சத்திரியனைவிட பத்து வயது பிராமணனே மரியாதைக்குரியவன் (மனு 2: 135) என்று சொல்லும் சனாதனத்தை ஏற்று, பார்ப்பனப் பொடியன்களின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆசிபெறும், ஆடு அண்ணாமலையைப் போல சுயமரியாதையிழந்து மானங்கெட்டு வாழாமல், நெஞ்சை நிமிர்த்தி சுயமரியாதை உள்ள மனிதனாய் வாழப் பழகிக் கொள்வோம்.


கல்வியில் முன்னுரிமை

பார்ப்பனரல்லாத பிற சாதியினர், பெண்கள் உள்ளிட்ட தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக அரசுத் துறைகளில், வேலை வாய்ப்புகளைப் பெறும்போதுதான் அங்கே நீடிக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்த முடியும். 

2024 நாடாளுமன்றத் தேர்தலில்...

சனாதனத்தை மீட்டெடுக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவது உடனடி அவசரக் கடமையாக என்பதால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வது சனாதானத்திற்குக் கொடுக்கும் ஒரு பெரிய அடியாக இருக்கும்.

மனமாற்றமா? போராட்டமா?

மக்களின் அன்றாட வாழ்வில் சனாதனக் கருத்துக்களைப் புகுத்தி, அவர்களை இந்து என்ற சட்டகத்திற்குள் அடைத்து, இப்படித்தான் ஒரு இந்து வாழ வேண்டும் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை இந்து மதத்திற்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது சனாதனம்.

இந்து சமூகத்தில் நிலவும், சாதியக் கட்டமைப்பே, மன்னராட்சி-நிலவுடமை காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சுரண்டல் வடிவமாகும். ஒவ்வொரு பிரிவினருக்குமென ஒரு தொழிலைத் தீர்மானித்து, அவர்கள் அந்தத் தொழிலைத்தான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வரையறுத்தது, குலத்தொழில் முறையிலான ஒருவகை வர்க்கப் பிரிவினையாகும். அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை தொடர்ந்து சுரண்டுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மோடி அரசு இன்று கொண்டு வந்துள்ளது.

தீண்டாமை உள்ளிட்ட இந்து மத நம்பிக்கைகள், கருத்தளவில் நீடிக்கும் வெறும் உளவியல் பிரச்சனையா, மனதளவில் மாற்றிக் கொள்வதற்கு? அது அவனது மத நம்பிக்கையோடு தொடர்புடையது. விதிவிலக்காக, இந்து மத நம்பிக்கைகளை கைவிட்ட சொற்பமான ஒரு சிலர் வேண்டுமானால் மாறக்கூடும். ஒட்டுமொத்த மக்களையும் அப்படி மாற்றிவிட முடியாது.

கருத்துத் தளத்தில், சனாதன தருமம் சமூக கட்டமைப்பின் மேல் தளத்திலும், வர்க்கப் பிரிவினை என்ற அடிப்படையில் சமூகத்தின் அடிக்கட்டுமானத்திலும் நீடிப்பதால், மதத்திற்கு எதிரான சீர்திருத்தப் போராட்டங்கள் மூலமாகவும், சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்கின்ற வர்க்கப் போராட்டங்கள் மூலமாகவும்தான் சனாதனத்தை முற்றிலுமாக வீழ்த்த முடியும். 

சீர்திருத்தமும் வர்க்கப்போராட்டமும்

பெண் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம், சமத்துவபுரங்கள், பார்ப்பனரல்லாதோருக்கான இட ஒதுக்கீடு-குறிப்பாகப் பெண்களுக்கான தனி ஒதுக்கீடு போன்ற சில சீர்திருத்த நடவடிக்கைகள் சனாதனத்தில் பெரும் உடைப்பை ஏற்படுத்துவதால், அவற்றை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அதே வேளையில், உழைப்புச் சுரண்டலிலிருந்து ஒட்டு மொத்த மக்களையும் விடுவித்து சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை உத்தரவாதம் செய்யும் பொதுவுடமைச் சமூகத்தை அமைப்பதற்கான பாதையில் முன்னேற வேண்டும். 

சனாதான தருமம், அதாவது, இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும், சாதி இருக்கும் வரை தீண்டாமை நீடிக்கும். சனாதன தருமம் இல்லாதொழியும் போதுதான் தீண்டாமையும் ஒழியும்.

மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் போது, மதத்தின் தேவையும் முடிவுக்கு வரும். இது, இந்து மதம் உள்ளிட்ட எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆனால் இருக்கின்ற மதங்களிலேயே ஆகக் கொடியது இந்து மதம் என்பதால், அதை எவ்வளவு விரைவில் வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவில் வீழ்த்த வேண்டும்.

சனாதனத்திற்கு எதிரானப் போராட்டம் கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் தங்களுடைய நூல்களையேத் திருத்தத் தொடங்கி விட்டார்கள். நான்காவது வருணத்தவர்கள் சூத்திரர்கள் என்று நேற்று வரை புத்தகம் போட்டவர்கள் இன்று அதை வேளாளர்கள் என்று திருத்திப் போடுகிறார்கள். 

வருணப் பிரிவுகள், ஒருவரின் பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதல்ல; மாறாக, அது அவர்களின் செயலால், குணத்தால் தீர்மானிக்கப்படுவது என்று கதை அளந்து கொண்டிருக்கிறார்கள் சனாதனிகள். "வருணங்களை ஒருவரின் குணத்தைக் கொண்டு தீர்மானித்தால், கடைசியில் வருண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வருண ஏற்பாடு என்பது குலைந்து போய்விடும். ஆகவே, செயலினால் மட்டும் வருண அமைப்பைத் தீர்மானிப்பது சரியல்ல" (ஸ்ரீமத் பகவத் கீதா, பக்கம்: 274, நாக்பூர் வெளியீடு) என்று வெளிப்படையாகவே தெளிவுபட்டுவிட்டது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம். 

கீதையையே திருத்தி எழுதுபவர்கள், சனாதனத்தின் இழிவுகளை மூடி மறைக்க நாளை எதையும் செய்யத் துணிவார்கள்! 

2022 இல் கீதை, நாக்பூர் வெளியீடு

1919 இல் மனுதருமம்

அவர்கள் சொல்வது போல, சனாதனம் அழிவில்லாதது; என்றும் நிலைத்திருப்தல்ல. மாறாக, உடன் கட்டை ஏறுதலுக்குத் தடை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு உள்ளிட்ட எண்ணற்ற சனாதனப் பழக்க வழக்கங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சனாதனத்தின் ஒரு பகுதி வீழ்த்தப்பட்டுள்ளது. 

Hence, sanatan is not eternal. It should be eradicated as soon as possible.

சனாதனம் குறித்த விரிவான விவாதத்திற்கு வித்திட்ட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!

வணக்கம்!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, September 12, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

இந்திய வரலாற்றில் பார்ப்பனியம்

மனித குல வரலாற்றில், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு சமூகக் கட்டமைப்பை இந்தியாவில் மட்டும்தான் காண முடிகிறது. ஹரப்பா மற்றும் சிந்து சமவெளி நாகரிகக் காலகட்டத்தில் (கி.மு 3000), ஒரு சிறந்த நகர நாகரிகம் இருந்ததாக வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. ஆனால், நாடோடிக் கூட்டமாக வாழ்ந்த ஆரியர்களின் வருகைக்குப் பிறகான வேத காலத்தில் (கி.மு.1750) இந்தியாவின் சமூகக் கட்டமைப்பே தடம் மாறுகிறது. 

பிறப்பின் அடிப்படையில், மனிதர்களை நான்கு வருணங்களாகவும், வருணங்களைப் பல்வேறு சாதிகளாகவும் பிரித்து,  அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஒரு கொடுங்கோன்மை வடிவிலான சமூகக் கட்டமைப்பைப் பார்ப்பனர்கள் உருவாக்குகின்றனர். பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிராக மகாவீரரும், கௌதம புத்தரும் மக்களை மீட்டெடுத்து சமத்துவத்தை போதிக்கின்ற சமண மற்றும் பௌத்த நெறி வாழ்வியல் முறைகளைத் தோற்றுவிக்கின்றனர் (கி.மு.600).

பார்ப்பனியத்தின் பொற்காலம்

சமண-பௌத்த நெறிகளைப் பின்பற்றிய மௌரியர்களின் ஆட்சிக் காலம் வரை (கி.மு 322) சீராகச் சென்று கொண்டிருந்த இந்தியச் சமூகத்தில், புஷ்யமித்திரன் காலத்தில் (கி.மு 185) மீண்டும் பார்ப்பன மேலாதிக்கும் தலை தூக்குகிறது. குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (கி.பி 320-551) பார்ப்பனியம் உச்சத்தை தொடுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பார்ப்பன மேலாதிக்கத்தை நியாயப்படுத்துகின்ற பல்வேறு புராணங்களும், சாஸ்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. அதனால்தான் குப்தர்களின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று புகழ்கின்றனர் பார்ப்பனர்கள். 

அதன் பிறகு, சாளுக்கியர்களின் ஆட்சி (கி.பி 600) சில காலம் இருந்தது. இதைத் தொடர்ந்து கஜினி முகமது (கி.பி 1002) படையெடுப்பு மற்றும் முகமது பின் துக்ளக் உள்ளிட்ட சுல்தான்களின் ஆட்சி (1306), இடையில் விஜயநகரப் பேரரசு (கி.பி 1336), பிறகு முகலாயர்கள் ஆட்சி (1527) என, இந்தியா, இஸ்லாமியர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி (கி.பி 1664) மற்றும் பேஷ்வாக்களின் (கி.பி 1657) ஆட்சிக்காலத்தில், அதிலும் குறிப்பாக பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில்தான் பார்ப்பனக் கொடுங்கோன்மை மீண்டும் உச்சத்தைத் தொட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவை தங்களது ஆளுகையின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் (கி.பி 1857) சில கொடூரமான பார்ப்பனிய நடைமுறைகளைத் தடை செய்தனர். 

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சி அதிகாரம் கை மாறிய பிறகு (கி.பி.1947), காங்கிரஸ் கட்சியும், இடையில் ஜனதா கட்சியும் ஆட்சியில் இருந்த போதும் பார்ப்பனிய மேலாதிக்கம் தொடரவே செய்தது. இன்று மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனிய மேலாதிக்கும் மீண்டும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு வரலாற்றில் பார்ப்பனியம்

கீழடி நாகரீகமே (கி.மு 600) தமிழ் நாட்டின் தொன்மையான நகர நாகரீகம் என்று சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோரின் சமகாலமாகக் கருதப்படும் தொல்காப்பிய காலகட்டத்தில் (கி.மு 711), தமிழ்நாட்டில் மற்கலி கோசாலர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஆசிவக நெறிமுறை தமிழ்நாட்டில் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனாலும், சங்க காலத்திலும், முற்கால மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலும் (கி.மு 600) பார்ப்பனிய மேலாதிக்கத்தின் தாக்கங்கள் தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் இருப்பதைக் காண முடிகிறது.

ஆசீவகம்

பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி 300-600) தலை தூக்கிய பார்ப்பனிய மேலாதிக்கம், சமண மற்றும் பௌத்த நெறிமுறைகளைப் பின்பற்றிய களப்பிரர் ஆட்சிக் காலத்தில் (கி.பி 250-600) சற்றே மௌனித்து, பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில், அதிலும் குறிப்பாக இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம், பார்ப்பனர்களின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. 

சமண நெறிமுறைகளை வீழ்த்திவிட்டுத் தோன்றிய பக்தி இயக்கம் (கி.பி 600-1300), சைவம் மற்றும் வைணவம் என இருவேறு பிரிவுகளாக செயல்பட்ட காலத்தில், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம், திருப்புகழ் உள்ளிட்ட சைவ நெறி நூல்கள் நாயன்மார்களாலும், நாச்சியார் திருமொழி, திருப்பாவை உள்ளிட்ட வைணவ நூல்கள் ஆழ்வார்களாலும் இயற்றப்பட்டன. கம்பராமாயணம் இந்தக் காலகட்டத்தில்தான் படைக்கப்பட்டது. பார்ப்பனிய மேலாதிக்கத்தில் சில சீர்திருத்தங்கள் மட்டுமே இந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்டன.

அதன் பிறகு, தமிழ்நாட்டில் சில இடங்கள் மராட்டியர்களின் ஆளுகையிலும், பல இடங்கள் நாயக்கர்கள் ஆளுகையிலும், இருந்த காலகட்டத்திலும், பார்ப்பனிய மேலாதிக்கும் தொடரவே செய்தது. பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகத் தோன்றிய நீதிக் கட்சி ஆட்சி காலத்தில், பார்ப்பனிய மேலாதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் தலைதூக்கும் பார்ப்பனிய மேலாதிக்கம்

தமிழ்நாட்டில், இராஜகோபாலாச்சாரி தலைமையிலான ஆட்சியின் போது தலை தூக்க முயன்ற பார்ப்பனியம், திராவிட இயக்கக் கருத்தியல் செல்வாக்கு அடைந்ததன் விளைவாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி உருவான பிறகு, சற்றே அடக்கி வாசிக்கத் தொடங்கியது. நடிகை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில், பார்ப்பனியம் குதூகலிக்கத் தொடங்கியது.  தமிழ் நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தபோதிலும், டெல்லியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடப்பதால், தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் இன்று கொக்கரித்து வருகின்றனர்.

பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராக 2000 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தர் காலத்தில் தொடங்கிய போராட்டம், இடையில் மராட்டியத்தில் மகாத்மா ஜோதிராவ் புலே, வடக்கே சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், கர்நாடகாவில் பசவண்ணா, கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் சித்தர்கள், அய்யா வைகுண்டர், வள்ளலார், தந்தை பெரியார் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட போதும், பார்ப்பனிய மேலாதிக்கம் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. 

மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்களின் கோட்பாடு, எப்படி மீதமுள்ள 97 சதவீத மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது? அதற்கான பின்னணி என்ன? உண்மையிலேயே அவர்களின் கோட்பாடு மக்களுக்கானதுதானா என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Friday, September 23, 2011

கரு நாடக மேடையில் பாசமழை பொழியும் பாரதமாதா!

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.50 000 கோடி மதிப்பிலான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சட்ட விரோதமாக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடத்தப்பட்டுள்ளன.

இம் மூவரும் ஒரே அமைச்சரவையில் அமைச்சர்களாம்.

அவர்கள் உட்காருவதும் உறங்குவதும் ரூ.45 கோடி மதிப்புடைய தங்கத்திலான இருக்கைகள் மற்றும் படுக்கைகளில்தானாம். 

அவர்கள் உறங்கும் அறையில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கும் ரூ.100 கோடி மதிப்பிலான வைரக் கிரீடம்.

ரெட்டி உடன் பிறப்புகளில் ஒருவரான ஜனார்தன ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்குச் சார்த்திய ரூ.40 கொடி மதிப்பிலான வைரம் பதித்த கிரீடம்தான் இது. இது போன்ற ஒன்றுதான் பெல்லாரியில் அவரது இல்லத்தில் இருப்பது. திருப்பதி ஏழுமலையானுக்குக் கிடைத்த எப்போதுமில்லாத மிகப்பெரிய ஜாக்பாட் இதுதானாம். 

நடுவன் புலனாய்வுப் பிரிவு (CBI) கண்டெடுத்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கரண்டிகள்.


பெல்லாரியில் இருக்கும் ரூ.120 கோடி மதிப்பிலான அவர்களது மாளிகை.


பெல்லாரிக்கும் பெங்களூருவுக்கும் மதிய உணவு மற்றும் இரவு விருந்துக்குக்கூட ரெட்டி உடன் பிறப்புக்கள் ஹெலிகாப்டரில்தான் பயணிப்பார்களாம்.


உலகின் அதிநவீன சொகுசுக் கார்கள் ரெட்டி உடன்பிறப்புகளின் வீட்டில் எப்போதும் அணிவகுத்திருக்குமாம்.

பிள்ளைகள் என்னதான் குற்றமிழைத்தாலும் எந்தத் தாய்தான் விட்டுக் கொடுப்பாள்? பாரதத் தாய் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?

தழைக்கட்டும் தாய்ப்பாசம்!
ஓங்கட்டும் பாரதத்தின் பெருமை.
பாரத் மாதா கி ஜே!