Saturday, July 20, 2024

நாளேடுகளில் நாட்டு நடப்பு!

"வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட சில துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடம் என பெருமைபட்டுக் கொள்கிறது திராவிட மாடல் அரசு".

ஆனால், அதேவேளையில், பாலின சமத்துவம், தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், பசிப்பிணி அகற்றுதல் உள்ளிட்ட சில துறைகளில் உள்ள வளர்ச்சி பாதியைக்தானே தாண்டி உள்ளது.

வட இந்திய நோஞ்சான்களோடு ஒப்பிட்டு, நான்தான் பயில்வான் என பெருமிதம் கொள்வதால் என்ன பெருமை இருக்கு? மேற்கண்டத் துறைகளிலும் 100க்கு 100 சாதனை புரிந்தால் பெருமைபட்டுக் கொள்ளலாம். அதை நோக்கிப் பயணக்குமா திமுக அரசு?

*****

"இட ஒதுக்கீடு பிரச்சனை. வங்கதேசத்தில் கலவரம்! கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி. பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் சுமார் 1000 மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்".

வடஇந்தியாவின் கல்வித் தரத்தைவிட வங்கதேசக் கல்வித்தரம் உயர்ந்தது என்பதனால்தானே வங்கதேசத்திற்குப் படிக்கச் செல்கிறார்கள்.

வடக்கு இன்னும் வளரவில்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?

*****

"கள்ளச்சாரய விற்பனையைத் தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டி ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் அதிமுக-வினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்".

ஆட்சிகள் மாறும்போது கள்ளச்சாராய வியாபாரமும் கைமாறும் என்பதுதானே இங்கு எழுதப்படாத சட்டம்?

கள்ளச்சாராயத் தொழில் தங்களிடமிருந்து கைமீறிப் போனதால் வந்த கோபமோ இது என்றுதானே மக்கள் கேட்கிறார்கள்.

*****

"திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம்! மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்!"

கோவில்களில் கூட்டம் கூடுவது மக்களின் ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடு.  தங்களுடைய குறைகள் நீங்கத்தானே கோவில்களை நாடி ஓடுகிறார்கள். கோவில்கள் என்றைக்கு ஈ ஓட்டுகிறதோ அன்றுதான் நாட்டு மக்களின் நனவுகளும் கனவுகளும் நிறைவேறி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று பொருள். அப்பொழுது மக்கள் கோவில்களை நாடி ஓட மாட்டார்கள். சுற்றுலாத் தளங்களில் முட்டி மோதுவார்கள். 

வெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரங்களால் மட்டுமே கோவில்களில் கூடும் கூட்டத்தை குறைத்துவிட முடியாது. மாறாக மக்களின் வாழ்க்கையின் ஏக்கப் பெருமூச்சுகளை நீக்கவல்ல ஒரு அரசு அமைந்தால் மட்டுமே இதிலிருந்து மக்களை மீட்க முடியும்.

*****

"வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவர் அறிவழகனுக்குத் தொடர்பு!"

இதற்குத்தானே உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் கடும் போட்டி நிலவுகிறதோ? இதில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று கண்ணமங்கலத்தில் அதிமுக-வினர் பிரசுர விநியோகம் எனும் கேலிக்கூத்து!

ஊரான்

செய்தி ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளேடு. 21.07.2024

2 comments:

  1. கணேசமூர்த்தி: அப்போதும் சாமியால் தான் நடந்ததாக மக்கள் கருதுவார்கள். மக்களின் வாழ்க்கையின் பெருமூச்சுகளை நீக்கவல்ல ஒரு அரசு அல்ல எத்தனை முறை தொடர் அரசுகள் அமைந்தாலும் அதற்கும் ஆண்டவன் தான் காரணம் என சொல்லும் ஒரு கூட்டம் நம்மைச்சுற்றி இருக்கும்வரை ஆண்டவன் புகழ் பாடிக்கொண்டே தான் இருப்பார்கள். கூட்டு
    குடும்பங்களில் கூட சில பிரச்சினைகள் முடிவுக்கு வரும்போது கூட ஆண்டவன் அருளால் நடந்தது என்று பொங்கல் வைக்க புறப்பட்டு விடுவார்கள்.
    இரண்டாயிரம் ஆண்டுகளாக ஊறிப்போன அழுக்குகள். அவ்வளவு எளிதாக மக்கள் திருந்த மாட்டார்கள்.

    ReplyDelete
  2. ஆனந்தன்: சூப்பர் சூப்பர் சூப்பர் உண்மை

    ReplyDelete