Sunday, July 21, 2024

கருப்பு ராமனும் தீண்டாமையும்!

நாட்டில் சோத்துக்குப் பஞ்சம் வந்தாலும் ராமன்களுக்குப் பஞ்சமில்லை. உயிரற்ற இந்த ராமன்கள் அவ்வப்பொழுது உயிர்த்தெழுகிறார்கள். அப்படி அயோத்தியில் பாலராமன் உயிர்த்தெழுந்ததை சமீபத்தில் நாடே பார்த்தது.

ராமன் என்றாலே அவன் பிரச்சனைக்கு உரியவன்தான் என்பதாலோ என்னவோ
ராமன் எத்தனை ராமனடி!” என்ற பெயரில் தமிழ்நாட்டுக்காரன் படமே எடுத்திருக்கிறான்.
 
காலாராம்
 
இவன் ஒரு கருப்பு ராமன். புராணங்களின் கூற்றுப்படி, நாசிக் பகுதியில் இவன் தலைமறைவாக வாழ்ந்தானாம். அதன் நினைவாக இவனுக்கு 1782 இல் காலாராம் என்ற பெயரில் ஒரு கோவிலை எழுப்பி இருக்கிறார்கள்.

 
காலா என்றால் கருப்பாம். அதனால்தானோ என்னவோ பா.ரஞ்சித் கூட, காலா என்ற பெயரில் மும்பையை மையமாகக் கொண்டு ரஜினியை வைத்துப் படம் எடுத்தாரோ?
 
இந்துக்களின் கடவுளாக போற்றப்படும் இந்த கருப்பு ராமனின் காலாராம் கோவிலில் வழிபாடு செய்ய, தீண்டாமையைக் காரணம் காட்டி இந்து மதத்தைச் சேர்ந்த மகர் சாதி மக்களை சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை. இந்த இழிவுக்கு எதிராக, இதே மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த கருப்பு ராமன் கோவிலில் நுழைய வேண்டும் என்று 1930 இல் 15000 பேர் கலந்து கொண்ட ஒரு மாநாட்டைக் கூட்டி தனது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.

கோவிலில் நுழைவதற்கான பேரணி ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்க 8000 பேர் பதிவு செய்திருந்தனர்.  500 பெண்கள் உட்பட 3000 பேர் திரண்டனர். இதைக் கண்டு பீதியுற்ற சனாதனிகள், கோவில் வாசல்களை இழுத்து மூடுகின்றனர்.
 
இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க நாசிக் நகரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் அதிக அளவில் கலந்து கொண்ட சனாதனிகள், கூட்டத்தில் ரௌவுடித்தனம் செய்கின்றனர். கற்களையும் செருப்புகளையும் வீசி எறிந்தனர். அந்த ராமனே நேரில் வந்து கோவிலைத் திறந்து விடுங்கள் என்று சொல்லி இருந்தால்கூட ராமனையும் அவர்கள் அப்புறப்படுத்தி இருப்பார்கள் என்று அந்த சம்பவத்தை வருணிக்கிறார் அம்பேத்கர்.
 
ஒரு மாத காலத்திற்கு இந்த சத்தியாகிரகப் போராட்டம் தொடர்கிறது. சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மகர்களுக்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டு அனைவரும் சேர்ந்து தேரை இழுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எங்கே தீண்டத்தகாத மக்கள் தேரைப் பிடித்து இழுத்து விடுவார்களோ என்று அஞ்சிய சாதி இந்துக்கள், முண்டியடித்துக் கொண்டு தேரை தாறுமாறாக இழுத்துக் கொண்டு ஓடினர்.
 
தீண்டத்தகாத மக்கள் மேற்கொண்ட இந்தப் போராட்டம் சனாதன இந்துக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தீண்டத்தகாதவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்; அவர்களுக்கான சாலைகள் மூடப்பட்டன; சந்தையில் இருந்து பொருள்களை வாங்குவதற்கு மறுக்கப்பட்டனர்.
 
இத்தனைத் துன்பங்களுக்கு இடையேயும், நாசிக்கில் போராட்டம் தொடர்ந்தது.
நீதிமன்றத்திற்குச் சென்றால் நீதி கிடைக்கும் என்று தீண்டத்தகாத மக்கள் நீதி மன்றத்தை நாடுகின்றனர். ஆனால் கோவிலில் நுழைய நீதிமன்றம் தடை விதிக்கிறது. மாகாண சட்டசபையில் மசோதா நிறைவேற்ற முயன்ற போதும் மசோதா நிறைவேற மறுக்கப்படுகிறது.
 
தீண்டாமையின் ஆணி வேர்

சாதி மற்றும் தீண்டாமைக்கான அடிப்படை நால்வர்ணத்தில் இருக்கிறது. அதுதான் ஆணிவேர். எனவே, நால்வர்ணத்தை சாஸ்திரங்களிலிருந்து அகற்றி, அதைக் கைவிட வேண்டும்; இதற்குக் குறைவான எதையும் ஏற்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.
 
கோவில் நுழைவைவிட, அரசியல் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படையான விசயங்கள்தான் தீண்டத்தகாத மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்றாலும்கூட, பூனைகளும் நாய்களும்  நுழையும் ஒரு கோவிலில் இந்து மதத்தைச் சார்ந்த மகர் சாதி மக்கள் நுழையக் கூடாதா? மனிதன் என்ற உரிமையை மகர்களுக்கு சாதி இந்துக்கள் அளிக்கிறார்களா? மனிதனை மனிதனாக நடத்த இந்து மதம் விரும்புகிறதா?” என்று சோதிப்பதற்காகவும், தீண்டத்தகாத சாதி மக்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ளவும், இந்து சமுதாயத்தில் அவர்களது உண்மை நிலை என்ன என்பதை உணர வைப்பதற்காகவுமே இந்தக் கோவில் நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்டதாகத் தனது குறிக்கோளைத் தெளிவுபடுத்துகிறார் அம்பேத்கர்.
 
ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தீண்டத்தகாத மகர் சாதி மக்களை, இந்து மதத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் அனுமதிக்காததை உணர்ந்து கொண்ட அம்பேத்கர் அவர்கள் 1935 இல் இந்தப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்து மதத்தில் இருப்பதனால் பயன் ஏதும் இல்லை; எனவே, இந்து மதத்திலிருந்து விடுபடுவது ஒன்றுதான் இதற்கு ஒரே தீர்வு என்கிற முடிவுக்கு இந்தப போராட்டம் அவரை இட்டுச் செல்கிறது.
 
பட்டியல் சாதி மக்களுக்கான இயக்கம்

சுதந்திர தொழிலாளர் கட்சி. இதுதான் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் சாதி மக்களுக்காக நடத்தி வந்த இயக்கம்.
 
இன்றும்கூட பட்டியல் சாதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற கட்சிகள் செயல்படுகின்றன. சில கட்சிகளில் சாதி இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கூட அங்கம் வகிக்கின்றனர்.
 
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் பட்டியல் சாதி மக்களில் கணிசமானோர் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் தீண்டாமை என்னும் விசயத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடந்து விடவில்லை.
 
இன்றும் கூட இந்தியாவின் பல்வேறு கோவில்களில் தீண்டத்தகாத சாதி மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோவில் நுழைவு உரிமை கேட்டுப் போராடினால், நிலைமையைப் பொறுத்து, ஒன்று கோவிலை இழுத்து மூடுகிறார்கள் அல்லது தாக்கி விரட்டுகிறார்கள் அல்லது எங்களுக்கு இனி இந்தக் கோவிலே வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சாதி இந்துக்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
 
தொடரும் தீண்டாமை

இதன் மூலம் அவர்கள் உணர்த்துவது ஒன்றுதான். தீண்டாமையை நாங்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்பதைத்தான். தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் தீண்டாமையே நாடெங்கிலும் கோலோச்சுகிறது.
 
காலாராம் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்து முடிந்து நூறாம் ஆண்டு நெருங்கவிருக்கிறது. தீண்டாமை எனும் அநீதிக்கு எதிராக, சாதி இந்துக்களில் உள்ள முற்போக்காளர்களையும் ஜனநாயகச் சக்திகளையும் இணைத்துக் கொண்டு போராடுகின்ற, பட்டியல் சாதி மக்களுக்கான தலைவர்கள் தேவைப்படுகின்ற காலகட்டத்தில்தான் பட்டியல் சாதி மக்களிடையே பிழைப்புவாதிகளும் காரியவாதிகளும் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு முடிவு கட்டவில்லை என்றால் தீண்டாமை ஒருக்காலும் முடிவுக்கு வராது.
 
ஊரான்

ஆதாரம்: அம்பேத்கர் நூல் தொகுப்பு: 35
 

1 comment:

  1. ஆதாம் முதல் மனிதர் என்ற கோட்பாட்டுக்கு வலிமை சேர்க்கலாம்.

    ReplyDelete