Thursday, September 28, 2023
"இந்தியா முன்னேற வேண்டுமானால் சனாதனத்தை வேரடி மண்ணோடு அழித்து ஒழிக்க வேண்டும்!" - அம்பேத்கர்
Tuesday, September 19, 2023
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-9
கிரகப்பிரவேசமும் கும்பாபிஷேகமும்
ஒருவன் தனது வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வதும் மற்றும் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அதனால்தான் "வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்" என்பார்கள்.
பணம் இருந்தால் மட்டும் போதாது; பலரது கடினமான உழைப்பும் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு இல்லத்தை உருவாக்க முடியும். வீட்டின் தரத்தை அதன் கட்டுமானம்தான் உறுதி செய்யும் என்றாலும், குடும்பத்தின் நல்லவை-கெட்டவைகளை, வீட்டின் அமைப்போடு, முடிச்சுப் போட்டு, வீட்டை இப்படி அமைத்தால்தான் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும் என பயமுறுத்தி "வாஸ்து சாஸ்திரம்' என்கிற சனாதனத்தைப் புகுத்தி, மக்களை முட்டாளிக்கி வைத்துள்ளனர்.
மக்களை முட்டாளாக்கியதோடு நில்லாமல், வீட்டை நிர்மாணிக்க உழைத்த உழைப்பாளிகளை அசிங்கப்படுத்துகிறது சனாதனம். சண்டாளன், பறையர் போன்றவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள், மண்ணை மிதித்திருப்பார்கள் என்பதால், இல்லம் தீட்டாகி இருக்கும் என்று சொல்லி, பசுமாட்டை ஓட்டி வந்து, கோமியம் தெளித்து, மந்திரம் ஓதி, கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வை அரங்கேற்றுகின்றனர் நம் மக்கள், அது இன்னதென்று தெரியாமலேயே! தீண்டத்தகாத மக்களும் இதைச் செய்வதுதான் காலக் கொடுமை.
சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடித்தளமாக இருந்தாலும், ஐந்தாவது தளமாக இருந்தாலும், பசுவைக் கொண்டு வர சில ஆயிரங்கள் செலவழித்து, மாடி ஏற பசு அடம் பிடித்தாலும், மல்லுக்கட்டியாவது வீட்டிற்குள் இழுத்துச் செல்கின்றனர். தீண்டாமை எவ்வளவு வலுவானது என்பதை இந்த மல்லுக்கட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
சிறிய கோவிலோ, பெரிய கோவிலோ அங்கும் தீண்டத்தகாதவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள், மண்ணை மிதித்திருப்பார்கள், அதனால் கோவில் தீட்டுப்பட்டிருக்கும் என்பதனால் "மகா சம்ரோட்சணம்" என்கிற "மகா கும்பாபிஷேகம்" என்கிற "குடமுழுக்கு" எனும் தீட்டுக் கழிப்பு நிகழ்ச்சியை செய்கின்றனர்.
"வீடு முதலானவற்றிற்கு சண்டாள சாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது, விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணை எடுத்து அப்பால் போடுதல், பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும் படி செய்தல் இவை ஐந்தாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது. (மனு 5: 124)".
தன் கனவு இல்லத்தைக் கட்டியவனை, ஆண்டவன் உறையும் ஆலயத்தை எழுப்பியவனை, தீண்டத்தகாதவன் என்று இழிவுபடுத்தி, அவனால் இல்லமும் ஆலயமும் தீட்டாகி விட்டது என்று சொல்லி, கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம் என்ற பெயரில் தீட்டுக் கழிப்பு செய்யும் நபர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏன் கைது செய்யக் கூடாது?
வீடு தேடி வரும் தீண்டத்தகாதவர்களை, வீட்டு வாசலில் நிற்க வைத்துப் பேசுவதும், ஆண்டவனை வழிபட வந்தால் ஆலயத்தின் வாசலிலேயே தடுத்து நிறுத்துவதும் எதனால்? தீண்டத்தகாதவர்கள் பாதம் பட்டால் மண்ணும் தீட்டாகிவிடும் என்கிற சனாதனம்தானே?
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் அவரது மனைவியும் 2019 ஆம் ஆண்டு பூரி ஜெகநாதர் ஆலயத்திற்குள் நுழைந்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டது எதனால்? அவர் தீண்டத்தகாத சாதி, என்பதனால்தானே?
இந்த ஆண்டு ஜூன் 23 அன்று டெல்லியில் உள்ள ஜெகநாத் கோயிலின் கருவறைக்குள் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்டபோது, இன்னாள் குடியரசுத் தலைவர் துரௌபதி முர்மு மட்டும் வெளியிலேயே நிறுத்தப்பட்டாரே? எதனால்?
புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவிற்கு முர்மு அழைக்கப்படவில்லையே? எதனால்? அவர் பழங்கடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் ஒரு விதவை என்பதும்தானே காரணம்?
தீண்டத்தகாதவர்கள் நுழைந்து கோவில் மண்ணை மிதித்து விட்டால், அம்மண் தீட்டாகிவிடும்; பிறகு தீட்டுக் கழிப்பு செய்ய வேண்டும். அதற்கு, கால விரயமும் பணமும் செலவாகும் என்பதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திண்டாமையை இன்றளவும் கடைபிடிக்கின்றனர். குடியரசுத் தலைவர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலையை சற்றே எண்ணிப் பார்த்தால் குலை நடுங்குகிறது.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமம் திரௌபதி அம்மன் கோயில் நுழைவு (2023) உள்ளிட்ட எண்ணற்ற கோயில்களில் தீண்டத்தகாதவர்கள், அவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம் இந்தத் தீண்டாமைதானே?
இலை சாப்பாட்டில் ஒளிந்திருக்கும் தீண்டாமை
பலரது வீடுகளில் இலையில் சாப்பாடு போடுவதை, தனக்குக் கிடைக்கும் மரியாதை எனக் கருதி பெருமைப்படுகிற விருந்தினர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். தனது கணவனோ அல்லது மகனோ அழைத்து வருகின்ற நண்பன் என்ன சாதி என்பது தெரியாது. அதனால் மகனுக்குத் தட்டிலும், நண்பனுக்கு இலையிலும் சாப்பாடு போடுவார்கள். நண்பனுக்கும் தட்டில் சாப்பாடு போட்டு விட்டால் தீண்டாமை ஏற்பட்டு விடும் என்கிற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இந்த இலை சாப்பாடு. எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் பறையன் தீண்டின பாத்திரம் சுத்தமாகாது என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
எதற்கு வம்பு என்று இரண்டு பேருக்கும் இலையிலேயே சாப்பாடு போடுவதும் உண்டு. மேலும், தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பாடு போடும்போது, சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சாணம் கொண்டோ அல்லது தண்ணீர் கொண்டோ மெழுகுவார்கள். இது ஒரு தீட்டு கழிப்பு நிகழ்ச்சி என்பது சாப்பிட்டவருக்குத் தெரியாது. தெரிந்தால், வித விதமாய் நீங்கள் சாப்பிட்ட அனைத்தும் ஒரு நொடியில் வெளியே வாந்தியாய் வந்துவிடும், ரோசம் இருந்தால்!
நமது அன்றாட வாழ்வில், இப்படி எண்ணற்ற தீண்டாமைச் சடங்குகளை சனாதனம் புகுத்தி இருக்கிறது. இன்று வரையிலும் அது தொடர்கிறது.
ஆம்! சனாதன தருமம், அழிவில்லாதது, it is eternal என்று அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. தீண்டாமை எனும் சனாதன தருமம் அழிவில்லாமல் இன்றும் நீடிக்கத்தானே செய்கிறது.
அடுத்து பெண்கள் மீதான சனாதன தருமம் குறித்துப் பார்ப்போம்.
ஊரான்
****"
தொடர்புடைய பதிவுகள்
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5
Sunday, September 10, 2023
சனாதன தருமத்தின் மூலம் எது?
உண்மையில் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து மகஇக, வேலூர் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தரவுகளைத் தேடிய போது அதற்கான விடை கிடைத்தது.
இன்று, இந்து மதம் என்று சொல்லப்படுகிற வைதீக-ஆரிய-பிராமண மதத்தின் மற்றொரு பெயர்தான் சனாதனம். அதனால்தான் இந்து மதம், சனாதன மதம் என்றும் அழைக்கப்படுகிறது. தருமம் என்றால் ஈகை அல்ல; மாறாக என்றென்றைக்கும் ஒரு இந்து தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்/கடமைகள் என்று பொருள்.
இந்து மதத்தைப் பின்பற்றுகிற ஒரு தனிமனிதன், அவனது குடும்பம், அவன் சார்ந்த சமூகம், வாழுகின்ற நாடு உள்ளிட்டவை அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களையும், விதிமுறைகளையும் பற்றியதுதான் சனாதன தருமம். இந்தச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கீழ்கண்ட இந்து மத நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர மற்ற இந்து மத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை சனாதன தருமத்தில் சேராது.
1.ரிக்-யசூர்-சாம-அதர்வன எனும் நான்கு வேதங்கள். (சுருதிகள்).
தொடர்புடைய பதிவுகள்:
திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?
சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3
Wednesday, January 11, 2023
பதிப்புலகம் பாட்டாளிகளை நோக்கிப் பயணிக்குமா?
பேராசிரியர் சுப வீரபாண்டியன், பேராசிரியர் கருணானந்தம், தோழர் தியாகு, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ஒரு சில பாடங்களை உணர்த்தியது.
புத்தகக் கண்காட்சி: எதற்காக?
Friday, April 16, 2021
சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3
மனிதக் காதலை திசை மாற்றிய பக்தி இயக்கம்
சனாதனம் என்றால் பழைமையானது; சனாதன தர்மம் என்றால் பழைமையான நீதி நெறி என்று பொருள். ‘நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை; சமூகத்திற்குப் பொருத்தமான நீதி நெறிகளை அன்றே வகுத்து வழிகாட்டி உள்ளார்கள். பழைய நீதி நெறிகளை கடைபிடிக்கத் தவறியததால்தான் நாட்டில் கேடுகள் பெருகிவிட்டன. எனவே சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதன் மூலம்தான் நற்சமூகத்தை மீட்டெடுக்க முடியும்” என்பதுதான் சனாதன தர்மத்தை உயர்ந்ததாகக் கருதுவோரின் கருத்து. பார்ப்பனர்கள் மட்டுமல்ல பார்ப்பனியத்துக்கு பலியாகிப் போன பலரின் கருத்தும் இதுதான்.
சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட நெறிமுறைகளையே தமிழர்கள் தங்களது மரபாகப் பார்க்கின்றனர். சங்க இலக்கியங்கள் சனாதனக் கருத்துக்களை வலியுறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. அப்படியானால் சனாதன தர்மத்தை எங்கிருந்து, எப்படிப் புரிந்து கொள்வது? பார்ப்பன இந்து மத நூல்களான, சுருதிகள் என்று சொல்லக்கூடிய ரிக்-யஜூர்-சாம-அதர்வன உள்ளிட்ட 4 வேதங்களிலும், ஸ்மிருதிகள் என்ற சொல்லக்கூடிய மனு-யாக்ஞவல்கியர்-அங்கிரஸ்-ஆபஸ்தம்பர் உள்ளிட்ட 18 தர்ம சாஸ்திரங்களிலும், நாரத-பாகவத-கருட-லிங்க-நாரத-சிவ-ஸ்கந்த-விஷ்ணு உள்ளிட்ட 18 புராணங்களிலும். இதிகாசங்கள் என்று அறியப்படுகிற இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதையிலும் சனாதன தர்மம் குறித்த விவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் பகவத் கீதை ஸ்மிருதி வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்து மதத்தைச் சார்ந்த ஒருவன் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படிச் செய்யக் கூடாது என்பதை ஸ்மிருதிகள் வலியுறுத்துகின்றன. இதில் முதன்மையானது மனுஸ்மிருதி. அதனால்தான் இது சட்டமாகவும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட நூல்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததால் பார்ப்பனர்கள் மட்டுமே அவற்றை விரித்துக் கூறும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்ததால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள்.
மனுவின் காலம் கி.பி 185 க்குப் பிறகு என அறியப்பட்டாலும் சமணம் செழித்தோங்கிய களப்பிரர் ஆட்சி (கி.பி 250-575) வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில்தான் தமிழர் வாழ்வில் மனு ஸ்மிருதி கோலோச்சத் தொடங்கி உள்ளது. சண்டாளர்கள் தீயவர்களாகக் கருதப்பட்டார்கள் என்கிற பாஹியான் (கி.பி 400) கூற்றிலிருந்தும், தோட்டிகள் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்கிற யுவான் சுவாங் (கி.பி 620) கூற்றிலிருந்தும், அறிய முடிகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் (கி.பி 400-600) தீண்டாமையும் புகுத்தப்பட்டிருக்கிறது.
களப்பிரர் காலம்வரை படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை அடிப்படையாகக் கொண்டவை. பக்தியினால் முக்தி எளிதாகும்; இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் எனக் கூறி சமணத்தையும் பௌத்தத்தையும் அழிப்பதற்காக சைவமும் வைணவமும் தோற்றுவித்த பக்தி இயக்கம், மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை, தெய்வத்துக்கும் மனிதனுக்குமானக் காதலாக திசை மாற்றியது. கி.பி ஆறாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இல்லாதிருந்த விநாயகர் வணக்கம் பிற்கால நூல்களிலேயே காணப்படுகிறது. சனாதன தர்மம் தமிழகத்தில் ஆழமாகக் கால் பதிக்க பக்தி இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. பின்னாளில் சைவத்துக்கும் வைணவத்துக்குமான மோதல் என்பது தனிக்கதை.சனாதன தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்எஸ்-பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் கால்பதிக்க முயலும் இத்தருணத்தில் சனாதன தர்மம் குறித்தப் புரிதல் காலத்தின் கட்டாயம் என்பதால் அது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்