Showing posts with label மனு. Show all posts
Showing posts with label மனு. Show all posts

Monday, August 14, 2023

வெட்டிப் பய, சண்டாளப் பாவி என ஒருவரை திட்டலாமா?

ஒரு வாட்ஸ்அப் குழுவில் சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். அதில் வெட்டி என்று சொல்லுக்கான அரியதொரு விளக்கத்தைக் கூறுகிறார் ஒருவர். இதைப் பார்த்த வெட்டி என்பதற்கு சரியான விளக்கம் தந்திருப்பதாக ஒருவர் பதில் எழுதுகிறார்.


அவர் கொடுத்த விளக்கம் எப்படித் தவறானது என்பது குறித்தும், வெட்டி என்ற சொல்லுக்கு சரியான பொருள் குறித்தும் அந்த வாட்ஸ்அப் குழுவில் நான் எழுதிய எனது கருத்துக்களை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.

*****
வெட்டி என்பதற்கு இவர் கொடுக்கின்ற விளக்கம் தவறானது. குளங்களை வெட்டியவர்கள் எல்லா சாதியினரும் அல்ல. மாறாக சேரியிலே வாழ்ந்த ஒரு பிரிவினர். அவர்கள்தான் குளங்களை வெட்டுவது மட்டுமல்லால் ஊரில் இருக்கிற எல்லா எடுபிடி வேலைகளையும் காசு வாங்காமல் வெறும் கஞ்சிக்காக இலவசமாக செய்தவர்கள். 

இன்று ஒரு வேலையை செய்துவிட்டு வெறுங்கையோடு வந்தால் என்ன மதிப்பு இருக்கும் வீட்டில்?  மக்கள் மொழியில் சொன்னால் வெட்டியான் வேலை என்பது தம்பிடிக்கு பிரயோஜனம் இல்லாத வேலை என்று பொருள். அதனால்தான் சும்மா இருப்பவர்களைப் பார்த்து வெட்டிப்பய என்று வசை பாடுகிறார்கள். எனவே, வெட்டி என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்டு சாதியினரை இழிவுபடுத்துகின்ற ஒரு சொல். தயவுசெய்து யாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்பதே எனது கருத்து.

*****

சவக்குழி தோண்டுபவரை / பிணத்தை எரிப்பவரை வெட்டியான் என்று அழைப்பார்கள். இவர்கள் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்த சேரி மக்கள்‌. சுருக்கமாகச் சொன்னால் இவர்கள் சுடு / இடுகாட்டைக் காப்பவர்கள். இவர்களை 
அந்தியாவசாயி என்கிறான் மனு.

சண்டாள சாதி ஆணுக்கும், நிஷாத ஜாதி பெண்ணுக்கும் அந்தியாவசாயி பிறக்கிறான். இவனுக்கு சண்டாளன் தொழிலை விட கெட்டதான சுடுகாட்டைக் காப்பது தொழில். (மனு: 10-39)

சூத்திர ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன். ( மனு-10-44).

இன்று பறையர்கள் என்று அழைக்கப்படுபவர் கள்தான் சண்டாளர்கள் என்கிறது மனுதர்மம்.

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவன்தான் நிஷாதன். (மனு 10-8)

எனவே ஒருவரை வெட்டிப்பய என்றோ, சண்டாளப் பாவி என்றோ வைவதும் திட்டுவதும் சேரி மக்களை இழிவு படுத்துகின்ற சொற்களாகும். சட்டப்படியாகப் பார்த்தால் இச்சொற்களைப் பயன்படுத்துவோரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

பல்வேறு சாதிகளின் தோற்றம் குறித்து மனுதர்மத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. வேறு ஒரு சமயத்தில் அது குறித்துப் பார்க்கலாம்.

நன்றி

ஊரான்

Wednesday, May 25, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-6

  X

காதல்

மனு: 8-266: உயர்குலத்துப் (பிராமண-சத்திரிய-வைசிய) பெண்ணை  ஒரு சூத்திரன் காதலித்தால் சாகும் வரையில் அவனுக்குக் கசையடி கொடுக்க வேண்டும்.

(பட்டியல் இனச் சாதியைச் சார்ந்த இளைஞன் ஒருவன், தனக்கு மேலே உள்ள சாதிப் பெண்ணைக் காதலித்தால், அவனைக் கொலை செய்யவும் இன்று ஆதிக்கச் சாதியினர் துணிகிறார்கள் என்றால் அதற்கு மனு வகுத்த நீதான் அடிப்படை-ஊரான்).

மனு: 8-373: திருமணமான ஒரு பார்ப்பனப் பெண்ணுடன் ஒரு சூத்திரன் சோரம் போனால், அவன் தனது சொத்துக்களை இழப்பதுடன் அவனது ஆண் குறியும் வெட்டப்பட வேண்டும். 

மனு: 8-385: திருமணமான ஒரு பறையர் சாதிப் பெண்ணுடன் ஒரு பிராமணன் சோரம் போனால் அவனுக்கு ஆயிரம் பணம் அபராதம் விதிக்க வேண்டும்.

(இப்படி காதல் செய்வதிலும், சோரம் போவதிலும் வருணத்திற்கு ஏற்ப தண்டனை முறையில் மிகப்பெரிய பாகுபாடுகளை வைத்திருக்கிறான் மனு-ஊரான்)

XI

பல வகைக் குற்றங்கள்

மனு: 8-379: ஒரு பிராமணன் மரண தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்த போதிலும், அவனைக் கொல்லக் கூடாது‌. அவனுக்கு மொட்டை அடிப்பதே மரண தண்டனைக்கு ஒப்பானதாகும். ஆனால் மற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

மனு:8-380: ஒரு பிராமணன் எத்தகையப் பாவத்தை செய்தபோதிலும் அவனை கொல்லக் கூடாது.  ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.

மனு:8-381: பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரியதொரு பாவம் வேறு இல்லையாதலால், பிராமணனைக் கொல்வது பற்றி அரசன் மனதளவில் கூட நினைக்கக்கூடாது.

(இப்பொழுது புரிகிறதா, எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ, சின்ன சங்கரனையோ, தேவநாதனையோ ஏன் தண்டிக்க முடியவில்லை என்று?- ஊரான்)

இந்து சட்ட முறைகளுக்கும், இந்து அல்லாத சட்ட முறைகளுக்குள்ளேயும் எத்துனை வேறுபாடு! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை எவ்வாறு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது! நீதி முறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம்.

குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு; அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு. எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரேவிதமான தண்டனையே.

ஆனால், மனுவில் நாம் காண்பது யாது? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்பைத் துண்டித்தல்‌, வயிறு, நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்க்குத் தனித்தன்மை உண்டு என்பது போலவும், உடலோடு உடன் வாழ்வன போலவும், கருதி தண்டனை அளித்தல்.

மனுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறுபாடு குற்றத்தின் கடுமையை மீறிய, மனிதத்தன்மையற்ற தண்டனை விதித்தல். 

மனுவில் குற்றவியல் சட்டத்தில் மிக வெளிப்படையான கூறுபாடு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் அப்பட்டமாகத் தெரிகிறது. 

குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமன்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவருக்குள்,  சிலருடைய கண்ணியம் காக்கவும், சிலரைத் தாழ்த்தி வைக்கவும் திட்டமிட்ட இச்சமமின்மைச் செயல் மனுவின் திட்டத்தின் அடிப்படையானதும் சமூகச்சமமின்மையை நிலைநாட்டுவதேயாகும்.

சமூக சமமின்மையை மனு எவ்வாறு நிலைநாட்டியுள்ளார் என்பதைக் காட்டுவதற்குரிய சான்றுகளை இதுவரை எடுத்துக் காட்டியுள்ளேன். அடுத்து மத சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதற்கு மனு விதித்திருக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு:தொகுதி - 6, பக்கங்கள் 43-46.

தொடரும்,.

தொகுப்பு: ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1


Tuesday, June 29, 2021

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

திராவிட என்ற சொல் மனுஸ்மிருதியிலேயே (கி.மு 150 முதல் கி.பி 100) இருக்கும் போது, இராபர்ட் கால்டுவெல்தான் (1856) முதன் முதலில் திராவிட என்ற சொல்லைப் புகுத்தித் தமிழனின் அடையாளத்தைத் திசை திருப்பிவிட்டார் என்று தற்போது பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகின்றனர். திராவிட என்ற சொல் மீது அவர்களுக்கு ஏன் கடுங் கோபம்?; தம்பிகளுக்கும்தான்!

“பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயன முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொன்ன சத்திரிய சாதிகள் இவ்வுலகில் வரவர சூத்திரத்தன்மையை அடைந்தார்கள் (மனு: 10-43)”

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள் (மனு: 10-44)”

10-43: But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of sudras;

10-44: (VIZ) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.

(ஆங்கிலத்தில் உள்ள Kodas தமிழில் ஔண்டரம் என்றுள்ளது. தமிழில் உள்ள கசம் ஆங்கிலத்தில் இடம்பெறவில்லை)

மனு கூறியபடி மேற்கண்ட பன்னிரண்டு நாடுகளின் மன்னர்களும் பூணூல் அணிவதை ஏற்கவில்லை. பார்ப்பனர்களை வணங்கி அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தவில்லை.  அதனால் அவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டார்கள். இங்கே எடப்பாடி நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்தப் பன்னிரண்டு நாடுகளும் எந்தெந்தப் பகுதி என்பதை வரலாற்றில் தேடினால் சுலபமாகக் கிடைக்கக் கூடியவைதான். திரவிடம் என்றால் பார்ப்பன எதிர்ப்போடு தொடர்புடைய சொல் என்றப் புரிதலைத்தான் மனு நமக்குக் கொடுக்கிறான்.

எனவே, திரவிடம் என்றாலும் பௌண்டரம், ஔண்டரம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம், யவனம் என்றாலும் ..... பார்ப்பன எதிர்ப்பு - வேத மறுப்பு என்பதுதான் அதன் சாரம். இந்தப் புரிதலில்தான் பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்ட பெரியார் அன்று இச்சொல்லைப் பயன்படுத்தி திராவிடர் கழகம் என்று தான் தொடங்கியக் கட்சிக்குப் பெயர் வைத்திருக்கக்கூடும். அப்படியானால் தரதம் என்றோ யவனம் என்றோ வைத்திருக்லாமே என்றுகூடத் தோன்றலாம். திராவிடம் தென்னிந்தியாவை-தமிழர்களைக் குறிப்பதால் பெரியார் திராவிடத்தைத் தெரிவு செய்துள்ளார்.

பின்னாளில் திராவிட என்ற பெயரைத் தாங்கி பல கட்சிகள் தோன்றின. அதனாலேயே அக்கட்சிகள் எல்லாம் பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டவை என்று பொருளாகி விடாது. மேலும் திராவிட என்ற பெயரைத் தாங்கி உள்ள கட்சிகளில் உள்ள பலர் பிழைப்புவாதிகளாக, ஊழல்வாதிகளாக சீரழிந்து விட்டால் இதைத் திராவிட என்ற சொல்லோடு முடிச்சுப் போட்டு ‘திருட்டுத் திராவிடம்’ என புதுப் பொருள் விளக்கம் கொடுத்து திராவிட என்ற சொல்லின் பரிமானத்தைக் கொச்சைப் படுத்துகின்றனர். மேலும் திராவிட என்ற பெயரைத் தாங்கி உள்ள கட்சிகளில் உள்ள அனைவருமே பார்ப்பன எதிர்ப்பைக் கடைபிடிப்பவர்களா என்ன?

*****

பார்ப்பனர்களை வணங்காமல், அவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் ஆட்சி நடத்திய மன்னர்கள் சூத்திர நிலைக்குத் தள்ளப்பட்டது மட்டுல்ல அவர்களில் பலர் பார்ப்பனர்களால் வீழ்த்தப்பட்டனர் அல்லது கொன்றொழிக்கப்பட்டனர்.

அரசன் தினந்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதம் ஓதினவர்களாயும், நீதி சாஸ்திர வித்வான்களாயும் இருக்கிற பார்ப்பனர்களை உபசரித்து அவர்கள் சொல்கிறபடி நீதி செலுத்த வேண்டியது (மனு: 7-37)

தான் நியாயம் அறிந்திருப்பினும், பார்ப்பனர்களிடத்தில் நியாயத்தை வணக்கமாய் கேட்க வேண்டியது. பார்ப்பனர்களை வணங்கி ஆட்சி நடத்தினால் ஒரு போதும் மன்னன் அழியமாட்டான். (மனு: 7-39)

பார்ப்பனர்களை வணங்காமல் ஆட்சி நடத்தாததால் அனேக மன்னர்கள் சதுரங்க சேனையுடன் அழிந்து போனார்கள், நாட்டை விட்டு காட்டுக்கு ஓடிப் போனார்கள். (மனு: 7-40)

அந்த வணக்கமில்லாததால் வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் ஆட்சியை இழந்து அழிந்த போனார்கள். (மனு: 7-41)

மேற்கண்ட மன்னர்களின் கதைகளை பாகவத புராணம், இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக் கதைகளில் காண முடியும்.

பார்ப்பனர்களை வணங்கியதால் பிருது, மனு இவ்விரு அரசர்கள் ஆட்சியையும், குபேரன் செல்வத்தையும், விசுவாமித்திரன் பார்ப்பனத் தன்மையையும் அடைந்தார்கள். (மனு: 7-42)

7-37: Let the king, after rising early in the morning, worship Brahmanas who are well versed in the three fold sacred science and learned (in polity), and follow their advise.

7-39: Let him, though he may already be modest, constantly learn modesty from them; for a kind who is modest never perishes;

7-40: Through a want of modesty many kings have perished; together with their belongings; through modesty even hermits in the forest have gained kingdoms.

7-41: Through a want of humility Vena perished, like wise king Nahusha, Sudas, the son of Pigavana, Shumukta and Nemi.

7-42: But the humility Prithu and Manu gained sovereignty, Kubera the position of the Lord of wealth and the son of Dadhi the rank of a Brahmana.

இங்கு பார்ப்பனர்களை வணங்கியதற்கு எடப்பாடியும்,  வணங்காமைக்கு அண்ணா – கலைஞர் - ஸ்டாலின் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

*****

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் ஒரு பார்ப்பனர் என்பதால் திராவிடர்கள் என்றாலும் பார்ப்பனர்கள் என்றாலும் ஒன்றுதான் என்ற ஒரு வாதத்தையும் அப்பாவித்தனமாக சிலர் முன்வைக்கின்றனர். இது உண்மையா?

“இந்தியப் பார்ப்பனர்கள் இருவேறு வகைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு பிரிவு திராவிடர்கள் என்றும் மறு பிரிவு கவுடர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

திராவிடர் என்ற வகைப் பிரிவு ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த ஐந்தும் சேர்ந்து பஞ்ச திராவிடர் எனப்படும். இவ்வைந்து உட்பிரிவுகளின் பெயர் பின்வருமாறு:

1.மகாராஷ்டிரர்

2.ஆந்திரர்

3.(முறைப்படியான) திராவிடர் (தமிழ் பார்ப்பனர்கள்)

4.கர்னாடகர்

5.குர்ஜரர்”  

இந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உட்சாதிகள் உண்டு. கவுடர்கள் வகையிலும் இதுபோன்று பல்வேறு உட்பிரிவுகளும் உட்சாதிகளும் உண்டு. இப்படியாக பார்பனர்களில் பாகவதர், பண்டிட், பரத்வாஜ், திரிவேதி, ஜெட்லி, பதக், தத்தா, வைத்தயா, பாண்டே, துபே, மிஸ்ரா, பட், முன்ஷி, சுக்லா, வாஜ்பேயி, தீட்சிதர், உபாத்யா, ஆச்சார்யா என ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சாதிகள் உண்டு.

ரிக்வேதிகள், கிருஷ்ண யஜூர்வேதிகள், சுக்ல யஜூர்வேதிகள்-மத்தியாந்தினார்கள், சுக்ல யஜூர்வேதிகள்-கன்வார்கள், சாமவேதிகள், அதர்வர்கள், வைணவர்கள், வீர வைணவர்கள், ஸ்ரீ-வைணவர்கள், பாகவதர்கள், ஷக்தர்கள் ஆகிய பார்ப்பன சாதிகள் தமிழ்ப் பார்ப்னர்களில் அடங்குவர். இன்று நமக்குத் தெரிந்த ஐயர், ஐயங்கார் உள்ளிட்டவை எப்படி சாதிகளாக அறியப்படுகின்றன என்று தெரியவில்லை. ஒரு வேளை அவை மேற்கண்ட சாதிகள் ஏதாவதின் தமிழாக்கமோ என்னவோ?

“பஞ்ச திராவிடர்கள் என்பது விந்திய மலைக்குக் கீழ்ப்புறம் வாழும் பார்ப்பனர்களுக்கு ஒரு பொதுப் பெயர் ஆகும். பஞ்ச கவுடர்கள் என்பது விந்திய மலைக்கு மேற்புறம் வாழும் பார்ப்பனர்களுக்கு ஒரு பொதுப் பெயர் ஆகும். வேறு விதமாகச் சொன்னால் பஞ்ச கவுடர் என்பது வடக்கத்திய பார்ப்பனர்களையும், பஞ்ச திராவிடர் என்பது தெற்கத்தியப் பார்ப்பனர்களையும் குறிக்கும்”.

எனவே, திராவிடம் என்றால் அது தென்னிந்தியாவோடு தொடர்டையது என்பது மட்டும் தெளிவு.

மலேசியத் தமிழன், ஈழத் தமிழன் என்று விளிப்பது அவர்கள் வாழும் பகுதியைக் குறிப்பது போல திராவிடப் பார்பனர்கள் என்று விளிப்பது அவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கவே. திராவிடப் பார்ப்பனர்கள் என்றாலும் தென்னிந்திய அல்லது தமிழ்ப் பார்ப்பனர்கள் என்றாலும் ஒன்றுதான்.  

*****

பார்ப்பன எதிர்ப்பை ஏற்றுக் கொண்டவர்கள் திராவிட என்ற பெயர் தாங்கி உள்ள கட்சிகளில் மட்டுமல்ல பொதுவுடைமை உள்ளிட்ட பிற கட்சிகளிலும் ஏராளமாக உள்ளனர். பார்ப்பன எதிர்ப்பைக் கைக்கொள்பவர்கள் அனைவருமே  திராவிடர்கள்தான்.

திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம் தமிழை-தமிழனை சிறுமைப்படுத்தி விட்டார்கள் என்று கூப்பாடு போடுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? திராவிட என்ற சொல்லைக் கைவிடுவது பார்ப்பன எதிர்ப்பைக் கைவிடுவதற்கு ஒப்பாகும்.

ஆம்! இந்தப் புரிதலில் நான் திராவிடன்; நீங்கள்?

ஊரான்

ஆதார நூல்கள்: 

1. மனுதரும சாஸ்திரம், 
2.. டாக்டா அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 10

தொடர்புடைய பதிவுகள்

கலைஞர் கடைசி அசுரனா?

Saturday, June 15, 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!.......இறுதிப் பகுதி

அதிகாலை மூன்று மணி. சொந்தமெல்லாம் வந்தாச்சு. பசுவும் கன்றும் வண்டியிலே வந்து இறங்கியாச்சு. கணவனும் மனைவியும் வேட்டி புடவை அலங்காரத்துடன் முகூர்த்தத்திற்குத் தயார். ஆம். கணவனும் மனைவியும் இங்கே மீண்டும் ஒரு முறை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். எதுக்கு இதெல்லாம்? உஷ். வாயை மூடு!

எல்லாப் பொருளும் தயாரா என மீண்டும் ஒரு முறை சோதிக்கிறான். ஏதாவது ஒன்று குறைந்தாலும் இந்த நேரத்தில் எங்கே போய் தேடுவது என்பதைவிட அது இல்லாமல் பூஜை செய்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்ச உணர்வு அவனை துரத்துகிறது. பதட்டமடைகிறான். மணி நான்கு ஆகியும் ஐயர் வரவில்லை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஐயர் வந்த பாடில்லை. மேலும் படபடப்பு. தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவுட் ஆப் கவரேஜ் என்றது அலை பேசி. பதட்டம் மேலும்கூட அக்கம் பக்கம் நிற்பவர்கள்கூட யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. வேர்த்து விறு விறுத்துப் போனது. ஒரு வழியாக ஐந்து மணிக்கு ஐயர் வந்த போது பெரு மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

அக்கினி வளர்க்க செங்கற்களை அடுக்கி அடுப்பை தயார் செய்தார் ஐயர். அடுத்து வாழை இலையை விரித்து அரிசியைப் பரப்பி கழுத்துள்ள பித்தளைக் குவலையை வைத்து அதன் மேல் தேங்காயை குத்தி நிறுத்தி வெற்றிலையோடு குறுக்கும் நெடுக்குமாக நூலால் கட்டுப் போட்டார். நீங்கள் எல்லாம் நூலுக்கு கட்டுப்பட்டவர்கள்தான் என்பதை சொல்லாமல் உணர்த்தியது அவர் போட்ட கட்டு. எடுபிடி வேலைகளுக்கு ஒரு அப்ரண்டிஸ் ஐயரும் உடன் வந்து ஐயரின் ‘தொழிலை’ கச்சிதமாய்க் கற்றுக் கொண்டிருந்தார்.

ஹோம குண்டத்தில் தீ மூட்டினார் ஐயர். தவக்ளா தளதளா தவக்ளா தளதளா என ஐயர் மந்திரம் சொல்ல அதையே இவனும் சொல்ல முயற்சிக்க அடுத்த மந்திரத்திற்குத் தாவினார் ஐயர். அவன் சொல்வது இவனுக்குப் புரியவில்லை. இவன் சொல்வது அவனுக்குப் புரியவில்லை. ஒட்டு மொத்தத்தில் எவருக்கும் புரியாத ஒரு பாஷையில் மந்திரத்தை ஓதி ஆறு மணக்கு ஹோமத்தை முடித்தார். காலை 4-6 மணிதான் ஹோமத்திற்கான நேரம். அதை மீறினால்….பிறகு அண்டகாசுரன்தான்.

பசு கன்று இரண்டையும் வீட்டின் உள்ளே ஓட்டி வந்தனர். சாணியும் போடவில்லை. மூத்திரமும் போக வில்லை. ஏற்கனவே வண்டிப் பயணத்தின் போதே எல்லாவற்றையும் கழிந்திருக்கும் போல. வெளியில் கட்டச் சொல்லி வாயில் எதை எதையோ திணித்தார்கள்.

கணவன்-மனைவி இருவரும் ஜோடியாக அமர்ந்தனர். இருவருக்கும் கல்யாணத்தை செய்து வைத்தார். இதற்குள் ஒரு அரை மணி நேரம் ஓடிவிட்டது. மீண்டும் பசுவையும் கன்றையும் புட்டத்தில் குத்திக் கொண்டே உள்ளே ஓட்டி வந்தனர். சாணி-கோமியம் கான்டிராக்ட் கண்டிஷன் என்பதால் இவற்றைத் தருவது  மாட்டு ஏஜென்டின் கடமை. அய்யய்யோ! மாடு என்று சொல்லி விட்டேனே! ஏதேனும் தோஷம் வந்து விடுமோ! இதற்குப் பரிகாரம் செய்தாக வேண்டுமே!. ஐயருக்கான அடுத்த கலெக்சன் ரெடி.

மணி ஏழை நெருங்கும் நேரம். புட்டத்தில் குத்துன குத்தில் தர்..தர..தர..தர் என பசுவிடமிருந்து கோமியம் கொட்ட அதை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டனர். கோமியத்தோடு தட்தட்டென சாணம் போட ஏதோ பொண்டாட்டி பிரசவித்ததைப் போல பூரிப்படைந்தான் வீட்டுக்காரன். வீடு முழுக்க கோமியம் தெளிக்க முகூர்த்தமும் சரியாய் 7 மணிக்கு முடிந்தது. 6-7 மணிதான் முகூர்த்த நேரம். இதையும் மீறக்கூடாது என்பது பார்ப்பான் வகுத்த விதி. மீறினால்…. அண்டகாசுரன்தான். வீட்டைக் கட்டிப் பார். கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பார்களே. அது இதுதானோ!

வந்தவர்களுக்கு பந்தி பரிமாறப்பட்டது. அட இவ்வளவு காலையிலேவா? என கேட்கக் கூடாது. வாஸ்து பசியோடு காத்துக் கிடக்கிறானல்லவா.
ஒரு வழியாய் கிரகப் பிரவேசம் பேஷா முடிந்தது.

ஏதோ வீட்டைக் கட்டினோமா. குடி போனோமா என்றில்லாமல் எதற்கு இவ்வளவு பூஜை புனஸ்காரங்கள்? இங்கே இரண்டு முக்கியமான நிகழ்வுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒன்று பசுமாட்டை வீட்டிற்கு உள்ளே ஓட்டி வருவது. மற்றொன்று வீடு முழுக்க கோமியம் தெளிப்பது. இவை இரண்டும் தீட்டுக் கழிப்பு நிகழ்வுகள். புது வீட்டில் எதற்காக தீட்டுக் கழிக்க வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த வீட்டைக் கட்டிய தொழிலாளர்களில் சண்டாளர்கள் அதாவது பறையர்கள் இருக்கலாம். வீடு வேலை நடக்கும் போது இவர்களில் யாராவது அங்கு வந்து போயிருக்கலாம். அப்படி அவர்கள் வந்து போனதினாலே வீடு அசுத்தமாகி விட்டது. அதாவது தீட்டாகி விட்டது. இதற்காகத்தான் இந்த நிகழ்வுகள். எனவே மேற்படி முறையில் புது மனை புகு விழா நடத்துவது என்பது ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வே!

இப்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு வகுத்து வைத்த சட்டம். மனு சொல்கிறான்.

“வீடு முதலானவற்றிற்கு சண்டாளச் சாதிகளால் அசுத்தம் நேரிட்ட போது விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணையெடுத்தப்பாற் போடுதல், பசு மாட்டையொருநாள் வசிக்கும்படி செய்தல் இவ்வைந்தினாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது”   (மனு 5-124)

மேற்கண்ட முறையில் கிரகப் பிரவேசம் செய்வது தீண்டாமையை கடைபிடிக்கும் ஒரு வன் கொடுமை. அதற்காக இதை ஏற்பாடு செய்த வீட்டு உரிமையாளரையும் செய்து வைத்த ஐயரையும் ஏன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது?

இன்று இந்தப் பூசை புனஸ்காரங்களை சண்டாளர்களே செய்வதுதான் ஆகக் கொடுமையிலும் கொடுமை.

முற்றும்.

ஊரான்

குறிப்பு: 1. சண்டாளன் என்பவன் தீண்டத்தகாத பறையன் என்கிறான் மனு. சூத்திர ஆணுக்கும் பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன் (மனு 10-30)

2. மனு 5-124 மிக ஆழமான, நுட்பமான பொருள் கொண்டது. அதை நடைமுறையில் இன்றும் நாம் காண முடியும். இது குறித்து வேறு ஒரு சமயத்தில் விரிவாகப் பேசலாம்.

3. இந்தக் கட்டுரைத் தொடர் நண்பர் ஒருவரின் இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றுவதற்காக தயார் செய்யப்பட்டது.

தொடர்புடைய பதிவுகள்:

Friday, April 13, 2018

ஜீன்ஸ் பேண்ட்டைக் கண்டு அலறும் ‘ஆண்ட பரம்பரைகள்!’

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயின் அருகில் உள்ள கத்தியா நகரத்தைச் சேர்ந்த 27 வயதான தீண்டத்தகாதவரான இராம்பிரசாத் பாம்னியா தனது திருமணத்தையொட்டி 02.04.2018 அன்று குதிரை மீது ஊர்வலம் வந்தபோது ராஜபுத்திர சாதிவெறியர்கள் அவர் மீது கற்களை வீசியதோடு பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். சாதி வெறியர்களின் தாக்குதலிலிருந்து இராம்பிரசாத்தை பாதுகாக்க காவல் துறை உதவியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இராம்பிரசாத்தே ஒரு காவலர்தான். காவல் துறையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாமான்யர்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்.

இராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பகோரா கிராமத்தைச் சேர்ந்த புராராம் பர்மார். குஜராத்தில் அரசு ஊழியராகப் பணிபுரியும் இவர் ஒரு தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர். இவரது மகன் பரத் தனது திருமணத்தையொட்டி 2014 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குதிரை மீது ஊர்வலம் வந்ததற்காக ராஜபுத்திர சாதி வெறியர்களால் பரத் தாக்கப்பட்டதோடு கடந்த நான்கு ஆண்டுகளாக இவரது குடும்பம் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளது. அதோடு இவருக்கு ரூ.5000 அபராதமும் விதித்துள்ளனர் ராஜபுத்திர சாதி வெறியினர்.

உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்தவர் சன்ஜய் ஜாதவ். இவர் அலிகர் கல்லூரி மாணவர். தனது திருமணத்தையொட்டி  குதிரை மீது ஊர்வலம் நடத்த பாதுகாப்புக் கோரிய போது கஸ்கந்த் மாவட்ட மாஜிஸ்ரேட்டும் மற்றும் கிராம சர்பஞ்சும் அனுமதி மறுத்ததால் இவர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். உள்ளூர் காவல் துறையினரை அனுகுமாறு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியது. மாவட்ட மாஜிஸ்ரேட் தாகூர் சாதியைச் சேர்தவர். குதிரை ஊர்வலத்தை பொதுத்தெரு வழியாக அனுமதிக்க முடியாது என்றும் வேண்டுமானால் சுமார் 800மீ தூரமுள்ள மாற்றுப்பாதையில் செல்லலாம் எனவும் காவல்துறை கூறியதால் அவர் உயர்நீதி மன்றத்தை நாடவுள்ளார். இன்னும் இரண்டு வாரத்தில் அவரது திருமணம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் துவாலியா கிராமத்தைச் சேர்ந்த இராம்பால் பலாய் ஒரு தீண்டத்தகாத சாதியைச் சார்ந்தவர். தனது மகள் நன்கு படித்தவர் என்பதால் மகளின் திருமணத்தை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விமரிசையாக நடத்தத் திட்டமிட்டார். திட்டமிட்டபடி தனது மகளை மணக்கப் போகும் மாப்பிள்ளையை குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வந்தபோது ஜாட் சாதி வெறியர்கள் ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இராம்பால் காவல் துறை உதவியை நாடினாலும் இந்த தாக்குதல் திருமண விழாச் சூழலையே சீர்குலைத்து விட்டது என வேதனையோடு தெரிவிக்கிறார் இராம்பால் பலாய். தாங்கள்தான் மனிதர்கள், தீண்டத்தகாத நாங்கள் எல்லாம் விலங்குகள் என ஜாட் சாதியினர் கருதுகின்றனர். இந்த வழக்கை தான் விடப்போதில்லை என்றும் ஜாட் சாதி வெறியர்களை சட்ட நீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் இராம்பால் கூறுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் என்ற ஊரில் 10.05.2015 அன்று தீண்டத்தகாத இளைஞர் ஒருவர் தனது திருமணத்தையொட்டி குதிரையில் ஊர்வலம் வந்தபோது உயர் சாதி வெறியர்கள் அவரைத் தாக்கியதோடு குதிரையையும் கைப்பற்றிச் சென்றனர். அதன் பிறகு காவல் துறை பாதுகாப்புடன் அவர் தலையில் ஹெல்மட் அணிந்து தனது ஊர்வலத்தை நடத்தினார்.

வட மாநிலங்களில் தீண்டத்தகாதவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் உயர் சாதி வெறியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. தீண்டத்தகாவர்கள் முறுக்கு மீசை வைக்கக் கூடாதாம். ஷேடு உள்ள ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாதாம் திருமணங்களில் பாட்டுக் கச்சேரி வைக்கக் கூடாதாம். இப்படித்தான் கூப்பாடு போடுகின்றனர் வடஇந்திய உயர் சாதி வெறியினர்.

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், டிம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட் (வயது 21). தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த இவர் 8 மதங்களுக்கு முன்பு குதிரை ஒன்று வாங்கினார். தனது வயலுக்கு இவர் தனது குதிரையில் சென்று வருவார். தீண்டத்தகாதவர் குதிரையில் செல்லக் கூடாது, நடந்துதான் செல்ல வேண்டும் என இதற்கு உயர் சாதி வெறியர்கள் மிரட்டல் விடுத்து வந்த நிலையில் 29.03.2018 அன்று இரவு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப் பட்டார். (ஏப்ரல் 1, 2018 தமிழ் இந்து)




தீண்டத்தகாத சாதிப் பையன்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு தங்களது சாதிப் பெண்களை வளைத்துப் போடுகிறார்கள் என இங்குள்ள வன்னியர் சாதி வெறியர் இராமதாஸ், கொங்கு கவுண்டர் சாதி வெறியர் ஈஸ்வரன் உள்ளிட்ட பிற உயர்சாதி வெறியர்கள் கொஞ்சமும் வெட்கமின்றி பிதற்றி வருவது நாம் அறிந்ததே. இதன் பொருள் என்ன? தீண்டத்தகாதவன் ஜீன்ஸ் பேண்ட் போடக் கூடாது என்பதுதானே!. வட இந்திய சாதி வெறியர்களும் தென் இந்திய சாதி வெறியர்களும் இதில் ஒன்று படுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

பேஷ்வா பார்ப்பனர்கள் மராட்டியத்தில் ஆட்சியிலிருந்த போது பம்பாயில் தீண்டத்தகாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப் படவில்லை. கந்தல் துணிகளைத்தான் உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்கு துணிகள் விற்கும் போது அந்தத் துணிகளை கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்),

தீண்டத்தகாதவர்கள் பிணத்தின் துணியைத்தான் உடுத்த வேண்டும் (மனு 10-52) என மனு வகுத்து வைத்த விதிதான் இன்று ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என நீள்கிறது.

தீண்டத்தகாதவர்கள் நாயையும் குரங்கையும் மட்டும்தான் வளர்க்கலாம். மாடு முதலியவற்றை வளர்க்கக் கூடாது (மனு 10-51).  என மனு வகுத்து வைத்த விதிதான் இன்று தீண்டத்தகாதவர் குதிரை வளர்ப்பதை குற்றமாக பார்க்கிறது.

பேஷ்வாக்கள் ஆட்சியில் தலை நகரமான புனே நகரில் மாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படவில்லை. காரணம் இந்த நேரத்தில் ஏற்படும் நீண்ட நிழல் பார்ப்பான் மீது பட்டு விட்டால் தீட்டாகி விடுமாம். ஒரு பார்ப்பான் வருவது தெரிந்தால் தீண்டத்தகாதவன் தரையில் குப்புறப் படுத்து தனது நிழல் பார்ப்பான் மீது விழுவதை தவிர்க்க வேண்டும்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்),

நிழல் பட்டாலே தீட்டுப்பட்டுவிடும் என்று வளர்க்கப்பட்ட ஒருவன் தற்போது குதிரையில் ஒரு தீண்டத்தகாதவன் கம்பீரமாக செல்வதை ஏற்றுக் கொள்வானா? இந்த மனநிலைதான் தற்போது பிரதீப் ரத்தோட்டை கொலை செய்யத் தூண்டியுள்ளது. தீண்டத்தகாதவர்கள் குதிரை மீது ஊர்வலம் வருவதை தடுக்கச் சொல்கிறது. இது அப்பட்டமான தீண்டாமையின் நேரடி வடிவமாகும்.

இந்தியக் கிராமங்களில் தீண்டத்தகாதவர்கள்

 *     நிலம், கால்நடைகள் போன்ற செல்வங்கள் சேர்ப்பது குற்றம்

* சுத்தமான உடை உடுப்பது, ஷீ அணிவது, கைக் கடிகாரம் அணிவது அல்லது தங்க நகை அணிவது குற்றம்

* ஓர் இந்துவின் முன்னால் நாற்காலியில் அமர்வது குற்றம்

* கிராமத்தின் வழியே குதிரை மீதோ, பல்லக்கிலோ அமர்ந்து செல்வது குற்றம்

* கிராமத்தின் வழியே ஊர்வலத்தை நடத்திச் செல்வது குற்றம்.

இப்படி தீண்டத்தகாத சாதியினர் மீது பல்வேறு நிபந்தனைகளை
விதித்து அதன்படிதான் அவர்கள் வாழ வேண்டும் என விதி வகுத்து
வைத்தனர் உயர் சாதியினர் என அன்றைய இந்தியச் சூழலை
அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்), பக்கம் 36-37.

பார்ப்பனர்களா நேரடியாக தாக்குகின்றனர் என சிலர் வாதிடக் கூடும். மனுநீதியை ஒரு வாழ்க்கை நெறியாக உருவாக்கியவர்கள் பார்ப்பனர்களே. அவர்கள் வகுத்து வைத்த நீதியைத்தான் மற்ற எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என சட்டம் வகுத்தவர்களும் அவர்களே. இவர்கள் வகுத்த சட்டங்களை ஒரு மன்னன் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அந்த மன்னனையே தண்டிக்கும் அதிகாரத்தை பார்ப்பனர்கள் கொண்டிருந்தனர்.   

கீழ்சாதியைச் சேர்ந்த ஒரு மனிதன் பேராசை காரணமாக மேல் சாதித் தொழிலைச் செய்து வாழ்ந்தால் மன்னன் அவனுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவனை நாடு கடத்த வேண்டும் (மனு: 10-96)

சுருக்கமாகச் சொன்னால் மேல்சாதிக்காரனைப் போல ஒரு கீழ்சாதிக்காரன் வாழ முயலக்கூடாது என்பதுதான் மனுவின் சட்டம்.

இந்தச் சட்டத்தை மன்னன் செயல்படுத்த வேண்டும் என மனு கட்டளையிடுகிறான்.

சாதிகள் குழப்புவதைத் தடுப்பதன் மூலம் …… மன்னனின் அதிகாரம் வளர்கிறது. அவன் இவ்வுலகிலும் மறு உலகிலும் நற்பேறு பெருகிறான் (மனு: 8-172)

பார்ப்பன வர்ணாசிரம சட்டங்களை அமுலாக்குவதில் மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வெண்டும் என மனு மன்னனுக்கு எடுத்துக் கூறுகிறான்.

மன்னன் தனது விருப்பு வெறுப்புகளைக் கருதாமல் யமனைப் போலவே செயல்பட வேண்டும்அதாவது அவன் மரண நீதி தேவைதையான யமனைப் போல பாரபட்சமற்றவனாக இருக்க வேண்டும் (மனு: 8-173)

இந்த விசயத்தை மன்னனின் புனிதமான கடமை உணர்வுக்கு விட்டுவிட மனு விரும்பவில்லை. மன்னனுக்கு இதை மனு கடமையாக்குகிறான். மன்னனுக்கு பின்வருமாறு கட்டாயப் பொறுப்பை மனு அளிக்கிறான்.

மன்னன், வைசியனை வர்த்தகம், கடன் கொடுத்தல், நிலத்தில் சாகுபடி செய்தல், கால்நடை வளர்த்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். சூத்திரனை இரு பிறப்பாளர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு உத்தரவிட வேண்டும். (மனு: 8-410)

மனு இது குறித்து மேலும் கூறுகிறான்.

வைசியர்களும் சூத்திரர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுமாறு மன்னன் கவனமாக கட்டாயப்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு சாதிகளும் தங்கள் கடமைகளிலிருந்து விலகினால் இந்த உலகம் முழுவதிலுமே பெரும் குழப்பம் ஏற்படும். (மனு: 8-418)

வைசியர்கள் சூத்திரர்களுக்கே இந்த நிலை என்றால் நான்கு வர்ணத்திற்கு வெளியே தள்ளப்பட்ட தீண்டத்தகாதவர்களின் நிலை பற்றி கூறவா வேண்டும்.

மன்னன் இந்தக்கடமைப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் என்ன செய்வது? அத்தகைய மன்னனை ஒழித்துவிட வேண்டும் என்கிறான் மனு. காரணம் நால்வருண சட்டம் மனுவின் கருத்துப்படி எல்லாவற்றிலும் உயர்ந்தது.

சத்திரியர்கள் பிராமணர்களிடம் எந்த விதத்திலாவது அகந்தையுடன் நடந்து கொண்டால் பார்ப்பனர்களே அவர்களைத் தண்டிப்பார்கள்; ஏனென்றால், சத்திரியர்கள் பார்ப்பனர்களிடமிருந்துதான் தோன்றினார்கள். (மனு: 9-320).

சத்திரியர்கள் பார்ப்பானர்களிடத்திலிருந்து தோன்றியதால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடங்கிப் போகிறார்கள். (மனு: 9-321).

இப்படி, மன்னனுக்கு மேலாக நின்று கொண்டு நால்வருண தர்மத்தை பார்ப்பனர்கள் நடைமுறைப்படுத்தியதன் விளைவாகத்தான் பார்ப்பன இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வான படிநிலைச் சாதி அமைப்பு முறையும் ஒவ்வொரு சாதிக்கான தர்மமும் இன்றுவரை நிலைபெற்று நீடிக்கின்றன.

தொடர்புடைய பதிவுகள்

· குஜராத்தில் குதிரையில் சென்ற ...

· Dalit groom attacked for riding a horse