Showing posts with label திருவள்ளுவர். Show all posts
Showing posts with label திருவள்ளுவர். Show all posts

Wednesday, August 21, 2024

திருக்குறள்: முக்காலத்திற்கும் ஏற்றதா? அப்படியானால்...?

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". -குறள்.

இதில் எதைக் கற்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரா என்ன? நல்ல நூல்களைத்தான் கற்க வேண்டும், அதில் கூறப்பட்டுள்ள
நல்லவைகள்படிதான் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு நாமே பொழிப்புரை எழுதிக் கொள்கிறோம்.

எதைக் கற்றாலும் அதற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் என்பதுதானே இந்தக் குறளின் பொருள். 

அப்படியானால், மத்தியப் பிரதேச கிராமங்களில் சிறுவர்கள் கற்பதும், அதற்குத் தக அவர்கள் நடப்பதும் சரியன்றோ?

"ம.பி கிராமங்களில் திருட்டு, கொள்ளை பற்றி சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கும்பல்! 

மத்திய பிரதேசம் ராஜ்கர், மாவட்டத்தில் காடியா, குல்கேடி ஹல்கேடி ஆகிய கிராமங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பிக்பாக்கெட், வழிப்பறி, கூட்டமான இடங்களில் பைகளைப் பறிப்பது, வேகமாக ஓடுவது, போலீஸ்காரரை ஏமாற்றுவது, பிடிபட்டால் தாக்குதலை சமாளிப்பது என சகல பயிற்சி அளிக்கப்படுகிறது." 

இது இந்து தமிழ் திசை நாளேட்டில், ஆகஸ்டு 21, 2024 அன்று வெளியான செய்தி. 


பயிற்சி பெற்ற இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேற்கண்ட திருட்டுச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கற்றதைத்தானே இவர்கள் செயல்படுத்துகிறார்கள் "நிற்க அதற்குத் தக" என்பது இங்கும் பொருந்தும்தானே? இப்படியும் பொழிப்புரை எழுதலாம்தானே?

நேர்மையாய் வாழ வழியற்ற நிலைமை இருப்பதனால்தானே இப்படி மாற்று வழிகளில் வாழ மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முறையற்ற வழியில் பணம் பறிக்கும் பயிற்சி அங்கு மட்டுமா அளிக்கப்படுகிறது? அரசு அலுவலகங்களில், காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் கையூட்டு பெறும் பயிற்சியை எங்கே கற்றுக் கொண்டார்கள்? யார் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது? இதையும் சேர்த்து அல்லவா நாம் பரிசீலிக்க வேண்டும்.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்கணக்கு நூல்கள் அனைத்துமே சமுதாயம் மிகவும் கெட்டுச் சீரழிந்திருந்த ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. சமுதாயத்தை மாற்றி அமைக்கத் துணியாமல் உபதேசங்களை மட்டும் அன்று அழகாய் வடித்துக் கொடுத்தார்கள்.

அதே உபதேசங்கள் இன்றும் போதிக்கப்படுகின்றன. குறள் முக்காலத்துக்கும் பொருந்தும் என்கிறார்கள். அப்படியானால், சமுதாயம் கெட்டுச் சீரழிந்த சமுதாயமாகவே தொடரட்டும்,  ஊதேசங்களை மட்டுமே நாம் போதித்துக் கொண்டே பழம் பெருமை பேசிக்கொண்டே இருப்போம். சமுதாயம் எக்கேடு கெட்டுச் சீரழிந்தால் என்ன என்கிற கவலை இன்றி, அதை மாற்றி அமைக்கின்ற போர்க்களத்தில் தம்மை இணைத்துக் கொள்ளாமல் வெறும் உபதேசங்களை மட்டுமே போதிப்பது மேதைத்தனம் பொருந்திய கோழைத்தனம் அல்லவோ? 

பழைய உபதேசங்களுக்கு பொழிப்புரை எழுதுவதை நிறுத்திவிட்டு, சமுதாயத்தைப் புரட்டிப் போடும் புது பொழிப்புரை எழுதாதவரை, ஞானிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள், உபதேசங்களும் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்! 

ஊரான்

Sunday, July 28, 2024

ஆசாரக் கோவையும் ஆரிய ஒழுக்கமும்!

நெருங்கிய நண்பர்கள் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் குழுவில், பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவையிலிருந்து, அன்றாடம் ஒரு பாடலை ஒரு நண்பர் பகிர்வது வழக்கம். ஆசாரக்கோவை ஒரு நீதிநூல் என்பதனால் அந்த நண்பரும் நல்லெண்ணம் கருதியே அவற்றைப் பதிவிட்டு வருகிறார்.
உணவு உண்ணும் முறை குறித்து ஆசாரக்கோவையின் பாடல் 18 ஒரு முறை பகிர்ந்திருந்தார்.

 ஆசாரக்கோவை

அதன் மீது நண்பர் ஒருவர்,
"உண்கலத்தைச் சுற்றி நீர் இறைத்து..." ஏன்? (காரியத்திற்கான காரணம் என்ன?). அப்படி செய்யாவிட்டால் எப்படி அது ஒழுக்கக் கேடாகும்?
 
அப்படி செய்யாவிட்டால் "அரக்கர் வெறுத்து எடுத்துக்  கொண்டு நீங்குவார்." இதன் பொருள் என்ன?
 
புரியவில்லையே... தெரிந்தவர்கள்/புரிந்தவர்கள் விளக்கவும். நன்றி.
என்று வினா எழுப்பி,
 
அரக்கர் என்று கூறப்பட்டிருப்பது எறும்புகளைக் குறிக்கலாம்என்றும் அவர் கருதினார்.
 
அதன் மீதான எனது பதில்,
 
ஆசாரக்கோவை என்பது அந்தணர்களின் ஒழுக்கம் குறித்த ஒரு நூல். அது அனைவருக்குமானது அல்ல; மேலும் ஆசாரம் என்பது தமிழ் சொல் அல்ல. வடமொழியில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை, ஆசாரக்கோவை என்ற பெயரில் தமிழில் கோர்த்து சொல்லியிருக்கிறார்கள்.
 
பாடல் பதினெட்டில் வரும் கலத்தையோ அல்லது இலையையோ சுற்றி நீர் விடுவது என்பது வெறுமனே நீர் விடுவது மட்டுமல்ல, மந்திரம் சொல்லி நீரை விட வேண்டும். அவ்வாறு விட்டால் அரக்கர்கள் அணுக மாட்டார்கள் என்பதே அதன் பொருள்.
 
வீட்டில், சாப்பாடு தட்டாக இருந்தாலும், திருமண விருந்தில், டைனிங் டேபிளில் பேப்பர் விரித்து இலை போட்டாலும், இன்றும்கூட இப்படிச் செய்பவவர்களைக் காண முடியும். பொருள் புரியாமலேயே அதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

வடமொழி ஒழுக்க நெறிமுறைகள் பதினெண்கீழ் கணக்கு நூல்களின் காலகட்டத்திலேயே நிறைவே தமிழில் புகுந்து விட்டன என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று. ஆசாரக் கோவை குறித்து இணையத்தில் ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை 100 ஆண்டுகள் அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு அச்சில் ஏற்றும் பொழுது, அச்சேற்றிவர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் நமக்கு வழங்கினார்கள்.
 
அதன் பிறகு, காலப்போக்கில், ஒவ்வொரு முறையும் அதன் மீதான விமர்சனங்கள் வரும்போதோ அல்லது தங்களின் தேவைக்கு ஏற்பவோ கருத்துக்களை மாற்றி அமைக்கின்றனர். அதற்கான சமீபத்திய உதாரணம் வள்ளுவரும் திருக்குறளும்.
 
ஒழுக்கம் என்பது இன்றைய உற்பத்தி முறைக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் ஏற்ப இன்றைய சமூக கட்டமைப்புக்குத் தகுந்தவாறு நாம் உருவாக்கிக் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
 
எட்டாம் வகுப்புவரை அறியாப் பருவத்தில், விபூதிப் பட்டையோடு பள்ளிக்குச் சென்ற நான், ஒன்பதாம் வகுப்பிலிருந்து கடவுள் மறுப்பாளனாக மாறிவிட்டேன். அப்பொழுது எனக்கு பெரியாரையும் தெரியாது, பகுத்தறிவு என்பதைக் கேள்பட்டதுமில்லை. நான் நானாகவே, தானாகவே மாறிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளியில் என்னுடன் பயின்ற இன்னொரு மாணவனும் கடவுள் மறுப்பாளன்தான். பழைய எஸ்எஸ்எல்சி இறுதித் தேர்வில் அவன் முதல் மாணவன், நான் இரண்டாம் மாணவன்.
 
அப்பொழுதெல்லாம் நான் கருப்பாக குண்டாக இருப்பேன். பள்ளி வகுப்பறையில்கூட முதல் வரிசையில் இரண்டாவது மாணவனாக அமர வைக்கப்பட்டேன். என்னைச் செல்லமாக கரிபால்டி என்றுகூட நண்பர்கள் அழைப்பதுண்டு.
 
அன்றுமுதல், எனக்கென்று சில ஒழுக்க முறைகளை வகுத்து, அதற்கு ஏற்ப வாழ்ந்து வருகிறேன். நான் பள்ளி இறுதித்தேர்வில் இரண்டாம் மாணவனாக வந்தும், தமிழகத்தின் முன்னிலை முதல் பாலிடெக்னிக்கான சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக்கில், நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த பொழுது இரண்டாம் ஆண்டில் முதலாவதாகவும், மூன்றாம் ஆண்டில் மூன்றாவதாகவும் வந்தும், கடவுளை வேண்டினால் படிப்பு வரும் என்பதெல்லாம் கட்டுக்கதை என்பதை நிறுவி உள்ளேன்.
 
புகைப்பது, மது அருந்துவது, பொய் சொல்வது, பித்தலாட்டம் செய்வது, பிறரை ஏமாற்றுவது, வட்டிக்கு விடுவது, லஞ்சம் பெறுவது, அலுவலக வேலையாக வெளியூர் செல்லும் பொழுது ஆட்டோவில் செல்லாமலேயே சென்றதாகவும், குறைந்த கட்டணத்தில் விடுதியில் தங்கிவிட்டு அதிக கட்டணத்துக்கு ரசீது பெற்று பொய் கணக்கெழுதுவது, வருமான வரி தாக்கலின்போது சேமிக்காமலேயே சேமித்ததாக கணக்குக் காட்டுவது என்கிற ஒழுங்கீனங்கள் என்னிடம் அறவே கிடையாது.
 
நான் திருச்சி பெல்நிறுவனத்தில் உணவக நிர்வாகக் குழுவில் பணியாற்றிய காலத்தில், உணவகத்தில் உணவக ஊழியர்கள் சிலர் செய்த ரூபாய் நாலரைகோடி ஊழல் வெளிக்கொணர நான் காரணமாய் இருந்ததையும் அங்குள்ள பலரும் அறிவர். 

ஒரு முறை திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற போனஸ் போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்களில் என்னைத் தொடர்பு படுத்தி, நான், “ED ஒழிக என முழக்கமிட்டதாகவும், செக்யூரிட்டி பாதுகாவலர்களைத் தள்ளிவிட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட சில தொழிலாளர்களை உள்ளே அழைத்துச் சென்றதாகவும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பெல் நிறுவனத்தை விட்டே என்னை வெளியேற்றினார்கள்.
 
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் அதே நிறுவனத்தில் 15 ஆண்டுகால பணிக்காலத்தை பறிகொடுத்து, பாதி ஊதியத்தில் மீண்டும் புதிய ஊழியராக பணியில் சேர்ந்தேன். அதனால் எனக்கு ஏற்பட்ட ஊதிய இழுப்பு, பண இழப்பு கோடியைத் தாண்டும். இன்றும்கூட ஓய்வூதியத்தில் அந்த இழப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
ஒரு சிறு இழப்பு என்றாலே செய்கின்ற வேலையை குறைத்துக் கொள்ளும் ஊழியர்கள் மத்தியிலே நான் எப்பொழுதும் போல உற்சாகமாகவே பணியாற்றினேன். ‘நக்சலைட் தீவிரவாதி என்கிற பார்வை நிர்வாகத்திற்கு என் மீது இறந்தபோதிலும், வேலையில் நான் காட்டிய முனைப்பும், தொழில்நுட்ப அறிவில் எனது ஆளுமையையும் மறுக்க முடியாமல் மேற்பார்வையாளராக இருந்த என்னை அதிகாரியாக்கினார்கள். அதிலும் கூட ஓராண்டு மறுத்த பிறகுதான் கொடுத்தார்கள்.
 
எனது திருமணத்தின் போது ஒரு கிராம் நகைகூட நான் வரதட்சணையாக பெற்றது கிடையாது. வேறு எந்தச் சீரையும் கேட்டதும் பெற்றதும் கிடையாது. இன்றும்கூட எனது மகனுக்கு அப்படித்தான் வரன் தேடிக்கொண்டிருக்கிறேன். 
 
ஆசாரக்கோவை போன்ற நீதிநூல்களா எனக்கு வழிகாட்டின? பகுத்தறிவு பேசுகின்ற சிலரிடமும், ஏன் பொதுவுடைமை பேசுகின்ற சிலரிடம்கூட ஒழுக்கக் கேடுகள் மலிந்து கிடக்கும் சூழலில்,  எனக்கான ஒழுக்க நெறிகளை நானே வகுத்துக் கொண்டேன். இவற்றை நான் பாட்டாளி வர்க்கப் ஒழுக்கம் அல்லது பண்பாடு என்று வகைப்படுத்துகிறேன். இத்தகைய வாழ்வியல் முறைக்கு மக்கள் மாறவேண்டும் என்பதே எனது அவா

ஆனாலும், இன்றைய சமூகம் ஒரு சொத்துடமைச் சமூகமாகும். சந்ததிகளின் எதிர்காலம் வளமாக இருக்க வேண்டி, சொத்து சேர்ப்பதற்காகத்தான் பலவகையான ஒழுங்கீனங்களையும் பலரும் செய்கின்றனர். இத்தகைய ஒழுங்கீனங்கள், சொத்துடமைச் சமூகத்தின் ஒரு அவல நிலை.

சொத்துடமைச் சமூகம் ஒழிக்கப்பட்டு, ஒரு பொதுவுடைமைச் சமூகம் மலரும் பொழுது, இன்றைய ஒழுங்கீனங்கள் கண்டிப்பாக காணாமல் போகும். ஆனாலும் புதிய வகையான ஒழுங்கீனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, ஒழுங்கீங்களுக்கு எதிரான ஒரு தொடர் போராட்டம் தவிர்க்க முடியாதது.
 
ஊரான்

whatsapp குழுவில் நண்பர்களினா கருத்துக்கள்:

பாஸ்கரன்: அருமையான கருத்து சேகர் 👏

ராஜசேகரன்தனி மனிதன் ஒழுக்கமே எந்த ஒரு நாட்டையும் உயர்த்தும். சேகர் கொள்கைப் பிடிப்பு மிக்கவர் என நான் நன்கறிவேன். ஒழுக்கம் என்னும் அளவீட்டில் எனக்கு குறைந்த அளவே மதிப்பெண் கிடைக்குமென்றாலும் சேகரைப் போன்றவர்களைப் பார்க்கும் போது ஒரு மரியாதை ஏற்படும்.

LNR

சக்திவேல்: தனிமனித ஒழுக்கம் நூல்கள் படிப்பதால் மட்டும் வருவதல்ல. அது அந்த தனி நபரின் மனசாட்சி மற்றும் நன்னடத்தையால் வருவது . படித்தவர்கள் தான் பெருந் தவறுகளை பயமின்றி செய்பவர்கள் என நிறைய சூழ் நிலைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளேன்.

ஞானசேகரன்: ஆசாரக்கோவை ஒரு பிரிவினருக்கான ஒழுக்கத்தைப் பற்றிய நூல் எனில், அது எப்படி பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாக தமிழறிஞர்களால் ஏற்கப்பட்டது என்று புரியவில்லை...🤔
சேகர்,

நீ கடைபிடிக்கும் ஒழுக்கங்களை யாராவது கற்றுக் கொடுத்தார்களா? அல்லது பிறந்து, வளர்ந்த சூழ்நிலை பயிற்றுவித்ததா?  ஏன் அவற்றை கடைபிடிக்கவேண்டும் என்று தோன்றியது?

இப்படி ஒருவர், தானே உணர்வது, கடைபிடிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாவது, நல்ல ஒழுக்கம் என்று அறிவது, இப்படி சிலருக்கே, எந்த சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து கல்வி பெற்றாலும் தோன்றுவதைத்தான் இயற்கையான அறிவு அல்லது பிறவி குணம் என்று நம் முன்னோர்கள் கண்டார்களோ?

இயற்கையான அறிவு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கிறது; ஒரேவிதமான உள்ளீடுகள் இருந்தாலும் ஏற்கும் திறன், சிந்திக்கும் திறன், பகுக்கும் திறன் ஒருவரைப் போல எல்லாருக்கும் ஒருங்கே இருப்பதில்லை.
மிகமிக குறைவான உள்ளீடுகள், வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சிலர் அதிக உள்ளீடுகள், வசதி வாய்ப்புகள் கிடைத்தவர்களை விட சிறந்தவர்களாகவும், அறிவாளர்களாகவும், திறமையானவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.  இவற்றிற்கு காரணம்?

கனகராஜ்: நம் தாய் தந்தையரின் ஒழுக்க உணர்வு, நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள், உற்றார் உறவினர்களின் சொற்கள் மற்றும் செயல்கள், நம் ஆசிரியர்களின் போதனை, நம் பாட நூல்கள் மற்றும் பிற நூல்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை நமது அறிவு சிந்தித்து இவை நல்லவைகள் என்று ஏற்றுக் கொண்ட பின்பே அவ்வழியை பின்பற்றுகிறோம். ஆசாரக்கோவை என்ற நூல் ஆசாரத்தை(ஒழுக்கத்தை, நம் அன்றாடம் பின்பற்றும் செயல்களை) விவரிக்கும் நூல். இது ஆசாரிகளுக்கோ, பிராமணர்களுக்கோ ஏற்பட்டது அன்று. அப்படியே அவைகள் இருந்தால் கூட நல்லவைகளை எடுத்துக் கொண்டு பின்பற்றுதல் நல்லதுதானே. ஒருவர் ஒரு நூலை எழுதுகிறார் என்றால் அவருடைய சம காலத்தில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் அவருக்கு சரி என்று படுகிற கருத்தைத்தான் நூலாக படைக்கிறார் என்பது எனது கருத்து. எப்படி இருப்பினும் நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை கைவிடுவோம். "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்"- குறள்.

ஜெயராமகிருஷ்ணன்: ஒவ்வொரு மனிதனும் துணிச்சல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் கண்ணியம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் அப்படி ஒருவன் இருந்தால் தான் நல்லவைகள் எங்கு இருந்தாலும் யார் சொன்னாலும் அதையே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் மனப்பக்குவமும் உண்டாகும்.

ராமு: அற்புதமான பதிவு.பல நேரங்களில் நினைக்கும் போது மிக சிறிய கிராமங்களில் கூட எதற்காக போலீஸ் ஸ்டேஷன்?மிகச் சிறிய நகரங்களில் கூட நீதிமன்றங்கள் எதற்காக?என்ற எண்ணம் இன்னமும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.அவ்வளவு குற்றங்களா நாட்டில் நடக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.தங்களின் உணவக ஊழல் தடுப்பில் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.நல்ல செயலுக்கு பொய் குற்றச்சாட்டுகளை அபாண்டமாக நிர்வாகமே உண்டாக்கி விடும் போது யாரை குற்றம் சொல்வது என்றே தெரியவில்லை.இது போன்ற பொய்வழக்குகளுக்காகவே  நிர்வாகம் காவல்துறை நீதித்துறை என்று இருக்கிறது என்பது புரிகிறது.நிர்வாகத்தில் நேர்மையாக ஒருவர் கூடவா இருக்க மாட்டார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.நிர்வாகத்தில் இருப்பவர்கள் 95% எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்களாகவே இருக்கும் போது அவர்களும் இதற்கு துணை போவது வேதனையை தருகிறது. நன்றி சார்.

வேலுமணி: நேர்மையான வாழ்க்கை ஆணித்தரமான கருத்து
யதார்த்தமான அணுகுமுறை.
என்றுமே தேவையான வாழ்க்கைமுறையை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

Sunday, June 2, 2024

மெய்ஞானம் என்றால் என்ன?

மெய்ஞானம் என்றால் என்ன?

மெய்ஞானம் என்றால் புறநிலைமைகளை மனிதன் தன் ஐம்புலன்களால் உணர்ந்து அவ்வாறு உணர்ந்தவற்றைத் தொகுத்து அதில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து ஒரு கருத்தை உருவாக்குவது. இதைத்தான் தத்துவம் என்கிறார்கள். 

புற உலகில் நடக்கின்ற பல்வேறு விசயங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கங்கள் சாதகமானதாகவோ பாதகமானதாகவோகூட இருக்கலாம். பாதகமான தாக்கங்கள் ஏற்படும் போது அது குறித்தக் காரணங்களைக் கண்டறிந்து அதிலிருந்து மீள்வதற்கு ஒரு பொதுவான வழிகாட்டுதலை கொடுக்கிறான். அதையே முழு முற்றான உண்மையாக ஏற்றுக் கொண்டு அதை கடைபிடிக்க முயற்சிக்கிறான் மனிதன். 

சாதகமான விசயங்கள்கூட பரிசீலிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு அதுவும் தத்துவத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது.

இங்கே முதன்மையானது புற உலகில் உள்ள பொருள்கள்தான். புறவுலகில் பொருள்கள் இல்லை என்றால் ஐம்புலன்களுக்கு உள்ளீடுகள் ஏதுமில்லை. ஐம்புலன்களுக்கு உள்ளீடுகள் ஏதுமில்லை என்றால் மூளையில் எதுவும் பதிவாகப் போவதில்லை. மூளையில் எதுவும் பதிவாகவில்லை என்றால் மனம் என்ற ஒன்றுக்கு வேலையே இல்லை. மனம் என்பது மூளையின் ஒரு வெளிப்பாடுதானே ஒழிய மனம் என்று ஒன்று தனியாக இல்லை. mind is the product of brain. 

சமூக வாழ்க்கையும் இங்கே புறவுலகைச் சார்ந்ததுதான். புற உலகில் உள்ள பொருள்களோடு மனிதன் கொண்டுள்ள தொடர்பு, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பு- தனியாகவோ அல்லது கூட்டாகவோ-இவை எல்லாமே மனித மூளைக்கான உள்ளீடுகள்.

ஐம்புலன்களின் ஆரோக்கிய நிலையைப் பொறுத்து பதிவாகின்ற உள்ளீடுகள் வேறுபடுகின்றன. உள்ளீடுகள் வேறுபடும் பொழுது மனமும் வேறுபடுகிறது. இவை எல்லாம் வேறுபடுவதனால்தான் மாறுபட்ட கருத்துக்கள் வருகின்றன. அதனால்தான் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து எல்லோரும் ஒரே மாதிரியான கருத்துக்களை முன் வைப்பதில்லை. தத்துவஞானிகளுக்கும் இது பொருந்தும்தானே? எனவே முழு முற்றான உண்மை / அறிவு என்று எதுவும் இல்லை.  நேற்றைய உண்மை இன்றைய பொய்யாகிறது. இன்றைய பொய் நாளைய உண்மையாகக்கூட ஆகலாம். அது புறஉலகைச் சார்ந்தது. 

மனித சமூகம் முதன் முதலில் கூட்டம் கூட்டமாக தனித்தனி இனக் குழுக்களாகத்தான் இருந்தன. அப்பொழுதெல்லாம் தத்துவங்கள் இருந்தனவா என்று தெரியவில்லை. எழுத்தறிவில்லா காலகட்டமல்லவா அது. 

அதன் பிறகு அடிமைச் சமூகம் வந்த பொழுது அடக்கு முறையும் சேர்ந்து வந்ததனால் அவற்றிலிருந்து மீள்வதற்கான தத்துவங்கள் தோன்றின.

அதன் பிறகான நில உடமைச் சமூகம் வந்த பொழுது சொத்துடமை பிரதானமாக இருந்தது. அதற்கேற்ப குடும்ப அமைப்புகளும் தோன்றின. 

அந்த காலகட்டத்தில்தான் போட்டி, மோதல், பொறாமை, களவு, காமம், போதை உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகள் அதிகரித்து, அவற்றிலிருந்து மக்களை மீட்பதற்கான வழியைத் தேட முயன்றனர்.  அப்பொழுதுதான் திருவள்ளுவரைப் போன்ற மெய்ஞானிகள் தோன்றினார்கள். 


சொத்துடைமைச் சமூகமும் குடும்ப அமைப்பும் இன்னும் மாறிவிடவில்லை. அதனால்தான் வள்ளுவர் காலத்திய பல்வேறு சீர்கேடுகளும் இன்றும் தொடர்கின்றன.

அறிவியல் வளர்ச்சி, அதை ஒட்டிய புதிய கருவிகளின் கண்டுபிடிப்புகள், அதைத் தொடர்ந்து கருவிகளுக்குச் சொந்தக்காரர்களான முதலாளிகள், லாபம், சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்றைய சமூகத்தில் கூடுதலாக வந்து சேர்ந்தன. 

இவற்றையெல்லாம் தொகுத்து பார்த்துதான் இவற்றிலிருந்து மக்களை எப்படி மீட்பது என்று சிந்திக்கும்போது காரல் மார்க்ஸ் போன்ற தத்துவஞானிகள் தோன்றுகிறார்கள். 

மெய் என்றால் உண்மை. இது குறித்த அறிவைத்தான் தத்துவம் என்கிறார்கள். எனவே காரல் மார்க்ஸ் போன்றவர்களும் மெய்ஞானிகள்தான். 

மெய்ஞானமோ தத்துவஞானமோ அது என்றென்றைக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. 

உற்பத்தி முறை மாறும் பொழுது உற்பத்தி உறவுகளும் மாறும். உற்பத்தி உறவுகள் மாறும் பொழுது பண்பாடு பழக்க வழக்கங்களும் மாறும். இவை எல்லாம் மாறும் பொழுது பிரச்சனைகளும் மாறும். பிரச்சனைகள் மாறும் பொழுது அதற்கான தத்துவ விளக்கங்களும் மாறும். 

எனவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் ஒரே மாதிரியான தத்துவங்கள் இருக்க முடியாது. 

சுரண்டலற்ற ஒரு பொதுவுடமைச் சமூக சமுதாயம் அமையும் பொழுது அங்கே வேறு விதமான பிரச்சினைகள் தோன்றும். அப்பொழுது காரல் மார்க்சின் தத்துவஞானம் தேவையற்றதாகி, வேறு ஒரு தத்துவஞானம் தோன்றும். இதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி போக்காக இருக்கும். இருக்க முடியும்.

மனித சமுதாயத்தின் வளர்ச்சியினூடே அறிவியலும் சேர்ந்தே வளர்கின்றது. எனவே அறிவியலை உள்ளடக்கியதுதான் மனித சமூகமும். அறிவியலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் மனித சமூகத்தில் விளைவுகளை ஏற்படுகின்றன என்பதை நாம் ஒதுக்கிவிட முடியாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனின் தேவைக்காகத்தான். ஆனால் அது யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து அதனுடைய பயன்பாடு அமையும். சோசலிச காலகட்ட ருசியாவை ஒப்பிட்டுப் பாருங்கள். இதன் உண்மை புரியும்.

தத்துவஞானம் என்பது தமிழ் இனத்திற்கானது மட்டுமல்ல அது உலக மனித இனத்திற்கானது. ஒவ்வொரு இனமும் அவர்களுக்கான தத்துவஞானத்தை கொண்டவர்கள்தான். இதில் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்த இனத்தின் சூழலுக்கு ஏற்ப அந்தந்த காலகட்டத்தில் தோன்றிய தத்துவஞானங்களில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். தமிழ் மரபிலும் எண்ணற்ற தத்துவஞான கருத்துக்கள் உள்ளன என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

ஊரான்

(ஒரு வாட்ஸ்அப் குழுவில் எழுதிய பதில்)

Sunday, September 3, 2023

சிதைந்து வரும் அரசு கட்டமைப்பும் சீற்றம் கொள்ளும் மக்களும்!

மயக்கம் தரும் படிப்பினைகள்

2023, ஆகஸ்டு 29 அன்று சென்னைக்கு ஒரு அவசர‌ பயணம். இரவு போதிய தூக்கமில்லை. அலாரம் ஏமாற்றிவிட்டதால் காலை நான்கு மணிக்கு எழவேண்டிய நான், ஐந்து மணிக்கு எழுந்து அவசர அவசரமாகப் புறப்பட நேர்ந்தது. ஐந்தரை மணிக்கு வாலாஜா டோல்கேட்டை அடைந்த போது லேசான தூரல். சென்னை செல்லும் பேருந்துகளில் உட்கார இடம் கிடைக்குமா எனக் காத்திருந்து, கடைசியில் வேறு வழியின்றி நின்று கொண்டே பயணிக்க நேர்ந்தது.

முன்பக்க படிக்கட்டு அருகே கம்பியைப் பிடித்துக் கொண்டே ஒரு அரை மணி நேரம் பயணித்திருப்பேன். காஞ்சி மீனாட்சிக் கல்லூரியில் இருவர் இறங்குவார்கள் என்பதை அறிந்து, இடம் பிடிப்பதற்காகத்தான் படிக்கட்டு ஓரம் நின்று பயணித்தேன். சிறிது நேரத்தில் தாகம் எடுத்து, நா வறண்டு விட்டது. மயக்கம் வரும் போலத் தோன்றியது. பேருந்தின் நடுவில் கூட்டத்தோடு நின்றிருந்த எனது துணைவியாரிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த போதே நான் பேருந்தின் மேல் படிக்கட்டில் விழுந்து கிடந்தேன். அருகிலிருந்த இளைஞர் ஒருவர்தான், நான் பேருந்திலிருந்து கீழே விழாமல் தடுத்து என்னைக் காப்பாற்றி உள்ளார். இல்லையேல் என் கதை அன்றே முடிந்திருக்கும். 
 
ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது தண்ணீர் குடித்த பிறகு சற்றே மயக்கம் தெளிய, வலது பக்க பின்மண்டையில் காதருகே வலி தெரிந்தது. கைவைத்து பார்த்த போது லேசான வீக்கம். நான் மயங்கி விழுந்தபோது ஏதோ ஒரு கம்பியில் எனது தலை மோதி அடிபட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. காலை உணவிற்காக சாலையோர ஓட்டல் ஒன்றில் பேருந்து நின்றபோது கொஞ்சம் பிஸ்கட்டையும், ஒரு கப் காபியையும் எடுத்துக் கொண்ட பிறகு உடலில் ஓரளவு தெம்பு ஏற்பட்டதால் பயணத்தைத் தொடர்ந்தேன்.
 
அகவை அறுபத்தைந்தில் மூன்று மணி நேரம் எடுக்கும் ஒரு பயணத்தில் நின்று கொண்டு பயணிக்கலாமா? கூடாது என்பது தெரிந்தாலும் அவசரத்திற்குப் போய்த்தானே ஆகவேண்டி உள்ளது. காலையில் எடுக்க வேண்டிய எல்ட்ராக்சினை எடுத்திருந்தாலோ, நா வறண்ட போது உடனடியாகத் தண்ணீரைப் பருகி இருந்தாலோ, நிற்க முடியாத போது கவுரவம் பார்க்காமல் யாரிடமாவது உட்கார இடம் கேட்டோ அல்லது கீழே உட்கார்ந்து கொண்டோ பயணித்திருந்தாலோ இதெல்லாம் நடந்திருக்காதுதானே? இதை எல்லாம் செய்யத் தயங்கியது ஏன்? அல்லது தடுத்தது எது? கேள்விகள் மட்டுமே எஞ்சி நிற்கிறது. எது நடந்தாலும், பயணங்களின் போதான எனது தேடல் மட்டும் தொடர்கின்றன.

வெறித்து நிற்கும் பறக்கும் சாலை

பூந்தமல்லியில் ஒருசிலர் இறங்கிக் கொள்ள, மதுரவாயல் வழியாக கோயம்பேட்டை நோக்கிப் பயணித்தபோது, சாலையின் நடுவே உள்ள பறக்கும் சாலைக்காக அமைக்கப்பட்ட ஓங்கி உயர்ந்து நிற்கும் மொட்டைத் தூண்கள் எண்ணற்ற கேள்விகளை என்னுள் எழுப்பின. மதுரவாயிலையும் துறைமுகத்தையும் இணைப்பதற்கான பறக்கும் சாலை அமைப்பதற்கானத் திட்டம் 2009 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ரூ.1815 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு அதற்காக எழுப்பப்பட்ட தூண்கள்தான் இவை. கடந்த பதினைந்து ஆண்டுகளில் வாகனங்களைச் சுமக்க வேண்டிய இந்தத் தூண்கள், இசைக் கச்சேரி விளம்பரங்கள், தலைவர்களின் பிறந்த நாள் வாழ்த்து உள்ளிட்ட எண்ணற்ற சுவரொட்டிகளை மட்டுமே சுமந்து நிற்கின்றன. 


இது கலைஞர் மூளையில் உதித்தத் திட்டம் என்பதால், அடுத்து 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவால் இத்திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அன்றே உலவினாலும், அது கூவம் நதிநீர் ஓட்டத்திற்குத் தடையாக இருக்கும் என்பதால் கைவிடப்பட்டதாக அதிமுக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 இல் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்றப் போவதாக அறிவித்தது. 

மிகக்குறுகிய காலத்திலேயே துருப்பிடித்து இத்தும் போகும் தன்மை கொண்டவை இரும்புக் கம்பிகள். துருப்பிடித்தல் என்பது சேன்சரைப் போன்றது. ஒருமுறை துருப்பிடித்து விட்டால் அது மொத்தத்தையும் அரித்துக் தின்றுவிடும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக கடும் மழையிலும், பனியிலும், வெயிலிலும் தூண்களுக்கு மேலே துருத்திக் கொண்டிருக்கும் இரும்புக் கம்பிகளை அப்படியே பயன்படுத்தினால் என்னவாகும் என்பதுதான் எனது கேள்வி. 

ஆனால், எனது கேள்விக்கு இனி இங்கே இடமில்லை. ஏற்கனவே 15% வேலைகள் முடிவடைந்து சுமார் ரூ.270 கோடியை விழுங்கிய இத்திட்டம் முற்றிலுமாக புதிய வகையில் ரூ.5855 கோடி மதிப்பில், இரண்டு அடுக்கு பறக்கும் சாலையாக மாற்றி அமைக்கப்படவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து, மதுரை எய்ம்ஸ் ஒற்றைக்கல் புகழ் மோடி அவர்களால் கடந்த ஆண்டு, மே 16 இல் அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. 

புதிய பாதை அமைக்கும் போது, பழையத் தூண்களை அப்படியே விடப்போகிறார்களா அல்லது அகற்றப் போகிறார்களா? அப்படியே விட்டால் போக்குவரத்துக்கு இடையூறு; அதனால் அகற்றுவதைத்தவிர வேறு வழி இல்லை. பழைய திட்டத்தை முடக்கியதால் ஏற்பட்ட இந்த மொத்த இழப்பிற்கும், சனாதனப் பேர்வழி, செத்தும் கெடுத்த சீதக்காதி சென்டிமெண்ட் ஜெயலலிதாதானே காரணம்? இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என சிந்தனையில் ஆழ்ந்த போது, மதுரவாயில் சாலையிலிருந்து கோயம்பேடு மார்க்கெட் சாலைக்குள் பேருந்து நுழைந்தது. 

தியோடலைட்டுகளை மறந்த பொறியாளர்கள்

கோயம்பேடு மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலைய நிறுத்தத்தில் ஒரு சிலர் இறங்கிக் கொள்ள, முன்னோக்கிச் செல்ல பேருந்து திணறியது. முதல் நாள் பெய்த 4 செ.மீ மழைக்கே சாலையில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி, செல்லும் வாகனங்களால் அலை எழுப்பிக் கொண்டிருக்க, ஒரு ஐம்பது எருமை மாடுகள் மார்க்கெட்டுக்கு உள்ளே இருந்து மழைநீரில் தவழ்ந்து எதிரே வர, இதன் ஊடே பேருந்தை லாவகமாக நகர்த்திச் சென்றார் ஓட்டுநர்.

இது பெரு மழை அல்ல; மழை பெய்து பல மணி நேரம் ஆன பிறகும் நீர் வடியவில்லையே? ஏன்? சாலை மற்றும் வடிகால் அமைப்பு அந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பொருள். இதற்குப் பிரியாவை நொந்து கொள்வதா, இல்லை மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு தியோடலைட்டுகளைக் கையாளத் தெரியவில்லை என்று புரிந்து கொள்வதா?

தெருவில் சுற்றித் திரியும் பசுமாடு, ஒரு பச்சிளங் குழந்தையை மிகக் கொடூரமாக தாக்கியக் காட்சியை ஊடகங்களில் கண்டு மக்கள் பதறிய போதும் எருமை மாடுகள் எப்படி சென்னை நகரில் சுதந்திரமாக உலாவர முடிகிறது? சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. எருமைத் தோல் அதிகாரிகள் மாறாதவரை மாடுகளுக்குக் கொண்டாட்டம்; நமக்கோ திண்டாட்டம்தான்.

சிதைந்து வரும் அரசு கட்டமைப்பும் சீற்றம் கொள்ளும் மக்களும்

கோயம்பேடு பேருந்து நிலைய பின்பக்க நுழைவு வாயில் வழியாக நுழைந்து போது சாலையின் இருபுறங்களிலும் ஒவ்வொரு மரத்தடியின் கீழும் முளைத்திருந்த கண்ணாடிக் காடுகளைப் பார்க்கையில், இம்மரத்தடிகள் எல்லாம் முந்தைய இரவில் குடிமகன்களின் உல்லாசபுரிகளாக இருந்துள்ளன என்பதை உணர முடிந்தது.

தமிழ்நாட்டில் செயல்படும் போராளிக் குழுக்கள் வன்முறை எதிலும் ஈடுபடாத இன்றைய சூழலில், அவர்களைக் கண்காணிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட Q பிரிவு உளவுத்துறையினரை ஏவினாலாவது அவர்களுக்கும் வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும், கண்ணாடிக் காடுகள் விதைப்போரை கட்டுப்படுத்தின மாதிரியும் இருக்கும். செய்வார்களா? மாட்டார்கள்; காரணம், குடியே சட்டபூர்வமானபிறகு அதன் பின்விளைவுகள் மட்டும் சட்டவிரோதமாகிவிடுமா என்ன? வள்ளுவனுக்குக் கோட்டங்களையும், சிலைகளையும் அமைத்து என்ன பயன்? அவன் சொல்லிச் சென்ற கள்ளுண்ணாமையை உண்மையாகக்கினால் மட்டுமே அவனுக்கும் மரியாதை; ஆள்வோருக்கும் மரியாதை. 


கண்ணாடிக் காடுகளைக் கடந்து சென்று பேருந்திலிருந்து இறங்கி கோயம்பேடு பேருந்து நிலைய முன்பதிவு ஆட்டோ மையத்தை அனுகினோம். காக்கிச் சட்டையில் அமர்ந்திருந்த ஒருவரிடம், நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லி முன்பதிவு செய்யச் சொன்னபோது அவர் வெளியே வந்து ரூ.200 ஆகும் என்றார். அவர் ஆட்டோ ஓட்டுநர். வழக்கமாக ரூ.120 க்குப் பதிலாக ரூ.200 கேட்டால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்?
ரூ.200 வாங்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஓகோவென்று வாழ்ந்துவிடப் போவதுமில்லை, ரூ.200 கொடுக்கும் அளவுக்கு பலரும் ஓகோவென்று வாழ்வதும் இல்லை. கடைசியில் ரூ.160 க்கு எமது பயணத்தைத் தொடர்ந்தோம். 

மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசின் கட்டமைப்பு சிதையும் போது, அது ஆளும் அரசுக்கு எதிரான சீற்றமாக மாறும் என்பதைத்தான் முடங்கிப் போன முன்பதிவு மையங்கள் உணர்த்துகின்றன. 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி

Sunday, January 15, 2023

உழவர்களை உழைப்பின் உச்சாணியில் வை!

எல்லா நாட்களையும் போலத்தான் பண்டிகை நாட்களும்! எனது நீண்ட நெடிய உளவியல் இதுதான். உழைப்பை மதிப்பதும், போற்றுவதும் மட்டுமே மகத்தானது எனக் கருதுபவன் நான். உழைக்கும் ஒவ்வொரு நாளும் எனக்குச் சிறப்பு நாட்கள்தான். அதனால்தான் உழைக்காத சோம்பேறிகள் மீது, அவர்கள் எவ்வளவுதான் பிரபலமானவர்களாக இருந்தாலும், எனக்கு அவர்கள் மீது மரியாதை எதுவும் ஏற்படுவதில்லை. 

யாரெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உழைப்பில் ஈடுபடுகிறார்களோ, அதாவது உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்க உழைக்கின்றார்களோ அவர்கள்தான் உழைப்பின் உச்சாணியில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள். இதில் முதலிடம் வகிப்பவர்கள் உழவர் பெருமக்களே. 

உழவர் பெருமக்கள் உள்ளிட்ட உழைப்பாளர்களின் வாழ்வு மலர யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களும் போற்றப்பட வேண்டியவர்களே. அதனால்தான் காரல் மார்க்ஸ் உலக உழைப்பாளர்களின் உள்ளத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

சங்கிகள் எதை உளப்பூர்வமாக ஏற்காமல், பட்டும் படாமலும் சற்றே ஒதுங்கியும் இருக்கிறார்களோ அந்த நாட்களெல்லாம்தான் எனக்குச் சிறப்பு நாட்களாகத் தோன்றுகிறது. எனது தற்போதைய உளவியல் அதைத்தான் உணர்த்துகிறது. 

அந்தப் பட்டியலில் உழவர் பெருநாள், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல் இவையெல்லாம் ஒன்றிணைகிறது. 

உயிர் வாழ ஆதாரமாய்த் திகழும் உழவர் பெருநாளையும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவம் கண்ட வள்ளுவனையும் உயர்த்திப் பிடிப்போம். பிறப்பிலேயே பேதம் காணும், உழவுத் தொழிலை இழி தொழில் என பழித்துரைக்கும் சங்கிகளை, வேங்கடத்திற்கு வடக்கே விரட்டியடிப்போம். காவிச் சாயம் பூசி வரும் எடுபிடி சங்கிகளுக்குப் பாடை கட்டுவோம்.

ஊரான்