Friday, December 5, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 1

பாரேது, புலனேது? அனலு மேது?
பாங்கான காலேது? வெளியு மாகும்
நாரேது பூவேது வாச மேது?
நல்ல புட்பமந்தானேது பூசை யேது?
ஊரேது பேரேது சினமு மேது?
ஓகோகோ அதிசயந்தா னென்ன சொல்வேன்
ஆறேது குளமேது கோயி லேது
ஆதிவத்தை யறிவதனா லறிய லாமே. (10)


புகலுவார் வேதமெல்லாம் வந்ததென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோமென்றே
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமன மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே. (16)

பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப் 
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்
ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுருட்டாய் நினைவு தப்பிப் பேசுவானே. (17)

கரூவூரார்
பதினெண் சித்தர்களில் ஒருவர் 

தொடரும்

ஊரான்

Thursday, December 4, 2025

திருப்பரங்குன்றம் உணர்த்தும் பாடம்!

கல்லில் என்ன இருக்கிறது? இயற்கையாய் இருந்தால் அது பாறை. செதுக்கினால் அதுவே சிலை. அதைத்தாண்டி அதில் ஒரு வெங்காயமும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் செதுக்கிய சிலைகூட அல்ல; அது செங்குத்தாய் நிற்கும் ஒரு வெற்றுக்கல். இதற்கு தீபம் ஏற்றச் சொல்லி கலவரத்திற்கு தூபம் போடுகிறார் ஒரு நீதிபதி.  தமிழ்நாடு காவல்துறை இருக்கும்பொழுது, அதற்கு மத்திய காவல்படை, மனுதாரருக்கு பாதுகாப்புத்தர வேண்டும் என்கிறார். இது தீபத்தூண் அல்ல அது ஒரு எல்லைக் கல் என்கின்றனர் பிறர். 



“நட்டகல்லைத் தெய்வம்என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்! …” (494)

என கல்லை வணங்குவோரை எள்ளி நகையாடுவதோடு,.

“ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்…” (424) 

“..செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர் ..” (35)

“…பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்…” (235)

என சிவவாக்கியர் கல் வழிபாட்டைச் சாடிச் சீறுவதோடு‌, 

“இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான் …” (37)

“…எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?...” (222)

“…கோயில்பள்ளி ஏதடா? குறித்து நின்றது ஏதுடா?
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா? 
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே!” (184)

அதாவது, புறச் சடங்குகளை விட, அறிவை வளர்க்கும் பள்ளியில் உண்மை பக்தியுடன் ஈடுபடும்போது, இறைவனின் இருப்பை தன் உடலிலேயே உணர முடியும் என்பதை இந்தப் பாடலில் சிவவாக்கியர் வலியுறுத்துகிறார்.

“…சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ…” (13),

“ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே (463)

“..ஓதுகின்ற வேதம்எச்சில், உள்ளமந்திரங்கள் எச்சில்…” (41)

“…நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?...” (140)

“புத்தகங் களைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்!” (472)

“பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே,” (248)

“பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?” (192)

என வேதங்களையும் மந்திரங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்கிறார் சிவவாக்கியர் எனும் சித்தர். 
  
வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள், கோவில்கள், உருவ வழிபாடுகள் இவை இறைவனை அடைவதற்கு அல்ல, மாறாக வேதியர்கள் தங்கள் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்ட ஏற்பாடுகள் என்பதை வால்மீகர் எனும் சித்தர் 
சொல்வது போல,

தொடுத்தார்க ளரவர்கள் பிழைக்கத் தானே". (8 - சூத்திர ஞானம்), என்பதை நாம் புரிந்து கொண்டு,

இறை நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளத்தில் மட்டும் இறைவனை நினைவுகூர்வதோடு  நிறுத்திக்கொண்டால், சனாதனம் சவக்குழிக்கு செல்வது உறுதி.  

சித்தர்கள் எனும் சம்மட்டியைக் கையில் எடுப்போம்! சனாதனத்தை அடித்து நொறுக்குவோம்!
திருப்பரங்குன்றம் உணர்த்தும் பாடம் இதுதான்! 

ஊரான்

Tuesday, December 2, 2025

நான் வலைப்பூ தொடங்க உதவிய உந்து சக்தி!

மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒன்றுபட்ட அமைப்பாக இருந்த பொழுது அதன் தோழமை ஊடகமான வினவு தளம் குறித்து நான் எழுதிய பதிவு. தோழர் நாதன், தோழர் மருதையன் உள்ளிட்டோரின் பங்களிப்பினால், அன்று உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த வினவு, இன்று சில கெடுமதியாளர்களின் கையில் சிக்கிக் கொண்டதால் சீந்துவாறின்றிக் கிடக்கிறது. 
***
எனது பார்வையில் வினவு : ஊரான் 
(ஆகஸ்டு 1, 2013)
***

நான் படிப்பது, பார்ப்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என எனது புலனறிவுக்கு எட்டியவை குறித்து பிறரோடு பகிர்ந்து கொள்வதும், அதன் மீதான மற்றவர்களின் கருத்துக்களை அறிய விரும்புவதும் எனது அன்றாட வழக்கம். வினவு தொடங்கிய போது வினவில் வெளியான படைப்புகளைப் படித்து விட்டு அதன் மீதான கருத்துகளைக் கூட என்னால் தெரிவிக்க முடியாமல் தவித்த காலம். நான் படித்ததை நண்பர்களோடு, தோழர்களோடு பகிர்ந்து கொள்ள முயற்சித்தால் அவர்கள் வினவு படிப்பதில்லை அல்லது படிக்க வாய்ப்பில்லை என்பார்கள். உலகின் அழகிய மணமக்கள் ! கட்டுரையை செப்டம்பர் 2010-ல் படித்த போது அதன் மீதான கருத்தை எப்படியாவது சொல்ல வேண்டும் என்கிற உந்துதல் என்னுள் எழுந்த போது தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்த தோழர் ஒருவரின் மூலம் அதன் மீதான எனது கருத்தை பதிவு செய்தேன். அது ஒரு நீண்ட கருத்துப் பதிவு. இப்படித்தான தொடங்கியது வினவோடு எனது உறவு.

அதன் பிறகு நானே தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்து கொண்டு பல கட்டுரைகளில் எனது கருத்துக்களை பதிவு செய்யலானேன்.  மே 2010-ல் வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !! என்கிற வினவில் வெளியான கட்டுரை அக்டோபர் 2010-ல் ஊரான் வலைப்பூ தொடங்கக் காரணமாக அமைந்தது. நவம்பர் 2010-ல்  “ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா? என்கிற கட்டுரையும், டிசம்பர் 2010-ல் மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்! என்கிற கட்டுரையும் வினவில் வெளியான போது என்னாலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு சில கட்டுரைகளை நான் வினவுக்கு அனுப்பிய போது எனக்குக் கிடைத்த பதில் “மக்களின் போராட்டங்கள், அதன் விவரங்கள் பற்றிய கட்டுரைகள் இருந்தால் அனுப்புங்கள்” என்பதுதான். வினவின் வருகைக்குப் பிறகு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுதுவது அதிகரித்துள்ளது என்பதை வலையுலகம் நன்கறியும்.

இணைப்பு
மக்களின் போராட்டம் குறித்து எழுத வேண்டுமானால் நம்மையும் மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொண்டால்தான் அது சாத்தியம்.








பெரும்பாலும் தனிமனித சிந்தனை சார்ந்த கட்டுரைகளே என்னால் எழுத முடிந்தது. மக்களின் அன்றாடத் தேவைகள், அதற்கான போராட்டங்கள் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுரைகளை அனுப்பக் கோரினர். தனிமனித சிந்தனைப் போக்கு குறித்து எழுதுவது சுலபமானது, ஆனால் மக்களின் போராட்டம் குறித்து எழுத வேண்டுமானால் நம்மையும் மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொண்டால்தான் அது சாத்தியம் என்பதை உணர வைத்தது வினவு.

தனி மனிதனின் சிந்தனையில் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டால் சமூகம் தானாக மாறிவிடும் என்கிற மேம்போக்கான கருத்தையே பலரும் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் ஒழுக்க நெறிகளை அன்றாடம் போதித்து வருகின்றனர். ஆனால் இத்தகைய போதனைகள் எதுவும் மக்களிடம் எடுபடுவதில்லை. வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது, எனவே வாழ்நிலையை மாற்றுவதற்கான போராட்டம் இன்றி சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்கிற மார்ச்சிய பாடத்தைத்தான் வினவு நம்மிடையே பதிய வைக்கிறது.

ஒரு சமூகம் சீரழிந்துள்ளது என்றால் அது பின்பற்றும் அரசியல் – பொருளாதார கொள்கைகளும், நடைமுறைகளுமே காரணமாக அமைகின்றன. இதை மாற்றி அமைக்காமல் ஒட்டு மொத்த சமூகத்தையும் விடுவிக்க முடியாது. இதற்கு மார்ச்சியத்தைத் தவிர வேறு சித்தாந்தங்கள் ஏதும் கிடையாது. ஆனால் பெண்ணியம், சூழலியம், தலித்தியம், தமிழியம் என ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவற்றை சரி செய்தால் போதும் எனப் போராடுகின்றனர். இத்தகைய அணுகுமுறை மக்களை பிளவு படுத்துவதோடு மக்கள் விரோத அரசை தூக்கி எறிந்து ஒரு மாற்று மக்கள் அரசை அமைப்பதற்கு பெரும் தடையாக அமைகின்றன.

வினவு வெறும் ஊடகம் அல்ல. வினவு ஒரு போராளி. அதனால்தான் மக்களின் அன்றாட வாழ்வைப் பறிக்கும் அரசின் கொள்கைகள், நடைமுறைகள் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்துகிறது. இத்தகைய போராட்டங்கள் குறித்து எழுதும் போது  மக்களின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? சமரசவாதிகள் யார்? என்பதை அடையாளம் காட்ட வேண்டி வருகிறது. இத்தகைய சூழலில்தான் வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள், சாதி – மத அமைப்புகள், இனவாதிகள் என பலரும் அம்பலப்பட்டுப் போகிறார்கள். அவர்களை மக்களின் எதிரிகளாக வினவு காட்டவில்லை. அவர்களேதான் அம்பலப்பட்டுப் போகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் வினவுக்கு எதிராக நிற்கின்றனர். மக்களின்பால் பற்று கொண்டோர், பிறகு வினவின் கருத்தை ஏற்கின்றனர். பிழைப்புவாதிகள் மட்டுமே தொடர்ந்து வினவை எதிர்த்து வருகின்றனர். வினவின் வாசகன் என்கிற முறையில் வினவை நான் இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளேன்.

புகழ்வதற்காக நான் இதை எழுதவில்லை. புரிதலுக்காகத்தான் எழுதுகிறேன். வினவுக்கு ஆலோசனைகள் சொல்வதைவிட வினையாற்ற செல்வதே மேல் எனக் கருதுகிறேன்.

நன்றியுடன்
ஊரான்
www.hooraan.blogspot.com

Friday, November 28, 2025

சுயமரியாதைக்காரர்களுக்கும், பொதுவுடமையாளர்களுக்கும் வழிகாட்டும் சிங்காரவேலர்!

உழைப்பில் ஈடுபடும் மனிதனின் அவயங்களைக் காக்கத் தோன்றிய ஆடை, இன்று நவநாகரிக (Fashion) ஒன்றாகவும், நுகர்வுக்கானதாகவும் பார்க்கப்படுகிறது. அவயங்கள் தெரிய, அரைகுறை ஆடை அணிந்து, ‘என் உடல், என் உடை, என் உரிமை’ என்று தங்களின் உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆண்களும், பெண்களும் (இதில் முற்போக்குகளும் அடங்குவர் என்பது ஒரு கேலிக்கூத்து) அதிகரித்துவரும் இன்றைய சூழலில், ஆடை குறித்தும், 

பச்சை உணவை வலியுறுத்தும் சில  கற்கால அலப்பறைகள் அதிகரித்துவரும் இன்றைய காலத்தில், ஏன் உணவை சமைத்து சாப்பிட வேண்டும் என்பது குறித்தும்,

தோழர் சிங்காரவேலர் எழுதுகிறார், 

சிங்காரவேலர்

“மனிதனுக்கு ஆடை (clothing) அவசியமா? ஆடை நாகரிக வாழ்க்கைக்கு அத்தியாவசியமா? என்று கேட்கலாம். ஆடையைத் தரிப்பது Artificial அதாவது செயற்கையால் என்றும் இயற்கை அல்லவென்றும் சிலருடைய கருத்து.

இம்மாதிரியாகவே சமைத்து உண்பது செயர்க்கையென்றும் காய்கனிகளை அதாவது சமைக்காமல் (Raw) பச்சையாக உண்பது இயற்கை என்றும் சிலர் கருதுகின்றார்கள். இந்தக் கருத்துடன் நிற்காமல் பச்சையாக உண்ணவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தக் கோஷ்டியாரில் நமது காந்தியாரும் ஒருவர். இவர் நிர்வாணத்தை (Nudity) அனுசரிக்கின்றாரோ நமக்குத் தெரியாது. ஆனால் பச்சையுணவு நிர்வாணத்தைப்போல் ஓர்வித Fad (பித்து) என்பதே நமது தீர்மானம்.

பச்சையாகத் தின்றுகொண்டிருந்த குரங்கு மனிதன் (Ape-Man) நெருப்பைக் கண்டுபிடித்த பிறகே சமைத்து உண்ண நேரிடவும், அவன் மனித உருவத்தையும், அதற்குகந்த நடத்தையும் பெற்றான் என்பது உயிர் ஞானத்தின் (Bio Science) முடிவு எனலாம்.

இதைப்போலவே ஆடையில்லாமல் நிர்வாணமாக உளவிக் கிடந்த மனிதக் குரங்கு ஆடையை அணிய நேரிடவும், மனிதக் குரங்கு மனிதனாக மாறிவந்த விஷயமும் உயிர் ஞானத்தின் உண்மைகளில் ஒன்று. ஆனால் தற்போது நாம் அடைந்துள்ள மனிதப் பதவியை விட்டுவிட்டு நமது தூரப்பங்காளிகளாகிய (Distant Cousins) மனிதக் குரங்குகளைப் போல் (Man Aps) நாமும் மரங்களில் தொத்திக் கொண்டு கனிவர்க்கங்களை உண்டு வாழலாமென்று கருதுவோர் நிர்வாணமாக இன்றைக்கே நாடுகளை விட்டுக் காடுகளில் சென்று நடமாடலாம்.

இது நவீன நாகரிகமாகாது. இந்த வாழ்க்கை காட்டுமிராண்டி வாழ்க்கையாகும். சமைக்காமல் சாப்பிடுவதும், ஆடை அணியாமல் வாழ்வதும் நமது இயற்கை வாழ்க்கை  என்கின்றனர் சிலர். ஆம் அந்த வாழ்க்கை தற்போது நமக்கு உவந்ததானால் பிணத்தைத் (Cannibalism) தின்பதும், வரைமுறையற்ற புணர்ச்சியும் (Promiscuous Intercourse), கொலை (Murder), பலவந்தப் புணர்ச்சி (Rapine) இவை யாவும் இயற்கை வாழ்க்கை அன்றோ? இவற்றை ஏன் நாம் கையாளக் கூடாது? 

ஆனால் இந்த வாழ்க்கையைத் தவிர்த்து ஆடையை அணிந்து வீடுகளிலும், வாசல்களிலும் வாசஞ்செய்து ஒழுங்கான முறையில் வாழ நேரிட்ட பிறகே ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாய் இருந்த நாம் Decent Civilised Life என்று வழங்கும் தற்கால நாகரிக வாழ்க்கையை அடைந்துள்ளோம். 

நாம் நிர்வாண வாழ்க்கையை விட்டுப் பல லட்சம் வருஷமானதாக உயிர்நூலோர் கணக்கிடுக்கின்றார்கள். அந்த நிலையை இன்றைக்குக் கோருவது மிருகத்தன்மையேயொழிய மனிதத் தன்மையாகாது".

புரட்சி
11.3.1934
பக்கம் 9-13

***

1930 களின் தொடக்கத்தில் சமதர்மம், பொதுவுடமை, சுயமரியாதை, பகுத்தறிவு, மதங்கள், மூடநம்பிக்கைகள் குறித்து 'புரட்சி', 'குடி அரசு' போன்ற ஏடுகளில் வெளியான தோழர் சிங்காரவேலரின் கட்டுரைகளை வாசித்து முடித்த போது பிரமிப்பாய் இருந்தது. 

சுயமரியாதைக்காரர்களின் 'ஈரோட்டுத் திட்டம்' என்பதே பொதுவுடமையைக் கொண்டு வரும் புரட்சித் திட்டம்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்துவதில் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என எந்த மதத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.

பொதுவுடைமை குறித்து சுயமரியாதைக்காரர்களின் போதாமையாலும், பகுத்தறிவு குறித்து பொதுவுடமையாளர்களின் போதாமையாலும் இவ்விரு தரப்பாருமே பகைமைகாட்டி பிணக்கு செய்யும் இன்றைய காலகட்டத்தில், தோழர் சிங்காரவேலர் இவ்விருதரப்பாருக்கும் வழி காட்டுகிறார்.

பொதுவுடமை, மதங்கள், அறிவியல், மூடநம்பிக்கைகள் பற்றிய அவரது ஆழமானப் புரிதலுக்குக் காரணம் அவரது அயராத உழைப்பும், ஆங்கில நூல் வாசிப்பும் என்பதை அவரது கட்டுரைகள் உணர்த்துகின்றன. அவரது எழுத்துக்கள் நூறு ஆண்டை எட்டவிருக்கின்ற இன்றைய நவீன அறிவியல் உலகில் அவரைப் போன்று சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் யாரும் இல்லையே என்கிற ஏக்கம் மட்டும்தான் இந்த நூலை வாசித்து முடித்த போது என்னுள் எழுந்தது! 

சுரண்டலும், ஒடுக்குமுறையும், மூடநம்பிக்கைகளும் பற்றிப் படரும் இன்றைய காலத்திற்கு சிங்காரவேலரைப் போன்ற சிந்தனையாளர்களுக்காக இச்சமூகம் ஏங்கிக் கிடக்கிறது. 

ஊரான்

Thursday, November 27, 2025

முதன்முறையாகக் குலதெய்வக் கோவிலை நோக்கி…

முதன்முறையாகக் குலதெய்வக் கோவிலை நோக்கி…
வணங்க அல்ல, வாழ்த்துக் கூற..!


எமக்கான குலதெய்வம் முத்தாலம்மன் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தக் குலதெய்வத்திற்கு கோவில் ஒன்று உண்டென்பதை எமது தற்போதைய தலைமுறைதான் கண்டெடுத்துள்ளது. அங்கு நடைபெற்ற உறவினரின் மணவிழாவில் கலந்து கொள்ளவே நான் காப்பலூர் சென்றேன்.

இந்த முத்தாலம்மன், ஒரு சாதிக்கு மட்டுமல்ல வேறு சில சாதிகளுக்கும் குல தெய்வமாகக் கருதப்படுகிறாள். தாய்வழிச் சமூக காலத்தில் மக்களைக் காத்தத் தலைவியைத்தான் இன்றுவரை குலதெய்வமாக தமிழ்நாட்டில் பலரும் வணங்கி வருகிறார்கள். 


சனாதனிகளால் மக்களிடைய புகுத்தப்பட்டிருக்கும் ஆரியக் கற்பனைக் கடவுளர்களை அப்புறப்படுத்தி, மக்களைக் காத்த மூதாதையர்களை, குல தெய்வங்களாக வணங்குவதில், வணங்குவது என்று சொல்வதைவிட மரியாதை செய்வதில் குறையொன்றுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

ஊழல் ராணிகளையெல்லாம் 'அம்மா'வென அடிமைகள் மண்டியிட்டு தாள் தொழும்பொழுது, நமது மரபுவழி வீரமங்கைகளை வணங்குவதில், மரியாதை செய்வதில் தவறொன்றுமில்லையே?

ஆனால், அவள் அள்ளிக் கொடுப்பாள், வேண்டுதலை நிறைவேற்றுவாள் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கையே; மாறாக அவள் வரலாறு தெரிந்திருந்தால், அந்த வரலாற்றுச் சுவடுகள் நமக்கு உத்வேகமூட்டக் கூடியதாக இருக்கக்கூடும் என்பதால் நமது சமகாலத் தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதையைப் போல, குலதெய்வமாகக் கருதப்படும் நம் மூதாதர்களுக்கும் மரியாதை செலுத்தலாம். 

நேற்றுவரை, நம் மூதாதையர்கள்தான் கைநாட்டுகளாச்சே; அதனால்தானே நமது மூளையில் ஏற்றப்பட வேண்டிய நம் மூதாதையர்களின் வரலாறுகளுக்குப் பதிலாக, கற்பனைப் புனைச்சுருட்டுகளும், ஆபாசங்களும் நிறைந்த சிவன், விநாயகன், ராமன் போன்ற ஆரிய சனாதனக் 'கடவுளர்களின்' கதைகள் புகுத்தப்பட்டுள்ளன. 

ஆரியக் கடவுள்களை அப்புறப்படுத்தி, தமிழ் மக்களின் குலதெய்வங்களின் வரலாறுகளை கண்டெடுத்து, நம் மரபை மீட்டெடுப்பதும் சனாதனத்துக்கு எதிரானப் போராட்டத்தின் ஓர் அங்கமே!

ஊரான்
27.11.2025
வியாழன்

Wednesday, November 26, 2025

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஆபாசமா?

“கடவுளை அங்கும், இங்கும் காட்ட முடியாதென்றும், அவர் எங்கும் நிறைந்தவர் என்றும் வாய் கூசாமல் வாதிப்பதால், யாருக்கு என்ன விளங்கும்? அங்கேயாகிலும், இங்கேயாகிலும் காணக்கூடாத ஒன்றை எங்கும் காண்பதெப்படி? நாம் காணும் உலகில், பார்க்க முடியாத கடவுளை, நமக்கு எட்டாத பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கின்றார் என்றால் இது என்ன ஆபாசமெனக் கேட்கின்றோம்? இந்த ஜாலச் சொற்களைக் கொண்டே, ஆஸ்திகர் உலகை ஏமாற்றி வருகின்றனர். இந்தச் சூழ்ச்சியை உணராத மாந்தர் மூடபக்தியில் முழுகிக் கோயில்களும், கோபுரங்களும் கட்டுவித்து மயங்கித் தியங்கி நிற்கின்றனர். உலகம் இனி எவ்வளவு காலம் இம்மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கப் போகின்றதோ, அதை நாம் அறியோம். ஆனால் நமது கடமை மூடபத்திக்கு ஆதாரமாயுள்ளவருக்கு வாதங்களை எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம் எனத் துணிந்து கூறுவோம்”. 

என்கிறார் சிங்காரவேலர்.

அதற்கு ஆபாசக் கோர்வை (String of absurdities) அடங்கிய பாடல் ஒன்றை எடுத்துக்காட்டுகிறார்.

“உலகெலாம் வுணர்ந்தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்”

சேக்கிழார் 

'உலகெலாம்' என்று சிவபெருமானே சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்தாகவும், அதனாலேயே மேற்கண்ட பாடல்  ‘பெரிய புராணத்தின்’ தொடக்கப் பாடலாக அமைந்ததாகவும் வேதாந்திகள் வியந்தோதி வருகின்றனர். 

இப்பாடல் குறித்து சிங்காரவேலர், 

“இதனைப் பாடும்போது எனக்கும், மற்றுமுள்ள சுயமரியாதைத் தோழர்களுக்கும் சிரிப்பு உண்டாகியது. இந்தப் பாடலை 50 வருஷத்திற்கு முந்தி நான் கைவல்ய நவநீத விருத்தியுரையில் படித்தேன். 50 வருடம் கடந்தும் இந்த ஆபாசப் பாடலைக் கேட்க நேரிட்ட சமயமும், ஆபாசமாகவே தோன்றியது. இந்தச் சொற்களில் அடங்கிய ஆபாசங்களைச் சற்று நோக்கினால் கல்வி, கேள்வி நிறைந்துள்ள மாந்தரும், விசாரணை இன்றி, கிளிப்பிள்ளைகளைப் போல் பாடலை ஒப்பிப்பதே, பெரும் வியப்பையும் தருவதோடு, அவர்களுடைய மூடநம்பிக்கையின் வன்மையையும் காட்டுகிறது. இது நிற்க, இந்தப் பாடலின் சொற்களைக் கூறுபடுத்தி பார்ப்போம்.

“உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” இதன் பொருள் என்னவெனில், எந்த மனிதராலும் தெரிந்து கொள்ள முடியாதவன் என்று பொருள். யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவனை இருப்பதாக எப்படி சொல்லக் கூடும்? இன்னவென்று உணர முடியாதவனைப் பற்றி ஓதுவதால் யாது பயன்? இந்த சொற்ப அர்த்தத்தை உணராமலே, பல்லாண்டுகளாக ஆத்திகர்களும், வேதாந்திகளும் இச்சொற்களை ஓதி வருகின்றனர். வெறும் சொற்களுக்கு, நமது அறிஞர்கள் அடிமைகளாகிய விந்தையே விந்தை!

“நிலவுலாவிய நீர்மலி வேணியனென்றார்கள்” இது எப்படி தெரிந்தது? யாருக்கும் ஒன்றுந் தெரியாதவர் என்று முதலில் பாடிவிட்டு, நீர்மலி வேணியன் என்றால், இது முரண்பட்டதல்லவா? இதனை மூட பக்தி என்றால் என்ன தவறு? முரண்பட, முரண்பட பக்தி மேலிடும் போலும்! ஆபாசம் மேலிட, மேலிட அவ்வளவும் பக்திக்கு விசேடமென்று ஒரு ஆங்கில வாக்கியமுண்டு. இந்த வாக்கியப்படி, நமது ஆக்கியோனும் அவரைப் போன்ற பக்திமான்களும் ஆபாசத்தில் ஆனந்தம் கொள்ளுகின்றார்கள் போலும்!

“என் அம்பலத்தில் ஆடுவான்” இது எப்படித் தெரிந்தது. அங்கும் எங்கும் இல்லாதவன், அம்பலத்தில் எப்படி ஆட வந்தான்? இதனைத்தான் ஆபாசக் கோர்வை (Tissue of Absurdities) என்கிறோம்?

எந்த லட்சணத்தாலும் அறியக் கூடாத ஒன்றை, அதன் “மலர் சிலம்படி வாழ்த்தி வணங்க”, வேண்டியதாம். இந்தப் பைத்தியக்காரப் பேச்சை அறிஞர் கூட்டங்களில் வாய் கூசாமல் பாடுவதைக் கேட்டால் நாம் அறிஞர் உலகில் இருக்கின்றோமா? அல்லது உன்மத்த உலகில் இருக்கின்றோமா என்பதே சந்தேகமாகி விடுகின்றது”.

குடி அரசு
16.7.1933
பக்கம் 3-18

சிங்காரவேலர் கட்டுரைகள் நூலிலிருந்து..

குறிப்பு: சேக்கிழார் என்ற உடனே எடப்பாடியும் கம்பராமாயணமும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. 

Absurdities-Absurdity-  அபத்தம், முட்டாள்தனம், அறிவுக்கு ஒவ்வாதது. இதற்கு ஏன் ஆபாசம் என்ற சொல்லை சிங்காரவேலர்
பயன்படுத்தியிருக்கிறார் என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். ஒரு செயல் அல்லது பேச்சின் தவறான தன்மையைக் குறிக்க ஆபாசம் என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்பதனால், அவர் 'ஆபாசம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஊரான்

Saturday, November 22, 2025

சரித்திர நாளா? தரித்திர நாளா?

44 தொழிலாளர் நல சட்டங்கள் (laws), நான்கு சட்டத் தொகுப்புகளாக (codes) 2019 இல் மாற்றியமைக்கப்பட்டு, அதற்கான விதிகளும் (rules) 2020 வாக்கில் உருவாக்கப்பட்டு, 01.04.2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது. இதை முன்னறிந்து, இராணிப்பேட்டை BHEL/BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் நான் ஆற்றிய உரையை அன்றே ஒரு தொடராக ஊரான் வலைப்பூவில் வெளியிட்டதோடு, அமேசானில் மென் நூலாகவும் வெளியிட்டிருந்தேன். 

“வேளாண் சட்டத்திருத்தங்களின் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்து டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். அவர்களது போராட்டம் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமல்கூட போகலாம். ஆனால் வஞ்சிக்கப்படுகிற மக்கள் எப்படிப் போராட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்களைவிடக் கொடிய தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகளின் ஆபத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டு களமாடவில்லை என்றால் எதிர்காலம் உங்களை மன்னிக்காது” 

என்று அந்தத் தொடரின் இறுதியில் எழுதி இருந்தேன். 

வேளாண் திருத்தச் சட்டங்கள் வந்த உடனேயே தாமதம் செய்யாமல் விவசாயிகள் உடனுக்குடன் களத்தில் இறங்கிப் போராடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தனர். 

சரித்திர நாளா? தரித்திர நாளா?

தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள்  21.11.2025 முதல் நடைமுறைக்கு வந்து விட்டன. முதலாளிகளுக்கு இது சரித்திர நாள். பாடுபடுவோருக்கு இது தரித்திர நாள். 

"முதலாளிகள் தொழில் செய்வதை சுலபமாக்குகிற (ease of doing business) அதே வேளையில், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிய நேரத்தில் ஊதியப்பட்டுவாடா உள்ளிட்ட  பல்வேறு நலன்களை இந்தச் சட்டத் திருத்தங்கள் உறுதி செய்கின்றன.  மகளிர் ஆற்றல் (Nari Shakti) மற்றும் இளைஞர் ஆற்றல்கள் (Yuva Shakti) மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் (Viksit Bharat)  முடுக்கிவிட இச்சட்ட திருத்தங்கள் உதவும்" என கதை அளந்துள்ளார் மோடி.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நவீன அடிமை முறையை தோற்றுவிப்பதோடு, கார்பரேட் பெரு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவே இச்சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இச்சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதோடு, அதற்காக சில போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. 

மோடி கொடுத்த ஐந்தாண்டு கால அவகாசத்தை தொழிலாளி வர்க்கம் வீணடித்துவிட்டு, தற்போது கண்டனக் குரல் எழுப்புவது ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஆகிவிட்டது. இப்பொழுதும்கூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. தொழிலாளி வர்க்கம் உணர்வு பெற்றால், எதிரிகள் எல்லாம் எம்மாத்திரம்?

மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் நல சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறவில்லை என்றால் வெகுவிரைவில் இந்தியா ஒரு ஆண்டான்-அடிமைச் சமூகமாக உருமாறி நிற்கும். சமூகத்தைப் பின்னோக்கி இழுப்பது சனாதனிகளின் வேலை என்றால் அதை உடைத்தெறிந்து தொழிலாளி வர்க்கத்தை நிமிரச் செய்வது நம் அனைவரின் கடமை அல்லவா? 

ஊரான்

குறிப்பு: சட்டத் திருத்தங்களின் சாதக-பாதக அம்சங்களை விரிவாகத் தெரிந்து கொள்ள, ஊரான் வலைப்பூவில் வந்த தொடர் கட்டுரைகளையும், அமேசானில் உள்ள மென்நூலையும் வாசிக்கவும்.

Monday, November 17, 2025

அரசியல் ஈனம்!

பப்பாளிக் காயில் ஒரு கூர்முனைதான் இருக்கும். ஆனால் இந்தக் காயில் கூடுதலாக ஐந்து மூக்கு முனைகள் உள்ளன. ஒரு மரத்தில் மற்ற காய்கள் எல்லாம் இயல்பாய் இருக்கும் பொழுது, இது மட்டும் மாறுபட்டு இருப்பது ஏன்? 

பப்பாளி

இது மரபினால் ஏற்பட்ட விளைவா அல்லது அது காய்க்கும் பொழுது உண்டான நீர் சத்து உள்ளிட்ட பிற சத்துக்களின் போதாமையால் ஏற்பட்ட விளைவா? தெரியவில்லை! இது பிறவி ஊனமா இல்லை ஈனமா? இங்கே அது எதுவாயினும் உண்ணத் தகுந்ததே, ஊட்டமுடையதே!


மனிதர்களிலும் சிலருக்கு பிறவியிலேயே ஆறு விரல் மற்றும் சில அங்க ஈனங்கள் தோன்றுவது ஏதோ ஒரு வகை குறைபாட்டினால்தானோ? 'உண்டாகும்' பொழுது ஊட்டக் குறைபாட்டாலோ, சூழல் மாறுபாட்டாலோ பிறவி ஊனமும் ஒட்டிக் கொள்ளுமோ? இங்கேயும், அது எதுவாயினும் மனிதர்கள் முடங்கி விடுவதில்லை. சமூகத்தில் இயங்கிக் கொண்டுதான் உள்ளனர்.

போதிய தரவுகள் (ஊட்டம்) இல்லை என்றால் அரசியலிலும் 'தற்குறிகள்' எனும் புதியவகையினர் தோன்றுவது இயல்புதானே? இது பிறவி ஊனம் அல்ல, இடையில் தோன்றி வளர்ந்து அழிவை உண்டாக்கும் புற்றைப் போன்றதொரு ஈனம்!

ஊனமோ, ஈனமோ அது அபூர்வமாய் இருந்தால் ஆபத்தில்லை. அதுவே முழுமையாய் வியாபித்துவிட்டால்...? இழிவும் அழிவும் மட்டுமே மிஞ்சும்!

ஊரான்

Monday, November 10, 2025

காயத்ரி மந்திரம்: வெறும் குரங்குக் கூச்சலா?

சந்தியா வந்தனமென்று வழங்கும் காயத்ரி ஜெபத்தில் அடங்கிய சொற்கள், எல்லாச் சொற்களைப் போன்றவைகளே‌. ஆனால் அச்சொற்களை யார் காதுக்கும் படாமல், குளக்கரையிலோ, நதிக்கரையிலோ அஸ்தமன சமயத்தில், சூரியனை நோக்கி, கையும் காலும் அசைவற்றுச் சொல்வதால், அந்தச் சொற்களுக்கு வந்துள்ள புண்ணியங்களாமென அறிக. இவைகளோடு இதனை உபயோகிக்கும் பிராமணர்கள், மற்ற ஜாதியாருக்குக் கற்பிக்காமலே வந்திருத்தலும், ரகசியமாக இந்தச் சொற்களை வைத்துப் பாமர மக்களை மயக்குவதற்கென அறிக.

இந்தக் காயத்ரி ஜபம் சாதாரண ஜெபமாகும்,. இது சூரியனைக் குறித்துப் பூஜிக்கும் அதாவது பிராத்திக்கும் ஜபமாகும். ஆதி மனிதன் சூரியன் உதயத்தைப் பார்த்து, ஆச்சரியத்துடன் சொல்லும் சொற்களாகும். 

சந்தியா வந்தனம்

உதயத்தில் பட்சிகள் பாடுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. உறங்கிக் கிடந்த உலகமே ஒரு குதூகலத்தை அடைகின்றன. ஜீவராசிகளும் சூரிய உதயத்தைக் கண்டதும் மனக்களிப்பை அடைகின்றன. யார்தான் சூரிய உதயத்தைக் குறித்து ஆச்சரியப்பட மாட்டார்கள்?

சூரிய உதயமும் அஸ்தமும் ஓர் அழகிய காலமாகும். எந்த உயிரும் இந்தச் சம்பவங்களைக் கண்டு களிப்படையாமலிரா. எல்லா உயிர்க்கும் உண்டாகும் குதூகலத்தை, ஆதிவேத மனிதன், இந்தக் காயத்ரி ஜபமாக உச்சரித்து வந்தான்.

இவன் உச்சரித்து வந்தது போலவே, இன்றைக்கும் சந்டா தீவுகளில் (Sunda Islands) வசிக்கும் குரங்குகளும், சூர்யோதத்தைக் கண்டு கை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றன. சந்தியா வந்தனமென்பதே, சந்திக் காலத்தில், அதாவது காலை மாலையில், செய்யும் வந்தனம் என்று பொருள்.

சந்டா தீவு குரங்கு 

இந்த வந்தனத்தையே கோழிகளும், பறவைகளும், குரங்குகளும் சூரியனைக் கண்டவுடன் தத்தம் கூச்சல்களால் குறிப்பிடுகின்றன. தங்களுக்குள் எழும் ஓர் குதூகலத்தை அதாவது சந்தோஷத்தைக் கூச்சல் மூலமாகத் தெரியப்படுத்துகின்றன. 

அதுபோலவே வேத காலத்து மனிதரும் சந்திக் காலங்களில் சூரியனைக் கண்டதும், ஓர்வித சந்தோஷத்தைக் குறிக்கச் சந்தியா வந்தனம் எனும் கூச்சலையே இன்றைக்கும் இரு பிறப்பாளர்களெனும் வேதியர், காலையிலும், மாலையிலும் சூரியன் பக்கம் திரும்பிச் செய்கின்றனர். சந்தியா வந்தனத்தின் ஆரம்பம் (Origin)  இவ்விதமிருக்க, தற்கால வேதியர்கள் இந்தச் சாதாரண குதூகலக் குறிப்பை (Mysterious words) மறைவான சொற்களென்றும், பிராமணர்களுக்குத்தான் இவை உரித்தென்றும் சொல்லித் திரிகின்றார்கள். மலையத் தீவுகளில் (Malay Islands) இந்த அந்தணர்கள் போய்ப் பார்ப்பார்களாகில், குரங்குகளும், “சந்தியா வந்தனத்தைக் கை கொட்டிக் குறிப்பிடுகின்றதைக் காணலாம்.

ஆனால் குரங்குகளுக்குக் கபடமென்பதும் கூடாதென்பதும், தனது சொத்தென்பதும், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதும், பார்ப்பான், பறையன் என்பதும் தெரியாதாகையால், அவைகள் சத்தமிடுவதில் ஒன்றும் ரகசியமில்லை. மனிதனோ, தான் பேச ஆரம்பித்ததும், மோசம், வஞ்சனை, மேல் கீழ், உயர்வு, தாழ்வு என்று தனக்குள் வேற்றுமைகளை உண்டாக்கிக் கொண்டு, “சந்தியா வந்தனம்” பிராமணன்தான் சொல்ல வேண்டும், மற்ற பாமர மக்கள் சொல்லும் நாவைத் துண்டிக்கப்படுமென்று சட்டதிட்டங்களை உண்டாக்கிக்கொண்டு தனது சீவனத்தை நடத்தி வருகின்றான்.  உபாயத்திற்காகவே மறைத்து வைக்கப்பட்டு மந்திரங்களாகப் பாவிக்கப்படுகின்றன. இதுதான் மந்திரங்களின் ஆதாரம். மறை பொருள் கொண்டவை எல்லாம் மந்திரங்களே!

மாட்டுச் சாணத்தைச் சாம்பலான பிறகு “மந்திரமென்பது நீறு, வானவர் தொழுவது நீறு,” என்று பாடும் ஊரில், சாதாரண சொற்கள் மந்திரங்களாக ஏன் பாவிக்கப்படா? மந்திரங்களின் உற்சவம் (Origin) இதுவே.

சாதாரணக் கல்லும், செம்பும், களி மண்ணும் விக்கிரக வஸ்துகளாக மாறும்போது, எப்படி மகத்துவமும் பயபக்தியும் பெறுகின்றனவோ, அவ்விதமே சாதாரண சொற்கள் பேசும் திறமையாலும், தொனியாலும் ரகசியமாக உச்சரிப்பதாலும், மறைவாக வைக்கப்பட்டிருந்ததாலும், பாமர மக்களுக்கு ஓர்வித நம்பிக்கையை உண்டாக்குகின்றன. மந்திரங்களின் ஆதாரத்தையும் எதார்த்தத்தையும் பாகுபாடு (Analysis) செய்து பார்க்கையில் “தோலும் கோலுமாக”வே காணப்படும்".

குடியரசு
7.8.1932
பக்கம் 3-18

சிங்காரவேலர் கட்டுரைகள் நூலிலிருந்து. 

மூடநம்பிக்கைகள் அதிகரித்து வரும் இன்றைய நவீன காலத்திலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் பெரிதும் துணை புரியும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

மந்திரத்தால் மாங்காய் விழுமா?

“பண்டைய காலத்தில் இருந்து வந்த அறியாமையால்தான், பாம்புக் கடிக்கு மந்திரம் ஒரு முறையென்று நாளதுவரை நமது பாமர மக்கள் எண்ணி வருவது, ஆதிகால முதல் எந்தெந்த நோய்களுக்குக் காரணங்கள் தெரியவில்லையோ, அந்தந்த நோய்களுக்கு மந்திரங்கள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.



மந்திரமென்றால் என்ன? மந்திரம் என்பது சில சொற்களே! எல்லா சொற்களும் மந்திரத்தில் அடங்கியுள்ளன. இந்தச் சொற்களுக்கு மாத்திரம், இவ்வளவு செல்வாக்கு வந்ததேன்? இதுவும் நம்பிக்கையே (Faith). நம்பிக்கை இல்லாத சொற்கள் வெறுஞ்சொல்லென அறிக.

அந்த சொற்களில் ஏதோ மகத்துவம் உள்ளதாக எண்ண வந்தவுடன், அவைகளுக்கு மனிதர் உள்ளத்தில் நிவேதனம்  (Sacredness) அடைகின்றன. இதுதான் மந்திரச் சொற்களுக்கும், மற்ற சொற்களுக்கும் உள்ள வித்தியாசம்.

மந்திரத்தில் ஆவது ஒன்றுமில்லை. “மந்திரத்தால் மாங்காய் விழுமா?” என்ற நாத்திகர் பாடமும் இதுவே. அறியாமையால், பாமர மக்கள் மந்திரம், மந்திரம் என்று மயங்குகின்றார்கள். அறியாமையை வளர்க்கவே மந்திரங்கள் கற்பிக்கப்படுகின்றன, இந்தப் பித்தலாட்டம், வேதத்திலேயே உண்டு".

"ஓம்” எனும் சொல்லுக்கு மகத்துவம் உண்டா?

“ஓம்” என்ற சொல், மற்ற சொற்களைப் போன்ற சொல்லேயொழிய வேறில்லை. “வா” “போ” என்ற சொற்களைவிட “ஓம்” என்பதற்கு விசேடம் ஒன்றுமில்லை. ஆனால், அந்தச் சொல்லுக்கு மாத்திரம் ஏன் அவ்வளவு விசேடங்கள் வேத நூல்களில் கொடுத்துள்ளார்? ஏனெனில், பாமர மக்களை மிரட்டுவதற்கென அறிக.

“ஆம்” “ஓம்” சாதாரண சொற்களே. ஆனால், அதனை உச்சரிப்பதிலே ஒரு பயத்தை உண்டாக்கும்படி உச்சரிக்கின்றார்கள். சொற்களால் பயத்தை உண்டாக்கலாம். உரத்துச் சொல்வதாலும் அல்லது கேட்கப்படாமல் வாய்க்குள்ளேயே சொல்வதாலும், பயத்தை உண்டாக்கலாம். எல்லா மகத்துவமும் பயத்தால் உண்டானவைகளே. 

இந்தச் சொற்களை உச்சரிக்கும் விதங்களால் பாமர மக்களைப் பயப்படும்படி செய்வதால், அதிலிருந்து எல்லா நம்பிக்கையும், மகத்துவமும் உண்டாகின்றன”

அடுத்து, சந்தியா வந்தனம் பற்றி பார்ப்போம். 

குடியரசு
7.8.1932
பக்கம் 3-18

சிங்காரவேலர் கட்டுரைகள் நூலிலிருந்து. 

மூடநம்பிக்கைகள் அதிகரித்து வரும் இன்றைய நவீன காலத்திலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் பெரிதும் துணை புரியும்.

தொடரும்

ஊரான்

Wednesday, November 5, 2025

பஞ்சணைப் பிரச்சாரம் (Arm Chair Criticism)!

"சுயமரியாதை இயக்கம் சட்டசபைகளைக் கைப்பற்றாமல், அதாவது பஞ்சணையில் படுத்துக் கொண்டு மதங்களையும், பழக்கவழக்கங்களையும், மதஸ்தாபனங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தால் போதுமா?" (Arm Chair Criticism)

என்று கேள்வி எழுப்பி,

"உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?"

என்று வினவி,

"இந்துமதச் சபையார் சட்டசபையில் புகுந்து கொண்டு, சுயமரியாதைப் பிரச்சாரங்களைத் தடுக்க ஆரம்பித்தால் அவர்களை யார் தடுப்பது? நாஸ்திகக் கூட்டத்தைச் சட்டசபை மூலமாகத் தடை செய்தால் சபையில் யார் அதனை எதிர்த்துப் போர் புரிவது?”

என்று கேட்டதோடு,

“சமதர்மம் ஆகாய மூலமாவா_ வருமாமென்று கேட்கின்றோம்?”

“புரட்சிக்காரர்கள் சட்டசபைகளில் போகக் கூடாதென்ற மனப்பான்மையைக் குழந்தைகள் வியாதி என்றார் தோழர் லெனின்” 

என சுயமரியாதை இயக்கம் மேற்கொள்ளவேண்டிய பாதை குறித்து ‘ஈரோட்டுத் திட்டம் “புரட்சி”!’ (16) என்ற தலைப்பில் “புரட்சி” இதழில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம் அன்று சமதர்மக் கொள்கையையும் பேசியது.


புரட்சி
பக்கம் 5-17
24.12.1933

சான்று: சிங்காரவேலர் கட்டுரைகள், NCBH வெளியீடு,
***
ஆங்கிலேயரின் அடிமை இந்தியாவில், சனாதனிகள் மட்டுமே படித்துவிட்டு, சென்னை மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது, மேற்கண்ட வழிகாட்டுதல் எந்த அளவுக்கு சாலப் பொருந்துமோ, அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு செய்துவரும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது "புரட்சி" இதழின் வழிகாட்டுதல் அப்படியே இன்றும் நூறு சதவீதம் பொருந்துவதாகத்தான் நான் கருதுகிறேன்?

அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு சனாதனிகள் மேற்கொள்ளும் இன்றைய தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை  (SIR) ஒன்று போதாதா?

இதையெல்லாம் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் சட்டசபைக்கு வெளியில் இருந்து கொண்டு கூக்குரலிடுவதைப் பார்க்கும் போது, “பஞ்சணையில் படுத்துக்கொண்டு” என்று அன்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அதிமுக போன்ற அடிமைகளும், விஜய் போன்ற தற்குறிகளும் அதிகாரத்தில் இருப்பதாலோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதாலோ மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?

ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை எதிர்ப்பவர்கள், போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் பலமற்றிருப்பது அல்லது ஒருசிலர் பிழைப்புவாதிகளாக இருப்பது என்ற இன்றைய சூழலில், அரசியலில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் பலமற்று இருப்பது அல்லது தேர்தல்களைப் புறக்கணிப்பது என்பதைப் பார்க்கும் போது,

“உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?" என்று,

அன்று சுயமரியாதைக்காரர்களை நோக்கி கேட்டதைத்தான், மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட்களை நோக்கி இன்று கேட்கத் தோன்றுகிறது.

காலத்திற்கேற்ப செயல் திட்டம் வகுத்துச் செயல்படுபவர்களே தங்களைக் காத்துக் கொள்வதோடு, சனாதனிகளிடமிருந்து மக்களையும் காக்க முடியும்!

தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பது, ஒருசில மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகளுக்கு நெருடலாகத் தோன்றலாம். அத்தகையோர், ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காகத் தேர்தல் களம் காணும் கட்சிகளை, கூட்டணிகளை (தற்போதைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி) நேரடியாக ஆதரிப்பதோடு, குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலுக்கு எதிரான
பஞ்சணைப் பிரச்சாரத்தையாவது (Arm Chair Criticism) 
மேற்கொள்ள வேண்டும்! தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத இன்றைய சுயமரியாதைக்காரர்களுக்கும், தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இது பொருந்தும்.

ஊரான்

Saturday, November 1, 2025

சமதர்மமும் பொதுவுடமையும் மலர முட்டுக்கட்டை போடுவது யார்?

இந்தியப் பொதுவுடமையர்கள் சரியில்லை, அவர்கள் பார்ப்பனியத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை, எதிர்த்துப் போராடவில்லை, பார்ப்பனியத்தை ஒழிக்காமல் அதாவது சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கிய இந்து மதத்தை ஒழிக்காமல் பொதுவுடமை சாத்தியமில்லை என்று சுயமரியாதை பேசுவோரும்,

சுயமரியாதைக்காரர்கள் இந்திய விடுதலையை ஆதரிப்பதற்குப் பதிலாக, ஆங்கிலேய அடிமை ஆட்சியை ஆதரித்தவர்கள், இவர்கள் பணக்காரர்களின் பாதுகாவலர்கள், சாதியும் மதமும் சமூக உற்பத்தி முறையின் மேல் கட்டுமானமாக இருப்பதால், இந்த மேல் கட்டுமானத்திற்கு அடிப்படையாக உள்ள அடித்தளத்தை மாற்றி அமைக்காமல் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியாது என்று பொதுவுடமை பேசுவோரும் இரு முகாம்களாக நின்று,



ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டைகளை சுமத்தி அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் சேற்றைவாரி இறைத்துக் கொள்கின்றனர்.

சாதியை ஒழிக்காமல் பொதுவுடமை சாத்தியமில்லை, அடித்தளத்தை மாற்றி அமைக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்று இரு தரப்பினரும் எழுதி வருகின்றனர். 

பொதுவுடமைத் தலைவர்களையும் இயக்கங்களையும் சுயமரியாதைக்காரர்கள் எள்ளி நகையாடுவதையும், சுயமரியாதைத் தலைவர்களையும் இயக்கங்களையும் பொதுவுடமையர்கள் எள்ளி நகையாடுவதையும் இருதரப்புமே குதூகலத்தோடு செய்து வருகின்றனர். 

கடந்த காலங்களில், இருதரப்பிலும், இயக்கப் போக்கில் கொள்கைப் போதாமையும், நடைமுறையில் போதியத் தெளிவும் இல்லாமல்கூட இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு இப்போதைக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மாறாக ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போட்டு வருவது வேதனை அளிக்கிறது. 

‘மார்க்சிய நெறியினராக இல்லாத பெரியாரே’ என்று பெரியாரையும், சுயமரியாதை இயக்கத்தையும் மார்க்சியத்துக்கு எதிராக நிறுத்த சுயமரியாதைக்காரர்களே முயற்சிப்பது பரிதாபத்திற்குரியது. இவர்களுக்கு பொதுவுடமை பிடிக்காமல் இருக்கலாம், அதற்காக பெரியாரை ஏன் இவர்கள் துணைக்கழைக்க வேண்டும்?

தங்களை அடிமைப்படுத்தும் பார்ப்பனியத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற நிலையில், அந்த மக்கள் வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலை பெற யோக்கியத்தை உடையவர்கள் என்று எந்த மூடனாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பி, 

“இவற்றையெல்லாம் பார்த்துதான் இந்த நாட்டுக்கு வேண்டியது சமதர்மமும் பொதுவுடமைத் தத்துவமும் என்ற முடிவுக்கு வந்தேமேயொழிய வேறில்லை. பார்ப்பனர் அல்லாத மக்கள் அறிவோடு, மானத்தோடு நடந்து கொள்ள யோக்கியதை உடையவர்கள் என்றால், பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதில் அர்த்தமுண்டு; அப்படிக்கில்லாமல் பார்ப்பனீயத்தை அழித்து பார்ப்பன அடிமை கையில் ஆதிக்கத்தைக் கொடுப்பதற்குப் பாடுபடுவதென்றால், அது கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொரிந்து கொள்வதேயாகும். என்றாலும் எல்லாக் காரியத்தையும் ஏககாலத்தில் செய்கின்ற முயற்சியில்தான் நாம் இருக்கிறோமேயொழிய அவற்றை அடியுடன் விட்டுவிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று 22.10.1933 இல் குடியரசு எழுதுகிறது. (பக்கம் 11, 12, 13).

பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டி சமதர்மத்தை நிறுவுவதையும், சுரண்டலை ஒழித்துக் கட்டி பொதுவுடமை நிறுவுவதையும் ஏககாலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதைத்தான் சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது. 

பொதுவுடமையைப் படைப்பதற்காக போராடும் அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் அதிகாரம் கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிரானப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்பதைப் பொதுவுடமையர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்பத் தங்களுடைய செயல் திட்டத்தை வகுத்துக் களமாடி வருகின்றனர். அதேபோல பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடிவரும் சுயமரியாதைக்காரர்களும், இன்று நாளுக்கு நாள் பெருகி வரும் சுரண்டல் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் களமாடி ஒரு பொதுவுடமைச் சமூகத்தைப் படைக்க வேண்டும் என்கிற அவசியத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் திட்டம் வகுத்து போராட வேண்டும் என்பதைத்தான் பொதுவுடமையர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மார்க்சையும், பெரியாரையும் எதிரெதிராக நிறுத்தும் போக்கு சமதர்மத்திற்கும், பொதுவுடமைக்கும் போடும் முட்டுக்கட்டை!

"பார்ப்பானை ஒழித்து பணக்காரன் கையில் ஆதிக்கத்தை வாங்கிக் கொடுக்க சுயமரியாதை இயக்கம் இருக்கிறது என்று சொல்லுவதானால் கஷ்டப்படும் மனித சமூகத்துக்கு இவ்வியக்கத்தினால் எவ்விதப் பலனும் ஏற்படாதென்பதே நமது அபிப்பிராயம்" (மேற்கண்ட குடியரசு கட்டுரை) 

இதுதான் எனது அபிப்பிராயமும்கூட!

ஊரான்

Friday, October 10, 2025

நோபல் பரிசு: நாய்களுக்குப் போடும் எலும்புத் துண்டா?

வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் நடுவில் கரீபியன் தீவுகளை ஒட்டி, தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடுதான் வெனிசுலா.  சோசலிசத்தை ஏற்றுக் கொண்ட  'ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி'யைச் சார்ந்த ஹ்யூகோ சாவேஸ் தலைமையில் 1998 இல் இடதுசாரி அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்றைய  நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக் காலம் வரை  ஐக்கிய சோசலிஸ்ட் கட்சித் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்கு, தனது சிஐஏ உளவுத் துறை மூலம் அமெரிக்கா எண்ணற்ற சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. 

ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்தில், பெரிய தனியார் நிறுவனங்கள் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டன. மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், வெனிசுலா அரசாங்கம் பிடல் காஸ்ட்ரோவின் கியூபா நாட்டு இடதுசாரி அரசோடு நட்புறவு கொண்டிருந்தது.


வெனிசுலாவில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களால் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இடதுசாரிக் கருத்துக்கள் பற்றிப் படர்ந்தன. இடதுசாரியான டேனியல் ஓர்ட்டேகா தலைமையில், நிக்கராகுவா நாட்டில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இடதுசாரி அரசியல், தனது அடிவயிற்றையே கலக்குவதாக அமெரிக்கா அஞ்சி நடுங்கியது.

சோசலிசத்தைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளையும், வெனிசுலா நாட்டு  இடதுசாரி அரசாங்கத்தையும் அமெரிக்கா சும்மா விட்டுவிடுமா? 

வெனிசுலாவில் சர்வாதிகாரம் கோலோச்சுவதாகக் கூக்குரலிட்டது. வெனிசுலா நாட்டுக்கு எதிராக எண்ணற்ற பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி வெனிசுலாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது.
காரணம் மிகவும் எளிமையானதுதான் அமெரிக்காவுக்கு இடதுசாரிகளைப் பிடிக்காது; சோசலிசம், கம்யூனிசம் பிடிக்காது. 
***
ஜனநாயகம் எப்பொழுதும் பொதுவானதாக இருக்க முடியாது.

ஜனநாயகம் யாருக்கானது என்பதுதான் முக்கியமானது. அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் பேசும் ஜனநாயகம் முதலாளிகளுக்கானது. சோசலிசத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லது நாடுகள் பேசும் ஜனநாயகம் உழைக்கும் மக்களுக்கானது. 

முதலாளிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது, இவர்களது ஆட்சிக்கு எதிராகப்  போராடும் மக்களைக் கட்டுப்படுத்துவார்கள். அதேபோல்,  இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது இவர்களது ஆட்சிக்கு எதிராகப் போராடும் முதலாளிகளைக் கட்டுப்படுத்துவார்கள்.

சொத்துடமையும், சுரண்டலும் ஒழிக்கப்பட்டு கம்யூனிச சமூகம் உருவாகும்போதுதான், அனைவருக்குமான ஜனநாயகம் இருக்கும். அதுவரை ஜனநாயகம் சார்புத் தன்மை கொண்டதுதான்.

இத்தகையப் புரிதலில் இருந்துதான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோவைப் பார்க்க வேண்டும்.

சர்வாதிகாரத்துக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் வெனிசுலாவின் ஐக்கிய சோஷலிசக் கட்சி ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்கு ஏவிவிடப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ என்பவருக்குத்தான், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவரது போராட்டம் சர்வாதிகாரத்திற்கு எதிரானதோ அல்லது ஜனநாயகத்திற்கானதோ அல்ல. மாறாக, இது வெனிசுலா நாட்டு முதலாளிகளின் நலனுக்கானது, அமெரிக்காவின் நலனைப் பாதுகாப்பதற்கானது. ஒரே வரியில் சொல்லப்போனால், இவரது போராட்டம் இடதுசாரிகளுக்கு எதிரானது.

தனக்காகக் குறைக்கும் நாய்களுக்கு, முதலாளிகள் எலும்புத் துண்டு போடுவது இயல்புதானே!

ஊரான்

Monday, October 6, 2025

மரண பீதியில் திருவண்ணாமலை கிரிவலம்!

2021 ஆம் ஆண்டுவரை கார்த்திகை தீபத்தன்று மட்டும்தான் திருவண்ணாமலையில் கூட்டத்தைப் பார்க்க முடியும். மற்றபடி அது ஒரு அமைதியான நகரம். 

ஆனால், இன்று ஆந்திராவிலிருந்தும் தெலுங்கானாவிலிருந்தும் வரும் பக்தர்களால், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் தொடர்வண்டி நிலையம், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப்பாதைகளில்  கூட்டம் நிரம்பி வழிகிறது. 


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக சொல்லப்படுகிறது. 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையை சுற்றிவர சுமார் 11 மணி நேரம் ஆகிறதாம்.

அண்ணாமலையார் கோவில் அருகில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு 40 அடி அகலம் இருந்த கிரிவலப் பாதை 20 அடி அகலமாக குறைக்கப்பட்டதால், எந்த நேரத்திலும் கூட்ட நெரிசலில் (stampede) பக்தர்கள் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திருவண்ணாமலையை இணைக்கும் ஒன்பது முக்கியச் சாலைகளில் 25க்கும் மேற்பட்ட தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களில், பௌர்ணமி நாட்களில் 40 சதவீதம் தமிழர்கள், 60 சதவீதம் தெலுங்கர்கள், இதுவே வார இறுதி நாட்களில் 95 சதவீதம் தெலுங்கர்கள் என சொல்லப்படுகிறது. 

அண்ணாமலையை அருணாச்சலேஸ்வரராக்கி, இந்த அருணாச்சலேஸ்வரர் தெலுங்கு மக்களின் குலதெய்வம் எனவும், தெலுங்கு மக்கள் கண்டிப்பாக இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் எனவும்,  சகாந்தி கோட்டீஸ்வர ராவ் என்கிற தெலுங்கு ஆன்மீகச் சொற்பொழிவாளர் தொடர்ந்து youtube சேனல்களில் செய்து வரும் பரப்புரையால்தான், தெலுங்கர்கள் திருவண்ணாமலையை நோக்கி அதிக அளவில் படையெடுப்பதாகக் கூறப்படுகிறது. 

“அருணாச்சலேஸ்வரர் எங்க சாமி” என்று தெலுங்கர்கள் வெளிப்படையாகப் பேசுவதையும் பார்க்க முடிகிறது. திருவண்ணாமலை ஊர் பெயரையே “அருணாச்சலம்” என தமிழ்நாடு அரசுப் பேருந்துகளிலேயே பெயர் மாற்றம் செய்கிற அளவுக்குச் சென்று, அது சர்ச்சையானதும் நாம் அறிந்ததே. 

திரைப்படக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு நடிகனைக் காண கூடும் கூட்டத்திற்கும், பக்திக்கு ஆட்பட்டு பரவசத்தோடு கோவில்களில் கூடும் கூட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது. இரண்டிற்கும் பொதுவானது தரிசனம். தரிசனத்திற்காக முண்டியடிக்கும் பொழுது, கூட்டநெரிசலால் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க முடியாது. 

ஆண்டில் ஒரு நாள் என்றால் வெளியூர் பக்தர்களால் ஏற்படும் இன்னல்களை திருவண்ணாமலை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், இதுவே ஆண்டு முழுக்க என்றால்  யாரால்தான் சகித்துக் கொள்ள முடியும்?

காவல் துறையைச் சேர்ந்த இரண்டு கயவர்கள், ஆந்திராவிலிருந்து காய்கறி ஏற்றி வந்த இளம் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால், திருவண்ணாமலை ஏற்கனவே அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. 

தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இன்றில்லை என்றாலும் ஒரு நாள், திருவண்ணாமலை பிணக்காடாக மாறுவதை அந்த சிவனே நினைத்தாலும்  தடுக்க முடியாது! 

"மதச் சடங்குகள் உலகெங்கும் ஊதாரித்தனத்துடன் செய்யப்படுகின்றன; அவற்றால் காலமும், பொருளும் விரயமாகின்றன; அவை வலியையும்; வறுமையையும் உண்டாக்குகின்றன" என்று சொன்ன அறிஞன் மரேக் கோன் கூற்றோடு, "அவை மரணங்களையும் உண்டாக்கும்" என்பதையும் சேர்க்க வேண்டி வரலாம். எச்சரிக்கை!

ஊரான்

செய்தி ஆதாரம்: The Indian express, 06.10.2025

தொடர்புடைய பதிவுகள்

Sunday, October 5, 2025

யார் இந்த "ஊரான் ஆதி"?

முகநூல் தொடங்கும் போது, "ஊரான்" என்று மட்டும்தான் உள்ளீடு செய்தேன். ஆனால், "ஆதி" என்ற சொல்லை சேர்த்தபோதுதான் முகநூல் ஏற்றுக் கொண்டது. அதனால், நான் "ஊரான் ஆதி" ஆனேன். 

பொன்.சேகர் 

Sekar P என்ற பெயரில் உள்ள முகநூல் கணக்கும் என்னுடையதுதான்.

"ஊரான்" மற்றும்  "எதிர்த்து நில்" என இரு  வலைப்பூக்களை (blog) நடத்தி வருகிறேன்.‌ 

ஊரான் 

பள்ளிப்பருவ காலம்முதல் கடவுள் மறுப்பாளனாக, பகுத்தறிவாளனாக வளர்ந்த நான் பின்நாளில், மார்க்சிய-லெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு, 1980 களில் தொடங்கி இருபதாண்டு காலம் "மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்" தலைமைக் குழு உறுப்பினராகவும், இருபதாண்டு காலம் களப்போராளியாகவும் "தமிழ்மணி" என்ற பெயரில் பாடாற்றியுள்ளேன். தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன். 

ஒன்றிய அரசு நிறுவனமான "பாரத மிகுமின் நிறுவனத்தில்" (BHEL) பணியாற்றிய நான் எனது அரசியல் மற்றும் BHEL வாழ்க்கையில் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. இது குறித்து "இழிகுணம்" என்ற தலைப்பில், "எதிர்த்து நில்" வலைப்பூவில் விரிவான தொடர் ஒன்றை எழுதியுள்ளேன். அதன் தொகுப்பு "இழிகுணம்" என்ற தலைப்பில் அமேசானில் மென்நூலாகவும் கிடைக்கும்.
15 ஆண்டுகளாக நான் வைத்திருந்த "ஊரான் ஆதி" profile புகைப்படத்தையும், தேவை கருதி தற்போதைக்கு மாற்றி அமைத்துள்ளேன்.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!

ஊரான்

Wednesday, October 1, 2025

நம்பிக்கையில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர்கள்!

நண்பகல் 12 மணி. பொன்னை உருக்கும் புரட்டாசி வெயில். வெண்மேகங்கள் கதிரவனின் கதிர்களை ஓரளவுக்குத் தடுத்தாட்கொண்டதால் வெப்பம் அவ்வளவாகத் தெரியவில்லை. ஊருக்குப் புறப்பட ஆயத்தமாகி, ‘பர்சைப்’ பார்த்தேன். இரண்டு இருபது ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்தன. ‘திருப்பத்தூர் நகரப் பேருந்து நிலையம்தானே செல்கிறோம்; 'ஏடிஎம்' இல் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையோடு ஒரு இருபது ரூபாய் தாளைக் கொடுத்து 'ஷேர் ஆட்டோவில்' பேருந்து நிலையம் சென்றடைந்தேன்.

ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் மாவட்டத் தலைநகரின் பேருந்து நிலையம் அது. முதுகில் ஒரு 'ஏர்பேக்' தொங்க, கையில் ஒரு கட்டை பை சுமையுடன் 'ஏடிஎம்'ஐத் தேடினேன்; ஏமாற்றம்தான் மிஞ்சியது. விசாரித்தபோது வெளியில் உள்ளது என்றார்கள். 


கட்டை பையின் சுமை என்னை ஒரு பக்கம் இழுக்க, அதை சமாளித்துக் கொண்டு, இருநூறு மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு 'ஏடிஎம்' இல் உள்ளே நுழைந்த போது, ஒரு சிலர் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். வெளியே வந்தவர்கள், 'பணம் இல்லை' எனச் சொல்லியிருந்தால் உள்ளே சென்றிருக்கவே மாட்டேன். இத்தகையப் பண்புதான் இன்று இற்று வருகிறதே!

வேறு 'ஏடிஎம்' ஐ தேடிச் செல்ல வேண்டும் என்றால், எந்தப் பக்கம் சென்றாலும் குறைந்தது அரை கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். கையில் உள்ள சுமையையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது என்பதால், அருகில் இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று, 'ஃபோன்பே' மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில், அங்கு வந்து நின்ற ஓரிரு அரசுப் பேருந்துகளில் ‘'ஃபோன்பே' வசதி உண்டா’ எனக் கேட்டேன். ‘நம்பிக்கைதானே சார் வாழ்க்கை!’ என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம்தானே? நான் மட்டும் நம்பிக்கை கொள்ளக்கூடாதா என்ன?

இதற்கிடையில், மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து 'ஃபோன்பே' வசதி உள்ள எனது வங்கிக் கணக்கிற்கு பண மாற்றம் செய்து விட்டு, 'ஃபோன்பே' வசதி உள்ள ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஆனால், பணம் மட்டும் எனது கணக்கிற்கு இன்னமும் மாறவில்லை. ‘ஒரு ஐந்து நிமிடம்’ என நடத்துநரிடம் சொல்லிவிட்டு, பணம் வந்து விட்டதா எனத் திரும்பத் திரும்ப கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

நான் அனுப்பிய பணம் மாறும் என்று இனியும் காத்திருப்பது உசிதமல்ல என்பதனால், உறவினருக்குத் தெரிவிக்க, அவர் :ஜிபே' மூலம் பணம் அனுப்ப, அதுவும் உடனடியாக மாறவில்லை. நடத்துநர் என்னைப் பார்க்க, பணம் வந்து விட்டதா என நான் கைப்பேசியைப் பார்க்க, அதற்குள் ஜோலார்பேட்டையும் வந்துவிட்டது. 

‘வங்கிக்குப் பணம் மாறினால் சமாளித்துக் கொள்ளலாம், இல்லையென்றால் அடுத்த ஊரில் இறங்கிவிடலாம்’ என்ற முடிவோடு நடத்துநர் ஏதும் சொல்வதற்கு முன்பாகவே, நானே முந்திக்கொண்டு, ‘வாணியம்பாடிக்கு எவ்வளவு?’ என்று கேட்டேன். 20 என்றார். கையில் இருந்த 20 ரூபாயைக் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்டேன். 

'பர்சும்' காலி, 'ஃபோன்பே'வும் காலி என்றால், யாராக இருந்தாலும் படபடப்பு ஏற்படத்தானே செய்யும். நான் இங்கே நம்பிக்கை வைத்தது 'டிஜிட்டல்' பணப் பரிமாற்றத்தின் மீது. அது எனது தரப்பு நம்பிக்கைதானே ஒழிய, அதற்கு, கைப்பேசி 'சிக்னலும்', இரு வங்கிகளின் 'சர்வர்களும்' சரியாக இருக்க வேண்டும் அல்லவா? 

கைப்பேசி 'சிக்கனல்' பலவீனமாக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், 'சர்வர்களின்' நிலையை நான் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இங்கே எனது நம்பிக்கை ஈடேறவேண்டுமானால், எதன் மீது நான் நம்பிக்கை வைக்கிறேனோ, அதைப்பற்றி நான் அறிந்திருக்க வேண்டும். இந்தப் புரிதல் இல்லை என்றால், ‘நம்பிக்கை நாசமாப் போச்சு!’ என விரக்தியில்தான் விழவேண்டிவரும். 

நான் அவசரமாகப் போக வேண்டியத் தேவை எதுவும் இல்லை. ‘பணம் வங்கிக்கு மாறினால் பயணத்தைத் தொடருவோம், இல்லை என்றால் வாணியம்பாடியில் இறங்கி, பணம் மாறும்வரை காத்திருப்போம் அல்லது அங்கே, அருகில் ஏதாவது 'ஏடிஎம்' இருந்தால் பணம் எடுத்துக் கொண்டு பயணிப்போம்’ என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதால்  இதற்காக நான் சோர்ந்து விடவில்லை.
***
தேர்வுகளில் தேர்ச்சி பெற, படித்தபின் விரும்பிய வேலை கிடைக்க, அவசரத் தேவைக்குக் கடன் பெற, நிலம் வீடு என ஆசைப்படும் குறிப்பிட்ட சொத்துக்களை வாங்க, உறவுக்காரப் பெண்ணை மணம் முடிக்க, பருவம் பொய்க்காமல் மழை பொழிய, நல்ல விளைச்சல் கிடைக்க, செய்யும் தொழிலில் இலாபம் ஈட்ட என இவற்றையெல்லாம் பெறுவதற்காக, அடைவதற்காக பிறர் மீதும், பிறவற்றின் மீதும் நம்பிக்கை கொள்ளாத மனிதன் இருக்க முடியாதுதானே?

நமது நம்பிக்கைகள் ஈடேற வேண்டுமானால், நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது; மாறாக, நாம் எதை, எவற்றை, யாரை நம்புகிறோமோ, அந்தத் தரப்பின் நிலையையும் புரிந்து கொண்டால், ‘நமது நம்பிக்கைகள் வீண் போய்விட்டன’ என்று துவண்டு விடாமல் அடுத்தடுத்த செயலுக்கு ஆயத்தமாவோம். 

போதிய காரணம் இன்றி, ஒருவர் ஒன்றை நம்புவதை, பொதுவாகப் பார்க்கும் போது, அது ‘நம்பிக்கையின் இயல்பாகவே’ உள்ளது. இந்த இயல்பு காரணமாகத்தான், பலரும் கடவுள் உள்ளிட்ட சிலவற்றின் மீது நம்பிக்கை (faith) கொள்கின்றனர். ஆனால், ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதன்மீது வைக்கும் நம்பிக்கை (belief) என்பதே சரியான நம்பிக்கையாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன். மேலும், ஒன்றைப் பற்றிய விவரங்கள் தெரியத் தெரிய, அதன்கூடவே, அதன் மீதான நம்பிக்கையும் மாறவே செய்யும்.

இருதரப்பு நம்பிக்கைகளும் ஒன்றுபடும்போது வேண்டுமானால் நம்பிக்கைகள் ஈடேறலாம். மற்றொரு தரப்பு என்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே, நான் நம்புவதால் மட்டுமே எனது நம்பிக்கை ஈடேறும் என்று எதிர்பார்ப்பது கானல் நீரே!

நம்பிக்கை குறித்த இத்தகையப் புரிதல் இல்லாததால், ‘ரொம்ப நம்பினேம்பா, ஏமாத்திட்டாம்பா! துரோகம் பண்ணிட்டாம்பா!’ என்று பேசுவோர் பலரையும் நம்மால் பார்க்க முடிகிறது. இவர்கள், எதை நம்புகிறார்களோ அதைப் பற்றிய அறியாமையே இதற்குக் காரணம். இத்தகையோரை, ‘நம்பிக்கையை மட்டுமே நம்புபவர்கள்’ (believing the belief) எனக் கருதலாம். நடிகர் விஜய் மீதான நம்பிக்கையும் இத்தகையதே! இத்தகைய நம்பிக்கைகளில் எல்லாம் கடைசியில் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சி நிற்கும். 
***
பெங்களூர் புறவழிச்சாலை மூங்கில் 'சர்க்கிள்' நெருங்கியபோது உறவினர் அனுப்பிய பணம் வந்து விட்டதை உறுதி செய்து கொண்டேன். ஆனால், நான் அனுப்பிய பணம் மட்டும் இன்னும் மாறவில்லை. 'ஃபோன்பே' மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு, அதே பேருந்தில் வேலூருக்குப் பயணமானேன். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன், உள்ளேயே இருந்த ஒரு 'ஏடிஎம்’ இல் 'கார்டைச்' சொருகி எனக்குத் தேவையான அளவு 100 ரூபாய் தாள்களுடன் பணத்தைப் எடுத்துக்கொண்டு இல்லம் இருக்கும் வாலாஜா நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஊரான்
29.09.2025

Wednesday, September 24, 2025

மைசூர்பாகில் மிதக்கும் கோவை!

ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு, கோவையில் ஸ்வீட் விலை மளமளவென சரிந்துவிட்டதால், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட கடைகளில் ஸ்வீட் வாங்க மக்கள் முண்டியடிப்பதால், அங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

விலை குறைவு என்பதால், மக்கள் மூன்று வேளையும் ஸ்வீட்டை மட்டுமே தின்பதால் காய்கறி, மளிகை சாமான், பழக்கடைகள் வெறிச்சோடி கிடப்பதாக வியாபாரிகள் ஒருபக்கம் கவலையடைந்துள்ளனராம்.

கோப்பு படம்

மைசூர்பாகை மூன்று வேலையும் தின்பதால், தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், மக்கள் நலனைவிட வியாபாரிகள் நலன் பெரிதல்ல என்பதால், அது பற்றிக் கவலைப்படாமல், எல்லோரும் ஸ்வீட் வாங்கித் தின்று, 'டாடி'க்கு நன்றி கூறி, இன்புற்றிருக்க வேண்டும் என  இனிப்பு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதாகவும் கோவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

விலை மலிவு என்பதால் ஒரு வாரத்துக்குத் தேவையான இனிப்புகளை மொத்தமாக வாங்கிச் செல்ல மக்கள் முயல்வதால், ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று கிலோவுக்கு மேல் தரக்கூடாது என ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு குடும்பத்திற்கு ஒருவர்தான் ஸ்வீட் வாங்க வர வேண்டும் என்றும், வரும் போது குடும்ப அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும், பிற மாவட்டங்களிலிருந்து கோவையை நோக்கி மக்கள் படையெடுப்பதால், மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்படுவதாகவும், மக்கள் கோவைக்கு எதற்காகச் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப அனுமதியைக் கட்டுப்படுத்துவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஸ்வீட் ஸ்டால்களில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்து, இனி 'அடுத்த முறையும் தாம்தான் சட்டமன்ற உறுப்பினர்' என்ற மகிழ்ச்சியில் வானதி திளைத்திருப்பதாகவும், தனது மகிழ்ச்சியை மக்களிடையே மைசூர்பாகுடன் பரிமாறிக்கொள்ளும் வேளையில், அதைத் தடுக்க திமுக அரசு சதி செய்வதாகவும் பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

எது எப்படியோ, ஜிஎஸ்டி குறைப்பால் கோவை மக்கள் இனிப்பில் மிதக்கிறார்கள். எனக்குகூட கோவை செல்ல ஆசை வந்துவிட்டது. கோவை செல்ல அனுமதி எங்கே வாங்க வேண்டும், வெளியூர் குடும்ப அட்டைகளுக்கு ஸ்வீட் கிடைக்குமா என்பதைத் தெரிந்தவர்கள் பகிர்ந்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன். 

ஊரான்

Wednesday, September 17, 2025

இந்தியா ஆன்மீக நாடா? நாத்திக நாடா?

கடவுள் இல்லை என்று கூறுபவன்தான் நாத்திகன் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவனும் நாத்திகனாக இருக்க முடியுமா என்று கேட்டால், ஆம் இருக்க முடியும் என்பதே பதில்.

வேதங்கள் பிழையற்றவை என்று நம்புகிறவன் எவனோ, வேதங்களின் மேலாண்மையை ஒப்புக் கொள்கிறவன் எவனோ அவன் மட்டுமே ஆத்திகன் என்கிறது இந்து மதத்தத்துவம். இவன்தான் சனாதனி என்று அறியப்படுபவன். மனுதர்ம சாஸ்திரமே இவனுக்கான உந்து சக்தி. 


இதற்கு நேர் மாறாக, எவன் ஒருவன் வேதங்களை மறுக்கிறானோ, வேதங்களை நிந்தனை செய்கிறானோ, அவனை நாத்திகன் என்கிறது இந்து மதத் தத்துவம்.

ஆகவே, இந்துமத வேதங்களை ஏற்றுக் கொள்ளாத சைவர்கள், பகுத்தறிவாளர்கள், பொதுவுடமைவாதிகள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைவரும் நாத்திகர்கள்தான். வேதங்களை ஏற்றுக் கொள்ளாத பட்டைபோட்ட பக்திமான்கூட நாத்திகனே; நமது தோழனே!

ஆத்திகமே இந்தியாவில் பலம் வாய்ந்தது என சனாதனவாதிகள் பெருமை பேசுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல; இந்தியாவில் பெருமான்மையினர் நாத்திகர்களே என்று நாமும் உரத்துக் குரல் எழுப்புவோம்!

தகவல் ஆதாரம்:  இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்: தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

ஊரான்

Thursday, August 21, 2025

மோடியும் முக்கால்னா பிரச்சனையும்!

"இந்தப் படத்தில் மோடிக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பூனாவை சேர்ந்த யோகேஷ் சித்தார்த்தாவும் அவரது மனைவி சுமீதா சித்தார்த்தாவும். அவர்களைப் பாராட்டுவதற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தாராம் மோடி. மோடியே தனது வீட்டிற்கு அழைக்கிற அளவுக்கு அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?


யோகேஷ் சித்தார்த்தா ஓய்வு பெற்ற இந்திய வான்படை அதிகாரியாம். அவர் பணியாற்றிய காலத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் நமது இராணுவ வீரர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்றார்களாம்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக  யோகேஷ் சித்தார்த்தா யோசித்தாராம். தனது மொத்த சேமிப்பு பணத்தையும் வைத்திருந்த எல்லா நகைகளையும் தனது சொந்த வீட்டையும் விற்று ரூபா 1.25 கோடி செலவில் சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை அமைத்தாராம். 

இதன் விளைவாக சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களாம். 

பிரச்சனைகளைப் பேசுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் பிரச்சனைகளை தீர்க்கிறார்கள். அரிய இந்தச் சேவையை செய்த சித்தார்த்தாவும் சுமீதா சித்தார்த்தாவும் அமைதியாக இருக்கிறார்களாம். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமாம்.
 
சல்யூட் டு யூ சார்!"

இப்படி ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 
மூளையை மொத்தமாகக் கழட்டி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஏதோ மிகப்பெரிய தியாகம் அர்ப்பணிப்பு போலத் தோன்றும். 

ஆனால் யு.கே.ஜி அளவுக்கு யோசித்துப் பாருங்கள்,  

"சல்யூட் அடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது பற்றி யோகேஷ் சித்தார்த்தாவுக்குத் தெரிந்தது, நாட்டை ஆளும் மோடிக்குத் தெரியாமல் போனது எப்படி? இலட்சம் கோடிகளை விழுங்கும் இராணுவத்தால் தனது வீரர்களைக் காக்க ஒரு ஒன்னேகால் கோடி ரூபாயை இதற்கு ஒதுக்க முடியாதா?"

இந்த முக்கால்னா பிரச்சினையைத் தீர்க்க வக்கற்ற மோடி, அவ்விருவரையும் அழைத்துப் பாராட்டுவது அவருக்கே வெட்கமாகத் தெரியவில்லையா?"
என்றுதானே கேட்கத் தோன்றும்!

ஊரான்

Sunday, August 17, 2025

கோனேரி கோனும் கேனக் கிறுக்கன்களும்!

'கோன்' ஐ கோனாராக்கி, 'கோனேரி கோன் கோட்டை'யை மீட்கக் கிளம்பி இருக்கிறான் ஒரு கேனன். இந்த கேனனுக்குப் பின்னால் விசில் அடித்துக் கொண்டே பலநூறு கேனன்கள்.

யார் சொன்னது தமிழ்நாடு முன்னேறி விட்டது என்று? இல்லை இல்லை இது வடநாடுதான் என்பதை தம்பிகள் மீண்டும் மீண்டும்  நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செஞ்சிக்கோட்டை 

செஞ்சிக்கோட்டையை கட்டியதோடு அதை ஆண்ட எத்தனையோ கோன்கள் இருக்கும்போது கோனேரி கோனை மட்டுமே இவன் தூக்கிக் கொண்டு திரிவது ஏன்? 

உலகப் பாரம்பரிய சின்னமாக அண்மைய யுனெஸ்கோ அங்கீகாரத்துடன் செஞ்சிக் கோட்டை அது பாட்டுக்குக் கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள், போகிறார்கள். 

இந்தக் கோட்டையை இவன் யாரிடமிருந்து மீட்கப் போகிறான்? வெள்ளைக்காரன் போய்விட்டான் என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் விடுதலை நாள் கொடியேறினார்கள். ஒருவேளை முகலாயர்களோ, ராஜபுத்திரர்களோ,
நாயக்கர்களோ, மராட்டியர்களோ, நவாபுகளோ மாறுவேடம் பூண்டு மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக கோட்டையைக் கைப்பற்றி விட்டார்களா என்ன? 

எவனாக இருந்தாலும் இருபது ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு எட்டு மணிக்குக் கோட்டைக்குள் நுழைந்தால் ஐந்து மணிக்கு வெளியே வந்து விட வேண்டும்.‌ தம்பிகள் வேண்டுமானால் ஐந்து மணிக்கு மேல் பாறைகளுக்கு பின்னால் கள்ளுண்டு கவிழ்ந்து கிடக்க வாய்ப்பு உண்டே ஒழிய ஒருவனும் கோட்டைக்குள் இருக்க முடியாது. இந்தத் தம்பிகளை கோட்டையில் இருந்து மீட்கக் குரல் கொடுத்தாலாவது அதில் ஒரு நியாயம் இருக்கும். 

கோனேரி கோனை மீட்பதற்கான உனது குரலும், அயோத்தியையும் மதுராவையும் வாரணாசியையும் திருப்பரங்குன்றத்தையும் மீட்பதற்காகக் குரல் எழுப்பும் உனது சகலபாடிகளின் குரலும் சங்கமிக்கும் இடம் நாக்பூர்தான் என்பதை தமிழர்கள் உணராத வரை தமிழ்நாடு வடநாடாய் மாறுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. 

ஊரான்